Tuesday, September 14, 2010


ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் / வேலூர் கோட்டை

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் தெய்வ தரிசனம் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், வேலூர்.


திருக்கோயில் அமைவிடம்:
ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வேலூர் கோட்டைக்குள்ளே அமைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலூர், சென்னையிலிருந்து 150 km தொலைவிலும், கோயில் நகரமான காஞ்சிபுரத்திலிருந்து 65 km தொலைவிலும், மலையே சிவனாகக் காட்சி தரும் திருவண்ணாமலையிலிருந்து 80 km தொலைவிலும் உள்ளது. இவ்வூரில் வாழும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பொதுவாக, நாம் திருப்பதியையும், திருவண்ணாமலையையும் வாழ்வில் ஒரு முறையாவது சென்று பார்த்து விட வேண்டும் என்று நினைப்போம். வேலூரில் இருப்பவர்களுக்கு இந்த ஆசை சுலபமாக நிறைவேறும். ஏனென்றால், வேலூரின் வடக்கே திருமலை திருப்பதி 110 km தொலைவிலும், வேலூரின் தெற்கே, திருவண்ணாமலை 80 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தலமூர்த்தி : ஜலகண்டேஸ்வரர்
தலநாயகி : அகிலாண்டேஸ்வரி
தலவிருட்சம் : வன்னி
தலதீர்த்தம் : கங்கா பாலாறு, தாமரை புஷ்கரணி

திருத்தல வரலாறு:
சப்த ரிஷிகளுள் ஒருவர் அத்திரி. இவர் இத்தலத்தில் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. லிங்கத்தை புற்று மூடி விட்டது. அப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த பொம்மி என்னும் சிற்றரசர் கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்ட லிங்கத்தை சுட்டிக்காட்டி திருக்கோயில் எழுப்பும்படி கூறினார். இந்த சிவலிங்கத்தின் கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனாலேயே ஜலகண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

அன்னியர் படையெடுப்பின் போது இந்த லிங்கத்தின் பாதுகாப்பு கருதி, லிங்கத்தை அருகில் உள்ள சத்துவாச்சாரி என்னும் ஊருக்கு எடுத்துச் சென்றனர். நெடுங்காலத்திற்கு இக்கோயில் தெய்வம் இல்லாத கோயிலாகவே இருந்தது. பின்னர் 1981-ம் வருடத்தில் அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியரின் பெரும் முயற்சியினால், லிங்கம் மீண்டும் ஜலகண்டேஸ்வரர் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சன்னதிகள்:
இக்கோயிலில், பிள்ளையார், பெருமாள், முருகன் வள்ளி தெய்வானை, அகிலாண்டேஸ்வரி, சரஸ்வதி, லெட்சுமி, சிவன், பிரம்மா, நவக்கிரகம், ஆதி சங்கரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

தலச் சிறப்பு:
வேலங்காடு என்ற புராணப் பெயர்கொண்ட வேலூரில் உள்ள இத்திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான திருக்கோயில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களும், ஒருசேர அருள் பாலிக்கும் தலம் இது. இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின் புறம், திருப்பதி வெங்கடாசலபதி அமைப்பிலேயே பெருமாள் காட்சி தருகிறார். சூரியன், சந்திரனை விழுங்கும், ராகு, கேது மற்றும், தங்க, வெள்ளிப் பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

ஆதி சங்கரர் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சித்திரை மாதத்தில் இவருக்கு சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப் படுகிறது.

திருத்தலபெருமை:
சித்திரை மாதம் நடைபெறும் இக்கோயில் ப்ரம்மோற்ஸவத்தின் போது 8 சப்பரங்களில், 8 நாயன்மார்கள் வீதம், 63 நாயன்மார்களும் வீதி உலா எடுத்துச் செல்லப்படுவர். ஒரே நேரத்தில் 63 நாயன்மார்களின் வீதி உலா காட்சியைக் காண கண் கோடி வேண்டும். செந்தமிழை, தெய்வீகத் தமிழை பாடல்கள் மூலமாக வளர்த்தவர்கள் அல்லவா இவர்கள். மொழியை வளர்க்க வரம் வாங்கி வந்தவர்கள் அல்லவா இவர்கள்.

சிவன் யானை வாகனத்தின் மேல் வலம் வருவார். சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி விழாக்கள் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்து விநாயகர் பெயர் செல்வ விநாயகர்.

கார்த்திகை தீபத்தன்று பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரே பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். மாலை ராஜ கோபுரத்தில் தீபமேற்றி, மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் நடைபெற்று, பின்பு வீதி உலா எடுத்துச் செல்வர். கார்த்திகை கடைசி சோமாவரத்தன்று சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

இக்கோயில் சிவன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி கொடுப்பதால் நோய் நீக்குபவராக ஜுரகண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். திருக்கடையூரைப் போல இக்கோயிலிலும் அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம் போன்றவை சிறப்பாக நடத்தி வைக்கப் படுகின்றன.

பிரகாரத்தில் கங்கை நதி கிணறு வடிவில் காட்சி தருகிறது. இதற்கு அருகில் உள்ள சிவன் கங்கா பாலாறு ஈஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த லிங்கம் லேசாக கூம்பு வடிவில் காணப்படுகிறது. இவரின் பின்புறம், பைரவர் காணப் படுகிறார். இவ்வாறு ஒரே இடத்தில் கங்கை, சிவன், பைரவரை காணும் பாக்கியம் கிட்டுகிறது. இவர்களை ஒரே இடத்தில் வழிபட காசி விஸ்வநாதரை வழி பட்ட புண்ணியம் கிடைக்குமாம்.

இக்கோயிலின் முன்புறத்தில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. அம்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப் பாடுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வெண்ணைப்பானையுடன் கிருஷ்ணர், பைரவர், கண்ணப்பர் வரலாறு, நடராஜர், சரபேஸ்வரர், கருடாழ்வார் வணங்கும் நரசிம்மர், மத்தளம் வாசிக்கும் பெருமாள், ஆஞ்சநேயர், மேற்கூரையைத் தாங்கும் கிளிகள் என அங்குள்ள சிற்பங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

****************

வேலூர் கோட்டை:
வேலூர் கோட்டை 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோட்டையைச் சுற்றி நீர் நிரப்பப்பட்ட அகழி ஒன்று அமைந்துள்ளது. முற்காலத்தில் இந்த அகழியில் முதலைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். தற்போது இங்கு படகு சவாரி நடத்தப் படுகிறது. வேலூர் மக்களுக்கு இந்த படகு சவாரி நல்ல பொழுது போக்காக அமைந்துள்ளது. கோட்டைக்குள்ளே ஜலகண்டேஸ்வரர் கோயில் மட்டுமல்ல, ஒரு கிருஸ்தவ தேவாலயமும், இஸ்லாமிய தர்காவும் அமைந்துள்ளது. உள்ளே காவலர் பயிற்சிக் கூடமும் அமைந்துள்ளது.


இந்தியாவிலேயே தரையில் கட்டப்பட்ட கோட்டையில் மிகச் சிறந்த கோட்டையாக, இந்திய அளவில் மிக முக்கியமான நினைவுச் சின்னமாக இந்த வேலூர் கோட்டை தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் அறிவிக்கப் பட்டுள்ளது. இக்கோட்டையினைப் பற்றிய சிறப்புகள் அங்கங்கு பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கோட்டைக்குள்ளே, ASI அருங்காட்சியகமும், இந்திய அரசின் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. இங்கே பழங்காலத்து சிற்பங்களைப் பற்றியும், ஓவியங்களைப் பற்றியும், கலைகளைப் பற்றியும், அக்கால ரூபாய்கள், காசுகள் பற்றியும் பெரும்பாலான விஷயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நமது குழந்தைகள் இவற்றைப் பார்க்கும் போது தமிழன் பழங்காலத்தில் இருந்தே அயல் நாட்டினருடன், வணிக வியாபாரங்களில், திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க வாழ்ந்துள்ளான் என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். இந்த அருங்காட்சியகங்கள் வாரத்தில் வெள்ளிக் கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 வரை திறந்திருக்கும்.


விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்ட காலத்தில் திப்புசுல்தான் அவரது குடும்பத்தினருடன் இந்த கோட்டையில் வந்து தங்கியிருந்ததாகச் சொல்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களுக்கு வித்திட்ட வேலூர் புரட்சி 1806 ம் ஆண்டு இந்த வேலூர் கோட்டையில்தான் தொடங்கியது.

வேலூரை பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அக்காலத்திலிருந்தே வேலூர் போர் பூமியாகத்தான் திகழ்ந்துள்ளது. 1606 முதல் 1672 வரை விஜயநகரப் பேரரசின் தலை நகரமாக வேலூர் விளங்கியுள்ளது. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள், பீஜப்பூர் சுல்தான்கள் என பல்வேறு அரசர்கள் ஆண்ட வரலாற்று சிறப்புமிக்க ஊர் வேலூர். வேலூரில் முத்துமண்டபம் என்ற இடத்தில் இலங்கையை ஆண்ட கடைசி சிங்கள மன்னனின் கல்லறை அமைந்துள்ளது.


இவ்வாறாக பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட வேலூரை நமது குழந்தைகளுக்கு காட்டும்போது நமது முன்னோர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

15 comments:

Prema said...

hi ,

First time here,wounderful post,happy to follow ur blog.
Do visit my blog if time permits.
www.premascook.com

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி பிரேமலதா.

Menaga Sathia said...

super post,thxs for sharing...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

மாதேவி said...

கோட்டையும்,திருக்கோயிலும் கண்டுகொண்டேன். நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மாதேவி.

R. Gopi said...

நல்ல பதிவு. நான் இதுவரை போனதில்லை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கோபி.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

Chitra said...

சென்ற வருடம், அங்கே போன ட்ரிப் பற்றி ஞாபகப் படுத்தி இருக்கீங்க..... நன்றி.

...nice photos.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சித்ரா.

பினாத்தல் சுரேஷ் said...

ஹையா.. எங்க ஊரு! பதிவுக்கு நன்றி :-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராம்சுரேஷ்.

ராம்ஜி_யாஹூ said...

unable to read Pradosham post. Pls help out

புவனேஸ்வரி ராமநாதன் said...

http://maragadham.blogspot.com/2010/08/blog-post_21.html

தயவுசெய்து மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சென்று பார்க்கவும். நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails