Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Thursday, September 16, 2010


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

இன்றைய பதிவில் நாம் காண இருக்கும் தெய்வ தரிசனம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.


திருக்கோயில் அமைவிடம்:

தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்திய தேசத்திற்கே பெருமை சேர்ப்பது நம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் சிற்ப வேலைப்பாடும், பேரழகும், வண்ணங்களின் விளையாட்டும், இத்திருக்கோயிலை நோக்கி உலகையே ஈர்க்கிறது. இக்கோயிலின் பெருமைகளைப் பற்றிப் பேச ஒரு பதிவு போதாது. அதனால் எனக்கு இக்கோயிலைப் பற்றித் தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 10 km தொலைவிலும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 4 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக்குறிப்பு:
தல மூர்த்தி : மீனாட்சி சுந்தரேஸ்வரர் (சொக்கநாதர்)
தல நாயகி : மீனாட்சி (அங்கயற்கண்ணி, பச்சைதேவி, மரகதவல்லி, அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், மாணிக்கவல்லி)
தலவிருட்சம் : கடம்பமரம், வில்வமரம்
தலதீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம்



தலவரலாறு:
மலயத்துவச பாண்டிய மன்னரும், அவரது மனைவி காஞ்சனமாலையும், தங்களுக்கு குழந்தை பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார்கள். அதன் பலனாக, மூன்று தனங்களையுடைய பெண் குழந்தையாக உமாதேவி வேள்விகுண்டத்தில் இருந்து தோன்றினாள். அக்குழந்தையின் தோற்றம் கண்ட அரசரும், அரசியும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, "இக்குழந்தையின் தோற்றம் கண்டு வருத்தப்பட வேண்டாம், அப்பெண்ணிற்கு கணவன் வரும்போது தனம் தானாக மறையும்" என்று அசரீரி கேட்டது. இறைவனது ஆணைப்படி தடாகை என அப்பெண் குழந்தைக்குப் பெயரிட்டனர்.

தடாகை பல கலைகளிலும் மிகச்சிறந்து விளங்கினாள். மிகுந்த வீரத்துடனும் வளர்க்கப்பட்டாள். அதன் காரணமாகவே, தனது தந்தை மலயத்துவச பாண்டிய மன்னர் காலமான பிறகு, மதுரையம்பதியை வெகு சிறப்பாக ஆட்சி செய்தார் தடாகை. கன்னிப் பெண் மதுரையை ஆண்டதால் அவ்வூர் கன்னி நாடு எனப் பெயர் பெற்றது.

தடாகை திருமண வயதை அடைந்தார். அவர் தனது நாட்டுப்படைகளுடன் நீண்ட பயணம் மேற்கொண்டார். சிவகணங்களுடன் திருக் கைலாயம் சென்றடைந்தார். அங்கே சிவபிரானைக் கண்டவுடன் தனங்களில் ஒன்று மறைந்தது. இந்நிகழ்வினால் சிவனே தனது கணவன் என்பதை தடாகை உணர்ந்து கொண்டார்.

திருமண ஏற்பாடுகள் வெகு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. திருமணத்திற்கு திருமால், தேவர்கள், முனிவர்கள் வருகை தந்தனர். திருமணக் காட்சி கண்கொள்ளாக்க் காட்சியாக இருந்தது. பிரம்மதேவன் திருமணத்தை உடனிருந்து நடத்திவைத்தார். பங்குனி உத்திர நன்னாளில் தடாகை, சொக்கநாதர் திருமணம் இனிதே நடந்தேறியது.

தலப்பெருமை:
உலகப் புகழ் பெற்ற சிவாலயம். பாண்டியநாட்டு பாடல் பெற்ற திருத்தலங்களில் முதன்மையான திருத்தலமாகக் கருதப்படுகிறது. சிவபெருமான் புலவர்களுடன் ஒருவராய் இருந்து தமிழ்ச் சங்கத்தில் தமிழாராய்ந்த சிறப்புத் திருத்தலம். மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவம் காத்த திருத்தலம். மந்திரமாவது நீறு எனத்தொடங்கும் திருஞானசம்பந்தர் பெருமானால் பாடப் பெற்ற திருநீற்றுப் பதிகம் இயற்றப் பட்ட திருத்தலம். இந்த திருநீற்றுப் பதிகம் பாடியே கூன் பாண்டியனின் வெப்பு நோயை தீர்த்தார் திருஞானசம்பந்தர்.

கபிலர், பரணர், நக்கீரர், போன்ற சான்றோர்கள் வாழ்ந்த பெருமைமிகு ஊர். ஐந்து சபைகளுள் மதுரையில் வெள்ளி சபை அமைந்துள்ளது. மூர்த்தி நாயனார் வாழ்ந்த பதி. அனல் வாதம், புனல் வாதம் நிகழ்த்தி திருஞானசம்பந்தர் சைவத்தை தழைக்கச் செய்த இடம். பாணபத்திரர் மூலம் சேரமான் பெருமாளுக்கு திருமுகப்பாசுரம் தந்தருளியவர். வரகுண பாண்டியனின் கோரிக்கையை ஏற்று சிவபிரான் கால் மாற்றி ஆடிய தலம். சங்க கால தங்கப் பதியாக விளங்கியது. குமரகுருபரர் பிள்ளைத் தமிழ் பாடிய இடம். திருஞானசம்பந்தர் அமைத்த பழைய மடம் உள்ளது.


பாண்டிய மன்னனுக்கு அம்பிகை மகளாகப் பிறந்து நல்லாட்சி செய்த ஊர் மதுரை. சிவன் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய இடம். சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியுள்ள அதி அற்புதமான திருத்தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவ பக்தர்களால் கூறப்படும் சுலோகம் உருவாகக் காரணமாக இருந்த தலம்.

இந்திரன், வருண பகவான் வழிபட்ட தலம். இத்தலம் சிவஸ்தலம் என்றாலும் 64 சக்தி பீடங்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. நவக்ரஹத் தலங்களுள் புதன் ஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் 14 கோபுரங்களுடனும், 5 வாயிலுடனும் அமைந்துள்ளது. கலையழகு, சிலையழகு, சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் மிக உயரமானது.

பாற்கடலைக் கடைந்தபோது நாகம் உமிழ்ந்த விஷத்தை, சிவன் அமிர்தமாகிய மதுவை தெளித்து நீக்கி புனிதமாக்கியதால் மதுரை என்ற பெயரும், சிவனுக்கு அணிகலனாயிருந்த பாம்பு வட்டமாய்ச் சுற்றி வாலை வாயால் கவ்வி மதுரையின் எல்லையைச் சுட்டிக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயரும், கடம்ப மரங்கள் நிறைந்து காணப் பட்டதால் கடம்பவனம் என்ற பெயரும், மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் விதமாக பெருமான் தன் சடையிலிருந்து அனுப்பிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக கூடி இருந்து காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் ஏற்பட்டது.

தலச் சிறப்பு:
அம்மனின் சக்தி பீடங்களுள் முதன்மையானது. ராஜ மாதங்கி சியாமள பீடம் எனப் பெயர் பெற்ற பீடம். மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. பூலோகக் கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் பெயர் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாம் பொதுவாக சிற்பங்களின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும் என்று சொல்வது வழக்கம். இந்தக் கோயிலிலோ மூன்று கோடி சிற்பங்கள் உள்ளனவாம். இவற்றைக் காண எத்தனைக் கோடி கண்கள் வேண்டுமோ.


சிவபிரான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களுள், முதலாவது இந்திரன் சாபம் தீர்த்த படலம். இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க பல இடங்களுக்குச் சென்றார். கடைசியாக மதுரையில் சுயம்பு லிங்கத்தைக் கண்டு அதனை பூஜித்தார். அவரது தோஷம் நீங்கப் பெற்றது. அங்கேயே இந்திர விமானத்துடன் கூடிய கோயிலைக் கட்டினார்.

திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்ட போது தெப்பக்குளம் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். அவ்வாறு நோய் சரியானதும் தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்ட விநாயகர் சிலை கிடைத்தது. சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கி முக்குறுணி விநாயகரை பிரதிஷ்டை செய்தனர். விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டை வைத்து விநாயகருக்கு படையல் நடைபெறும்.

திருவிழாக்கள்:
சித்திரைத் திருவிழா சித்திரை மாதம் வளர்பிறையில் 12 நாட்கள் நடைபெறும். வைகாசி மாதத்தில் 10 நாட்கள் வசந்த விழா, திருஞானசம்பந்தர் விழா, ஆடி மாதத்தில் முளைக்கொட்டு விழா, ஆவணி மாதத்தில் 12 நாட்கள் மூலப் பெருவிழா, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கோலாட்ட உற்சவம், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபத் திருவிழா, 1008 சங்காபிஷேகம், மார்கழி மாதத்தில் 4 நாட்கள் எண்ணைக் காப்பு உற்சவம், தை மாதம் சங்கராந்தி விழா, தைப் பூசத்தன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளத்தில் சுந்தரேஸ்வரர், தெப்பத்தில் உலா வரும் தெப்பத்திருவிழா, மாசி மகா சிவராத்திரி சகஸ்ர சங்காபிஷேகம், பங்குனி மாதத்தில், மீனாட்சி அம்மனும், சுந்தரரும், செல்லூர் திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருளல் என வருடம் முழுவதும் இக்கோயிலில் திருவிழாக் கோலம் தான்.

பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலிப் பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், ஆறுகால் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், கம்பத்தடி மண்டபம், புது மண்டபம், 5 இசைத் தூண்கள் போன்றவை இக்கோயிலின் சிறப்பம்சங்கள். இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். சிவபிரான் நடனம் ஆடிய பஞ்சசபைகளுள் இத்தலம் ரஜத (வெள்ளி) சபையாகும். இத்தலத்தில் மட்டும் தான் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாறி இடது கால் தூக்கி சந்தியா தாண்டவம் ஆடியுள்ளார்.

இத்தலம் குறித்த பதிகங்கள்:
மாணிக்கவாசகர் - திருவாசகம்
அருணகிரிநாதர் - திருப்புகழ்
பாணபத்திரர் - திருமுகப்பாசுரம்
பரஞ்ஜோதிமுனிவர் - திருவிளையாடல் புராணம்
குமரகுருபரர் - மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்

திருநாவுக்கரசர் - தேவாரம்

திருநாவுக்கரசு சுவாமிகள் இந்த மதுரை திருத்தலத்தில் பாடி அருளிச் செய்த தேவாரப் பாடல்:
வேதியா வேத கீதா
விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி
ஒருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்
படர்சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!


நம்பனே நான்மு கத்தாய்
நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே ஈசா என்றென்று
ஏத்தி நான் ஏசற்று என்றும்
பின்பினே திரிந்து நாயேன்
பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில்
அப்பனே அருசெ யாயே !!


ஒரு மருந்தாகி யுள்ளாய்
உம்பரோடு உலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய்
பேரமுது இன்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய்
ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந்து ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!


செய்யநின் கமல பாதம்
சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே
மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானம்
கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

வெண்டலை கையில் ஏந்தி
மிகவும் ஊர் பலிகொண்டு என்றும்
உண்டதும் இல்லை சொல்லில்
உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்
பளகனேன் உளமதார
அண்டனே ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!

எஞ்சலில் புகலி தென்றென்று
ஏத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி
மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த
நற்பொருட் பதமே நாயேற்கு
அஞ்சலென்று ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!

வழுவிலாது உன்னை வாழ்த்தி
வழிபடும் தொண்ட னேனும்
செழுமலர்ப் பாதம்காணத்
தெண்டிரை நஞ்சம் உண்ட
குழகனே கோல வில்லீ
கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

நறுமலர் நீரும் கொண்டு
நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத்
திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா
மாமறை அங்கம் ஆறும்
அறிவனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

நலந் திகழ் வாயில் நூலால்
சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள
அருளினாய் என்று திண்ணம்
கலந்துடன் வந்து நின்றாள்
கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

பொடிக்கொடு பூசிப் பொல்லாக்
குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் தாள்கள் என்றும்
பிதற்றிநான் இருக்க மாட்டேன்
எடுப்பன்என்று இலங்கைக் கோன்வந்து
எடுத்தலும் இருபது தோள்
அடர்த்தனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

Thursday, September 2, 2010


கூடலழகர்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் கூடலழகர் திருக்கோயில், மதுரை.


திருக்கோயில் அமைவிடம்:
இத்திருக்கோயில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே உள்ளது.

திருத்தலக் குறிப்பு:
மூலவர் : கூடலழகர்
உற்சவர் : வியூக சுந்தரராஜர்
தாயார் : மதுரவல்லி (வகுளவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
தல விருட்சம் : கதலி
தல தீர்த்தம் : ஹேமபுஷ்கரணி


தல வரலாறு :
பிரம்மாவின் மகன் சனத்குமார், பெருமாளை மனித ரூபத்தில் காண ஆசைப்பட்டு, பெருமாளை வேண்டி தவமிருந்தார். இவரது பக்தியை மெச்சி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தந்தார். சனத்குமார், தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம் தான் கண்ட காட்சியை
வடிவமைக்கச் சொன்னார். அவ்வாறு வடிவமைத்த சிற்பத்தை அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே கூடலழகர்.

இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகி
றது. இத்தலம் கிருதாயுகத்தில் அமைக்கப்பட்ட திருக்கோயில். கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் போன்ற நான்கு யுகங்களையும் கடந்து நிற்கிறது. யுகங்களைக் கடந்து நிற்பதால் இக்கோயில் பெருமாள் யுகம் கண்ட பெருமாள் என்று அழைக்கப் படுகிறார்.

தலச்சிறப்பு:
பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாக இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் போன்ற ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். எல்லா பெருமாள் கோயில்களிலும், அதிகாலையில் பாடப்படும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்ற பெரியாழ்வாரால் பாடப்பட்ட திருப்பல்லாண்டு இயற்றப்பட்ட திருத்தலம் இதுவே. மார்கழி மாதத்தில் இத்திருக்கோயில் தரிசனம் மிகவும் சிறப்பு. வைகுண்ட ஏகாதசியும், நவராத்திரி விழாவும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

பெருமாள் கோயில்களில் பொதுவாக 96 வகையான விமானங்கள் அமைக்கப் படுவது வழக்கம். அவற்றுள் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 108 திவ்யதேச திருத்தலங்களில் இவ்வூரிலும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே அஷ்டாங்க விமானம் அமைக்கப்பட்டு, தலமூர்த்தி அதன் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதன் மேல் உள்ள கலசம் 10 அடி உயரம் கொண்டது.

திருக்கோயில் கோபுரத்தின் மேல் கலசம் வைக்கும் போது அவற்றுள் நவதானியங்களை நிரப்பி வைப்பார்களாம். ஏனெனில், இயற்கை சீற்றங்களின் போது, எல்லாம் தண்ணீரில் அடித்துச்சென்றுவிடும் நிலையில், மிஞ்சி இருக்கும் சில மனிதர்கள் உயிர்வாழ அந்த தானியங்கள் தேவைப்படும் என்பதற்காக கலசத்தில் நவதானியங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. இச்செய்தி சமீபத்தில் ஒரு வரலாற்று ஆய்வாளர் மூலம் நான் தெரிந்து கொண்டது. அக்காலத்தில் எல்லா செயல்களுமே ஏதோ ஒரு நல்ல நோக்கத்துடனேயே செய்யப்பட்டுள்ளது.

பிற சன்னதிகள்:
எட்டு பிரகாரங்களுடன் இக்கோயில் அமைக்கப் பட்டுள்ளது. ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவகிரகங்கள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், மணவாள மாமுனிகள், விஸ்வக்ஷேனர், ராமர், கிருஷ்ணர், லக்ஷ்மி நாராயணர், கருடர், ஆஞ்சநேயர், லக்ஷ்மி நரசிம்மர் ஆகிய சன்னதிகள் உள்ளன. பெருமாள் கோயிலில் நவகிரகங்களுக்கு சன்னதி இருந்தது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

தலப்பெருமை:
இத்தல உற்சவர் வியூக சுந்தரராஜன் என்று அழைக்கப்படுகிறார். மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன் இவரை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ஓவிய வடிவில் காட்சி தருகின்றனர். அதனால் இத்தளம் ஓவிய மண்டபம் என அழைக்கப் படுகிறது. மூன்றாவது தளத்தில் ரெங்கநாதப் பெருமாள் சயன கோலத்தில் தாயார்களுடன் காட்சி தருகிறார். இவ்வாறாக சுவாமி நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலங்களில் முக்கோல முகுந்தன் ஆக இக்கோயிலில் கூடலழகர் காட்சி தருகிறார்.


பூவராகர், லக்ஷ்மி நரசிம்மர், நாராயணன், ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றுவதுபோல் இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள். திருக்கோயில் விமானத்தை பார்க்க இக்கோயிலில் ரூ. 5/- வசூல் செய்கிறார்கள். இரவு 8:00 மணிவரை விமானத்தை தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள். பாண்டிய மன்னனுக்கு மீன் வடிவில் பெருமாள் காட்சி கொடுத்த காரணத்தினால், பாண்டியர்களது சின்னம் மீனாக அமைந்ததாகச் சொல்கிறார்கள்.

காப்பு:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா ! உன்
சேவடி செவ்விற் திருக்காப்பு
(2 முறை)

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவின் சோதி வலத் துறையும் சுடரா ழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டு
(2 முறை)

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக் கதர்வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருத்தானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடுமனமுடையீர் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணா வென்று
பாடுமனமுடைப் பத்தருள்ளீர் ! வந்து பல்லாண்டு கூறுமினே

அண்டகுலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் றனக்கு
தொண்டைக்குலத்தில் உள்ளீர் ! வந்தடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண் டென்மினே

எந்தை தந்தை தந்தை தந்தை தம்முத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்நியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை திரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே

தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழிகுருதி
பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே

உடுத்துக் களைந்தநின் பீதகவாடை யுடுத்துக் கலந்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூழக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில்
படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டனுக்குப் பல்லாண்டு கூறுதுமே

எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
சென்னாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனிந்து ஐந்தலைய
பை நாகத்தலைப் பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

அல்வழக்கொன்று மில்லா அணி கேடியார்கோன் அபிமான துங்கன்
செல்வனைப்போலத் திருமாலே ! நானும் உனக்குப் பழவடியேன்
நல்லவகையால் நமோநாராயணா வென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திரனே ! உன்னைப் பல்லாண்டு கூறுவனே !
(2 முறை)

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத் தேத்துவர் பல்லாண்டே !
(2 முறை)

ராமலக்ஷ்மி அவர்கள் எடுத்த கூடலழகர் கோபுரத்தின் புகைப்படத்தைக்காண இங்கே செல்லவும்.


Related Posts with Thumbnails