Thursday, September 16, 2010


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

இன்றைய பதிவில் நாம் காண இருக்கும் தெய்வ தரிசனம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.


திருக்கோயில் அமைவிடம்:

தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்திய தேசத்திற்கே பெருமை சேர்ப்பது நம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் சிற்ப வேலைப்பாடும், பேரழகும், வண்ணங்களின் விளையாட்டும், இத்திருக்கோயிலை நோக்கி உலகையே ஈர்க்கிறது. இக்கோயிலின் பெருமைகளைப் பற்றிப் பேச ஒரு பதிவு போதாது. அதனால் எனக்கு இக்கோயிலைப் பற்றித் தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 10 km தொலைவிலும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 4 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக்குறிப்பு:
தல மூர்த்தி : மீனாட்சி சுந்தரேஸ்வரர் (சொக்கநாதர்)
தல நாயகி : மீனாட்சி (அங்கயற்கண்ணி, பச்சைதேவி, மரகதவல்லி, அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், மாணிக்கவல்லி)
தலவிருட்சம் : கடம்பமரம், வில்வமரம்
தலதீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம்



தலவரலாறு:
மலயத்துவச பாண்டிய மன்னரும், அவரது மனைவி காஞ்சனமாலையும், தங்களுக்கு குழந்தை பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார்கள். அதன் பலனாக, மூன்று தனங்களையுடைய பெண் குழந்தையாக உமாதேவி வேள்விகுண்டத்தில் இருந்து தோன்றினாள். அக்குழந்தையின் தோற்றம் கண்ட அரசரும், அரசியும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, "இக்குழந்தையின் தோற்றம் கண்டு வருத்தப்பட வேண்டாம், அப்பெண்ணிற்கு கணவன் வரும்போது தனம் தானாக மறையும்" என்று அசரீரி கேட்டது. இறைவனது ஆணைப்படி தடாகை என அப்பெண் குழந்தைக்குப் பெயரிட்டனர்.

தடாகை பல கலைகளிலும் மிகச்சிறந்து விளங்கினாள். மிகுந்த வீரத்துடனும் வளர்க்கப்பட்டாள். அதன் காரணமாகவே, தனது தந்தை மலயத்துவச பாண்டிய மன்னர் காலமான பிறகு, மதுரையம்பதியை வெகு சிறப்பாக ஆட்சி செய்தார் தடாகை. கன்னிப் பெண் மதுரையை ஆண்டதால் அவ்வூர் கன்னி நாடு எனப் பெயர் பெற்றது.

தடாகை திருமண வயதை அடைந்தார். அவர் தனது நாட்டுப்படைகளுடன் நீண்ட பயணம் மேற்கொண்டார். சிவகணங்களுடன் திருக் கைலாயம் சென்றடைந்தார். அங்கே சிவபிரானைக் கண்டவுடன் தனங்களில் ஒன்று மறைந்தது. இந்நிகழ்வினால் சிவனே தனது கணவன் என்பதை தடாகை உணர்ந்து கொண்டார்.

திருமண ஏற்பாடுகள் வெகு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. திருமணத்திற்கு திருமால், தேவர்கள், முனிவர்கள் வருகை தந்தனர். திருமணக் காட்சி கண்கொள்ளாக்க் காட்சியாக இருந்தது. பிரம்மதேவன் திருமணத்தை உடனிருந்து நடத்திவைத்தார். பங்குனி உத்திர நன்னாளில் தடாகை, சொக்கநாதர் திருமணம் இனிதே நடந்தேறியது.

தலப்பெருமை:
உலகப் புகழ் பெற்ற சிவாலயம். பாண்டியநாட்டு பாடல் பெற்ற திருத்தலங்களில் முதன்மையான திருத்தலமாகக் கருதப்படுகிறது. சிவபெருமான் புலவர்களுடன் ஒருவராய் இருந்து தமிழ்ச் சங்கத்தில் தமிழாராய்ந்த சிறப்புத் திருத்தலம். மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவம் காத்த திருத்தலம். மந்திரமாவது நீறு எனத்தொடங்கும் திருஞானசம்பந்தர் பெருமானால் பாடப் பெற்ற திருநீற்றுப் பதிகம் இயற்றப் பட்ட திருத்தலம். இந்த திருநீற்றுப் பதிகம் பாடியே கூன் பாண்டியனின் வெப்பு நோயை தீர்த்தார் திருஞானசம்பந்தர்.

கபிலர், பரணர், நக்கீரர், போன்ற சான்றோர்கள் வாழ்ந்த பெருமைமிகு ஊர். ஐந்து சபைகளுள் மதுரையில் வெள்ளி சபை அமைந்துள்ளது. மூர்த்தி நாயனார் வாழ்ந்த பதி. அனல் வாதம், புனல் வாதம் நிகழ்த்தி திருஞானசம்பந்தர் சைவத்தை தழைக்கச் செய்த இடம். பாணபத்திரர் மூலம் சேரமான் பெருமாளுக்கு திருமுகப்பாசுரம் தந்தருளியவர். வரகுண பாண்டியனின் கோரிக்கையை ஏற்று சிவபிரான் கால் மாற்றி ஆடிய தலம். சங்க கால தங்கப் பதியாக விளங்கியது. குமரகுருபரர் பிள்ளைத் தமிழ் பாடிய இடம். திருஞானசம்பந்தர் அமைத்த பழைய மடம் உள்ளது.


பாண்டிய மன்னனுக்கு அம்பிகை மகளாகப் பிறந்து நல்லாட்சி செய்த ஊர் மதுரை. சிவன் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய இடம். சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியுள்ள அதி அற்புதமான திருத்தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவ பக்தர்களால் கூறப்படும் சுலோகம் உருவாகக் காரணமாக இருந்த தலம்.

இந்திரன், வருண பகவான் வழிபட்ட தலம். இத்தலம் சிவஸ்தலம் என்றாலும் 64 சக்தி பீடங்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. நவக்ரஹத் தலங்களுள் புதன் ஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் 14 கோபுரங்களுடனும், 5 வாயிலுடனும் அமைந்துள்ளது. கலையழகு, சிலையழகு, சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் மிக உயரமானது.

பாற்கடலைக் கடைந்தபோது நாகம் உமிழ்ந்த விஷத்தை, சிவன் அமிர்தமாகிய மதுவை தெளித்து நீக்கி புனிதமாக்கியதால் மதுரை என்ற பெயரும், சிவனுக்கு அணிகலனாயிருந்த பாம்பு வட்டமாய்ச் சுற்றி வாலை வாயால் கவ்வி மதுரையின் எல்லையைச் சுட்டிக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயரும், கடம்ப மரங்கள் நிறைந்து காணப் பட்டதால் கடம்பவனம் என்ற பெயரும், மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் விதமாக பெருமான் தன் சடையிலிருந்து அனுப்பிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக கூடி இருந்து காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் ஏற்பட்டது.

தலச் சிறப்பு:
அம்மனின் சக்தி பீடங்களுள் முதன்மையானது. ராஜ மாதங்கி சியாமள பீடம் எனப் பெயர் பெற்ற பீடம். மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. பூலோகக் கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் பெயர் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாம் பொதுவாக சிற்பங்களின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும் என்று சொல்வது வழக்கம். இந்தக் கோயிலிலோ மூன்று கோடி சிற்பங்கள் உள்ளனவாம். இவற்றைக் காண எத்தனைக் கோடி கண்கள் வேண்டுமோ.


சிவபிரான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களுள், முதலாவது இந்திரன் சாபம் தீர்த்த படலம். இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க பல இடங்களுக்குச் சென்றார். கடைசியாக மதுரையில் சுயம்பு லிங்கத்தைக் கண்டு அதனை பூஜித்தார். அவரது தோஷம் நீங்கப் பெற்றது. அங்கேயே இந்திர விமானத்துடன் கூடிய கோயிலைக் கட்டினார்.

திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்ட போது தெப்பக்குளம் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். அவ்வாறு நோய் சரியானதும் தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்ட விநாயகர் சிலை கிடைத்தது. சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கி முக்குறுணி விநாயகரை பிரதிஷ்டை செய்தனர். விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டை வைத்து விநாயகருக்கு படையல் நடைபெறும்.

திருவிழாக்கள்:
சித்திரைத் திருவிழா சித்திரை மாதம் வளர்பிறையில் 12 நாட்கள் நடைபெறும். வைகாசி மாதத்தில் 10 நாட்கள் வசந்த விழா, திருஞானசம்பந்தர் விழா, ஆடி மாதத்தில் முளைக்கொட்டு விழா, ஆவணி மாதத்தில் 12 நாட்கள் மூலப் பெருவிழா, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கோலாட்ட உற்சவம், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபத் திருவிழா, 1008 சங்காபிஷேகம், மார்கழி மாதத்தில் 4 நாட்கள் எண்ணைக் காப்பு உற்சவம், தை மாதம் சங்கராந்தி விழா, தைப் பூசத்தன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளத்தில் சுந்தரேஸ்வரர், தெப்பத்தில் உலா வரும் தெப்பத்திருவிழா, மாசி மகா சிவராத்திரி சகஸ்ர சங்காபிஷேகம், பங்குனி மாதத்தில், மீனாட்சி அம்மனும், சுந்தரரும், செல்லூர் திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருளல் என வருடம் முழுவதும் இக்கோயிலில் திருவிழாக் கோலம் தான்.

பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலிப் பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், ஆறுகால் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், கம்பத்தடி மண்டபம், புது மண்டபம், 5 இசைத் தூண்கள் போன்றவை இக்கோயிலின் சிறப்பம்சங்கள். இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். சிவபிரான் நடனம் ஆடிய பஞ்சசபைகளுள் இத்தலம் ரஜத (வெள்ளி) சபையாகும். இத்தலத்தில் மட்டும் தான் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாறி இடது கால் தூக்கி சந்தியா தாண்டவம் ஆடியுள்ளார்.

இத்தலம் குறித்த பதிகங்கள்:
மாணிக்கவாசகர் - திருவாசகம்
அருணகிரிநாதர் - திருப்புகழ்
பாணபத்திரர் - திருமுகப்பாசுரம்
பரஞ்ஜோதிமுனிவர் - திருவிளையாடல் புராணம்
குமரகுருபரர் - மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்

திருநாவுக்கரசர் - தேவாரம்

திருநாவுக்கரசு சுவாமிகள் இந்த மதுரை திருத்தலத்தில் பாடி அருளிச் செய்த தேவாரப் பாடல்:
வேதியா வேத கீதா
விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி
ஒருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்
படர்சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!


நம்பனே நான்மு கத்தாய்
நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே ஈசா என்றென்று
ஏத்தி நான் ஏசற்று என்றும்
பின்பினே திரிந்து நாயேன்
பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில்
அப்பனே அருசெ யாயே !!


ஒரு மருந்தாகி யுள்ளாய்
உம்பரோடு உலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய்
பேரமுது இன்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய்
ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந்து ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!


செய்யநின் கமல பாதம்
சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே
மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானம்
கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

வெண்டலை கையில் ஏந்தி
மிகவும் ஊர் பலிகொண்டு என்றும்
உண்டதும் இல்லை சொல்லில்
உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்
பளகனேன் உளமதார
அண்டனே ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!

எஞ்சலில் புகலி தென்றென்று
ஏத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி
மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த
நற்பொருட் பதமே நாயேற்கு
அஞ்சலென்று ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!

வழுவிலாது உன்னை வாழ்த்தி
வழிபடும் தொண்ட னேனும்
செழுமலர்ப் பாதம்காணத்
தெண்டிரை நஞ்சம் உண்ட
குழகனே கோல வில்லீ
கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

நறுமலர் நீரும் கொண்டு
நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத்
திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா
மாமறை அங்கம் ஆறும்
அறிவனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

நலந் திகழ் வாயில் நூலால்
சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள
அருளினாய் என்று திண்ணம்
கலந்துடன் வந்து நின்றாள்
கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

பொடிக்கொடு பூசிப் பொல்லாக்
குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் தாள்கள் என்றும்
பிதற்றிநான் இருக்க மாட்டேன்
எடுப்பன்என்று இலங்கைக் கோன்வந்து
எடுத்தலும் இருபது தோள்
அடர்த்தனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

10 comments:

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.

தமிழ் உதயம் said...

பொற்றாமரை குள புகைப்படம் ரெம்ப அழகு. எடுத்து கொண்டேன்.

Asiya Omar said...

20 வருடம் முன்பு காலேஜ் டூர் போனப்போ நானும் போயிருக்கிறேன்.நல்லா்யிருக்கு.

Priya said...

தெரியாத தகவல்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது, நன்றி!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சித்ரா.

நன்றி தமிழ் உதயம்.

நன்றி ஆசியா மேடம்.

நன்றி ப்ரியா.

நன்றி மேனகா.

RVS said...

நல்லா இருந்தது.. என்னுடைய மீனாட்சி கோயில் விசிட் இந்த சுட்டியில்...
http://mannairvs.blogspot.com/2010/05/blog-post_23.html

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Prema said...

thanks for sharing the info,many unknow info iam getting here.particularly thanks for the sharing the thevaram padal.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஆர்.வி.எஸ். மீனாட்சி கோயில் பற்றிய உங்கள் பதிவை ஏற்கனவே படித்திருக்கிறேன்.

நன்றி பிரேமலதா.

GEETHA ACHAL said...

உங்கள் பதிவு அருமை...இன்னும் நிறைய தெரிந்து கொண்டோம்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கீதா.

Post a Comment

Related Posts with Thumbnails