Showing posts with label கும்பகோணம். Show all posts
Showing posts with label கும்பகோணம். Show all posts

Thursday, April 3, 2014


ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்

நமச்சிவாய வாழ்க!! நாதன் தாள் வாழ்க!!

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்.


திருக்கோயில் அமைவிடம்:
இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் திருக்கோயில், திருவாரூரில் இருந்து 18 km தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 36 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 km தொலைவிலும், நன்னிலத்தில் இருந்து 6 km தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வந்து, அங்கிருந்து திருவாரூர் சாலையில் அமைந்துள்ள சன்னாநல்லூரை அடைந்து, நன்னிலம் வழியாக ஸ்ரீவாஞ்சியத்தை சென்றடையலாம்.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: ஸ்ரீ வாஞ்சீஸ்வரர் (வாஞ்சிநாத சுவாமி)
தல இறைவி: ஸ்ரீ மங்களாம்பிகை (மருவார்குழலி அம்பாள்)
தல விருட்சம்: சந்தனமரம்
தல தீர்த்தம்: குப்த கங்கை (முனி தீர்த்தம்), எமதீர்த்தம் உட்பட 23 தீர்த்தங்கள்


திருக்கோயில் அமைப்பு:
இன்னும் கிராமங்களின் அழகை தன்னுள்ளே தக்க வைத்துக் கொண்டுள்ள ஸ்ரீ வாஞ்சியத்தில் இந்த அருள்மிகு வாஞ்சிநாதர் திருத்தலம் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்கள் 127 உள்ளன. அவற்றில் 70-வது தலமாக இத்தலம் அமைந்துள்ளது. அழகிய கோபுர தரிசனம் செய்துகோண்டே திருக்கோயில் உள்ளே நுழைகையில், வலதுபுறமாக சென்றால், குப்தகங்கை என அழைக்கப்படும் திருக்கோயில் குளம் அமைந்துள்ளது. சற்றே பெரிய குளம். நாங்கள் சென்றிருந்தபோது பள்ளிக் குழந்தைகள் சிலர் திருக்கோயில் உழவாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பார்க்கவே மனதிற்கு மிக நிறைவாக இருந்தது. திருக்கோயில் வளாகம், திருக்குளம் என அனைத்துப் பகுதிகளையும் மிக அழகாக தூய்மைப் படுத்தினர் அக்குழந்தைகள். அவர்கள் அனைவரது வாழ்வு சிறக்க வாஞ்சிநாதரை வேண்டி, நம் பயணத்தை தொடருவோம்.

புனித கங்கை ஒரு அம்சத்தை மட்டும் விடுத்து மீதமுள்ள 999 அம்சங்களுடன் இங்கு வந்து இத்தல தீர்த்தத்தில் உறைதாக சொல்லப்படுகிறது. இத்தீர்த்த குளத்தில் நீராடி, அக்குளக் கரையோரமாகவே அமைந்துள்ள கங்கைக் கரை விநாயகரை விளக்கேற்றி வணங்கி, பின் திருக்கோயில் உள்ளே வந்தால், நுழைவு வாயிலின் இடப் புறமாக அமைந்துள்ளது இத்தலத்தில் சிறப்பம்சமாக விளங்கும் யமதர்மராஜன் சன்னதி. தனி கோபுரத்தின் கீழ் இச்சன்னதி அமையப் பெற்றுள்ளது. இப்பெருமான் தென் திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். யமதர்மராஜனின் அருகில், நம் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த யமதர்மராஜன் சன்னதியில் ஒரு பழக்கம் உள்ளது. நாம் அர்ச்சனை செய்யும் எந்த பொருளையும் சரி, திருநீறு பிரசாதங்கள் என்று எதையும் நம்முடன் எடுத்துச் செல்லக் கூடாது என அச்சன்னதி சிவாச்சாரியார் சொல்லக் கேட்டோம்.


இவ்வாறாக எமதர்மராஜனிடம் நம் வேண்டுதல்களை முன்வைத்துவிட்டு, திருக்கோயிலின் அடுத்த கோபுர வாசலை சென்றடையும் முன் இரு புறமும் முறையே அமைந்துள்ள அபயங்கர விநாயகரையும், பால முருகனையும் தரிசிக்கிறோம். அது போலே, உள் கோபுரத்தைத் தாண்டினால் இடப்புறம் மேலும் ஒரு விநாயகர் சன்னதியும், வலப்புறம் மருவார் குழலி எனும் மங்களாம்பிகை சன்னதியும் அமையப் பெற்றுள்ளது. தொடர்ந்து கொடிமரம், பலிபீடம், நந்தி பகவான் என எல்லாம் வணங்கி விளக்கிட்டு, மூன்றாம் கோபுர வாயிலை அடைகிறோம். அக்கோபுர வாசலின் இருமருங்கிலும், இரட்டை விநாயகரும், அதிகார நந்தியும் அமர்ந்து நம்மை தெய்வ வழிபாட்டிற்கு இட்டுச் செல்கின்றனர்.

பொதுவாக விஷ்ணு திருக்கோயில்களில் கருடாழ்வாரை வணங்கி அவரிடம் அனுமதி பெற்று பின்னர் பெருமாளை வணங்கிட நம் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது ஒரு நம்பிக்கை. அதே போலவே சிவன் திருக்கோயில்களில் கோபுர வாயிலில் அமைந்திருக்கும் அதிகார நந்தியை வணங்கி அவரிடம் அனுமதி வாங்கி சிவனை வழிபட, நினைத்த காரியம் செவ்வனே நிறைவேறும் என்பது காலங்காலமான நம்பிக்கை.

இவர்களைத் தாண்டி உள்ளே சென்றால் அங்கேயும் ஒரு நந்தீஸ்வரர் நம்மை வரவேற்கிறார். அவரை வணங்கி துவாரபாலகர்களைக் கடந்து அர்த்தமண்டபம் தாண்டி உள்ளே கருவறையில் அருள்மிகு வாஞ்சிநாதரை கண்குளிர, ஆம் உண்மையிலேயே எந்த செயற்கையான வெளிச்சத் தூறல்கள் இல்லாமல், கருவறையில் சுவாமியின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள, வட்டக் கண்ணாடியின் உதவியுடன் ஒற்றை ஜோதி நூறு மடங்காய் பரிமளிக்கும் வெளிச்சத்துடன், தீப வெளிச்சத்துடனும், சாம்பிராணி வாசத்துடனும், அதே சாம்பிராணி புகை மூட்டத்தினூடே, கருவறை மூலவரை தரிசிக்கும் இன்பம் எங்கும் எதிலும் கிடைக்காத பேரின்பம்.

பெருமானது தரிசனம் முடிந்து, சுவாமியின் வலப்புறமாக சன்னதியை சுற்றுகையில் சோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர் தரிசனமும் காணப் பெறுகிறோம்.

தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிரில் பிரகாரத்தின் தென் திசையில் அறுபத்து மூன்று நாயன்மார்கள், தொகையடியார்கள் ஒன்பது பேர், உமாமகேஸ்வரருடன் காட்சி தருகிறார்கள். பிரகாரத்தின் மேற்கு திசையில் சந்திரமௌலீஸ்வரர், கன்னிமூலை கணபதி, சட்டநாதர், மீனாக்ஷி சொக்கநாதர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அஷ்டலிங்கம், மகாலட்சுமி என பரிவார தெய்வங்கள் அனைத்தும் தனித்தனி சன்னதிகளில் அமையப் பெற்றுள்ளன.


பின் தென் திசையைப் பார்த்தவாறு சனீஸ்வர பகவானும், பஞ்சபூத ஸ்தலங்களின் சிவலிங்கங்களும், துர்க்கையும், பிரகாரத்தின் வடக்கில் அமைந்துள்ளன.

இவர்களை தீபமேற்றி வணங்கிவிட்டு, சண்டிகேஸ்வரரை வழிபடுகிறோம். சண்டிகேஸ்வரர் ஒரு தீவிர சிவ பக்தர். ஆகையால் தான் எப்போதும் சிவ நாமத்தைச் சொல்வதும், நினைப்பதுவும், கேட்பதுவும் மட்டுமே செய்யக் கூடியவர். சிவ நாமத்தைத் தவிர வேறு எதையும் கேட்க மாட்டேன் என்றிருப்பவர். சண்டிகேஸ்வரர் சன்னதி சென்று நமச்சிவாய! நமச்சிவாய! என ஐந்தெழுத்து மந்திரத்தை வாயார சொல்லிவர நம் வேண்டுதல்கள் தானே நிறைவேறும்.

சண்டிகேஸ்வரரை வணங்கி பின் கிழக்கு முகமாக அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தினி தெய்வத்தை வணங்கிச் சுற்றி வந்தால், சூரியன், சந்திரன், யோக பைரவர், ஒரே சிற்பமாக ராகு கேது போன்றோரது சன்னதி அமைந்துள்ளது. அங்கேயே நடராஜரது சன்னதியும் அமைந்துள்ளது.

இங்கு வாஞ்சிநாதராகிய சிவபிரானே அனைத்துமாக விளங்குவதால் இத்திருத்தலத்தில் நவக்ரஹ சன்னதி அமையப் பெறவில்லை.

திருத்தலச் சிறப்பு:
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகிய நான்கு முக்கிய நாயன்மார்களாலும் பாடல் பெற்ற ஸ்தலம்.

கங்காதேவி குப்த கங்கையாக 999 கலைகளுடன் இத்தலத் திருக்குளத்தில் உறையும் சிறப்புமிகு தலம்.

108 முறை தாமரை மலர்களைக் கொண்டு இத்தலத்தில் உள்ள ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினியை அர்ச்சனை செய்து வழிபட எல்லாவித நன்மைகளையும் பெறலாம்.

மகாலக்ஷ்மியை திருமணம் செய்ய விரும்பி விஷ்ணு பெருமான் தவம் இருந்த தலம் என்பதால் ஸ்ரீ வாஞ்சியம் எனும் பெயர் வந்தது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் தலை சிறந்து விளங்கும் பெருமை உடைய தலம்.

பிரளயம் உண்டான காலத்திலும் அழிவு இல்லாமல், காலங்களைக் கடந்து நிற்கும் தலம்.

எமதர்மராஜனுக்கு தனியே சன்னதி அமையப் பெற்றுள்ள தனிச் சிறப்பு வாய்ந்த ஸ்தலம். இங்கே சுவாமிக்கு எமதர்மராஜனே வாகனமாகவும் இருக்கிறார்.

காசிக்கு வீசம்படி அதிகம் என்ற சொல்லுக்கும் மேலாக காசியைவிட பல மடங்கு புண்ணியமிகு ஸ்தலம் இந்த ஸ்ரீ வாஞ்சியம்.

பிரம்மன், விஷ்ணு, சூரிய பகவான், தேவர்கள் எனப் பலரும் வழிபட்டு சிவனருள் பெற்ற தலம். சூரிய பகவானுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தருளிய திருத்தலம்.

ராகுவும் கேதுவும் தனித் தனியே இல்லாமல் ஒரே உடலுடன் இங்கு அருள் பாலிப்பதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக உள்ளது.

ஆயுள் விருத்திக்கு இத்தல தரிசனம் ஒரு அருமருந்து.


மருகலுறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையைக்
கருகாவூரின் கற்பகத்தைக் கண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூர் எம்பிறப்பிலையைப் பேணுவார்கள் பிரிவரிய
திருவாஞ்சியத்து எம் செல்வனைச் சிந்தையுள்ளே வைத்தேன்!!
என்ற பாடல் வரிகள் வாயிலாக இத்த்திருத்தலத்துப் பெருமையை நாம் அறியலாம்.

தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றிலும் சிறந்து விளங்கும் இத்தலத்தில் வாழ்ந்தாலும், இத்தலத்தை நினைத்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரும் தலமாக விளங்குகிறது இந்த திருவாஞ்சியம்.

இத்திருத்தலத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் மிக விசேஷமான தினங்கள். பொதுவாக கிரகண காலங்களில் திருக்கோயில்களை சாத்திவிடுவார்கள். ஆனால் கிரகண காலங்களிலும் கோயில் திறக்கப்பட்டு ஈசனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் இந்த ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலம்.

இத்தல தீர்த்தப் பெருமை:
கிருதயுகத்தில் மிக தூய புஷ்கரணி என்ற நாமத்துடனும்,
திரேதாயுகத்தில் அத்திரி தீர்த்தம் என்று விளங்கியும்,
துவாபரயுகத்தில் பராசர தீர்த்தம் என்ற பெயருடனும்,
கலியுகத்தில் முனிதீர்த்தம் என்றும்,
போற்றப்பட்டு வருகிறது இத்தலத்தில் அமைந்துள்ள குப்தகங்கை என்னும் திருக்குளம்.


கிருதயுகத்தில் விஷ்ணு பெருமானிடம் கோபம் கொண்ட மகாலட்சுமி அவரை விட்டுச் செல்ல, மனைவி இல்லாமல் வாடிய திருமால் இந்த திருவாஞ்சியம் வந்து தேவர்கள் புடை சூழ தவமிருந்து, இத்தீர்த்தத்தில் நீராடி வாஞ்சிநாதனை வழிபட, சிவபிரான் லக்ஷ்மி தேவியின் கோபம் தீர்த்து பெருமாளுடன் சேர்த்து வைத்தார். இதனாலேயே இத்தலம் திருவிழைந்ததென்று எனும் பொருள்படும் படியாக திருவாஞ்சியம் எனும் பெயருடன் விளங்குகிறது. கண்ணபிரானும், லக்ஷ்மியும் நீராடிய திருக்குளம் என்பதால் புண்ணிய புஷ்கரணி எனவாயிற்று.

திரேதாயுகத்தில் அத்திரி என்னும் முனிவர் பெருமானார், பிள்ளைச் செல்வம் இன்றி மிகவும் வேதனையுற்று, நாரதரின் உபதேசப்படி இந்த திருவாஞ்சியம் வந்து இந்த தீர்த்தக் குளத்தில் நீராடி, ஈசனை வேண்டி தவமிருக்க, சிவபெருமான் மனமிரங்கி முனிவருக்கு காட்சி தந்து தாத்தத்ரேயனை மகனாக வரமருளிய காரணத்தால் அத்திரி தீர்த்தம் என வழங்கப்பட்டது.

துவாபரயுகத்தில் பிறருக்கு தீங்கிழைத்த காரணத்தினால் மூன்று யுகங்களுக்கு அரக்கனாகவே பிறப்பான் என்ற தண்டனை பெற்ற வீரதனு எனும் அசுரன், அந்த தண்டனையில் இருந்து விடுபட பராசர முனிவரை வணங்கிட, அவர் திருவாஞ்சியம் சென்று அங்குள்ள தீர்த்தக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து இவ்வசுரன் மேல் தெளித்து சாப விமோசனம் தந்தருளினார். இதன் காரணமாக பராசர தீர்த்தம் என விளங்க ஈசன் அருளினார்.

மாசி மக நாளன்று இத்திருக்குளத்தில் நீராட பாவ புண்ணியங்களில் இருந்தும், பிறவி பந்தத்தில் இருந்தும் விடுபட முடியும் என்கிறது புராணம்.

திருவாஞ்சியத்தில் உள்ள தீர்த்தங்கள்:
1. பிரம்ம தீர்த்தம் : கிழக்கு திசையில்
2. நாரத தீர்த்தம் : அக்னி மூலையில்
3. விஸ்வாமித்ர தீர்த்தம் : தென் திசை
4. ஸர்வ தீர்த்தம்
5. பரத்வாஜ தீர்த்தம் : நிருதி திசையில்
6. சேஷ தீர்த்தம் : மேற்கு திசையில்
7. நாராயண தீர்த்தம் : திருக்கோயிலில் இருந்து சற்று தள்ளி
8. ராம தீர்த்தம் : வாயு திசையில்
9. இந்திர தீர்த்தம் : ஈசான்ய மூலையில்
10. ஆனந்த கிணறு : திருக்கோயிலின் உள்ளே

திருவாஞ்சியம் திருத்தலம் பொன்மயமாக கிருதாயுகத்திலும், வெள்ளிமயமாக திரேதாயுகத்திலும், தாமிரமயமாக துவாபரயுகத்திலும் விளங்கியது. மண்மயமாக கலியுகத்தில் விளங்குகிறது.

காசியில் இறைவனடி சேர்ந்தோருக்கு ஒரு சில மணித்துளிகளாவது பைரவவாதனை உண்டாம். ஆனால் இத்தலத்தில் பைரவர் யோகநிலையில் அருள் பாலிப்பதால், பைரவ உபாதை கிடையாது என்னும் சிறப்புடைய தலம். ஏனெனில், பைரவர் ஒரு முறை சிவபிரானின் இஷ்ட திருத்தலமான இந்த ஸ்ரீவாஞ்சியம் வந்தடைந்து பொன்வண்டின் உருவத்தில் கடுந்தவம் இருந்து முக்கண்ணனை சரணடைய இங்குள்ளவர்களுக்கு பைரவ உபாதையே கிடையாது என திருவாஞ்சிநாதர் அருளிச்செய்தார்.

திருத்தல வரலாறு:
முன்பொரு சமயத்தில் கங்காதேவி சிவபிரானை தரிசனம் செய்து தனது மன வேதனையைத் தெரிவித்தார். உலக உயிர்கள் அனைத்தும் தத்தமது பாவங்களை கங்கையில் நீராடி போக்கிக் கொள்வதால் என்னிடம் பாவங்கள் நிறைந்து விட்டது. இத்தகைய எனது பாவங்களை நான் எங்கு சென்று தீர்த்துக் கொள்வேன் என கங்கை ஈசனிடம் வேண்டிநின்றார். அதற்கு பெருமான், தெற்கே அமைந்துள்ள திருவாஞ்சியம் என்னும் திருத்தலம் எமனுக்கே பாபவிமோசனம் கிடைக்கச் செய்த திருத்தலம், அங்கு சென்று உன் பாவங்களைப் போக்கிக்கொள் எனக் கூறி அருளினார். அதன்படியே இங்குவந்த கங்காதேவி இத்தல தீர்த்தத்தில் 999 கலைகளுடன் உறைந்து தங்கிவிட்டார் என்பது வரலாறு.


எமதர்மனுக்கும் சாப விமோசனம் அளித்த தலம்:
ஒருமுறை எமதர்மன் தன் நிலையை எண்ணி வருந்தியபடி இருந்தார். எவ்வளவோ விதமான பதவி நிலைகள் இருந்தும் தனக்கு மட்டும் இப்படி உயிர்களைப் பறிக்கும் பாவ காரியம் செய்யும் பதவி ஏன் வந்தது, என எண்ணி வருந்தினார். உயிர்வதை தொழிலை செய்யும் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளதாகவும், தன்னைக் கண்டு உயிர்கள் அனைத்தும் பயம் கொள்வதாகவும் திருவாரூர் தியாகராஜ பெருமானைக் கண்டுப் புலம்பினார். அதற்கு அப்பெருமான் ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சினாதரை வழிபட்டு உனது தோஷத்தில் இருந்து விடுபட்டுக் கொள் எனக் கூறினார். அவ்வாறே இத்தலம் வந்து நெடுங்காலம் கடுந்தவம் புரிந்து வாஞ்சிநாதரை வழிபட்டு தனது தோஷத்தில் இருந்து விடுபட்டார் எமதர்மன். இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். முதலில் உன்னை தரிசித்த பின்னரே என்னை வந்து பக்தர்கள் தரிசிப்பர் எனும் பெரும்பேற்றை ஸ்ரீ வாஞ்சிநாதர் எமனுக்கு வழங்கினார்.


இத்தலத்தில் விளங்கும் அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி துர்க்கையின் மறு உருவமாய் எங்கும் காணக் கிடைக்காத ஒரு அரிய வடிவமாய் காட்சி தந்து அருள்புரிகிறாள்.

ஸ்ரீ வாஞ்சியம் துர்க்கை துதி:
மனமுடையவளே அச்சங்கடிபவளே
அம்பிகே தாயே வேதாந்தத்தால் அறியப்படுபவளே
கருமைத் தங்கிய மேனியை உடையவளே
அழகியவளே வளர்ந்த முன்மயிரையுடையவளே
மிக்க ஒளியை உடையவளே
யோகினியே நீலகண்டர் மனைவியே
முச்சூலம் தரித்த கையளே
எல்லாச் சிறப்பும் அமைந்த வடிவினளே
பயமகற்றுபவளே மதியணிபவளே
நெற்றிக்கண்ணி ஹே மகா கௌரி
ஹே மகாலட்சுமி, ஹே சரஸ்வதி, ஹே சர்வதேவி
உன் பொருட்டு நமஸ்காரம்
ஹே அம்பிகை கருணை செய்வாய்
காப்பாற்றுவாய் உனக்கு வந்தனம்!!!

திருவாஞ்சியம் திருத்தலத்தில் திருநாவுக்கரச சுவாமிகள் அருளிச் செய்த பதிகம்:
படையும் பூதமும் பாம்பும்புல் வாய்அதள்
உடையும் தாங்கிய உத்தம னார்க்குஇடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க்கு அல்லல்ஒன்று இல்லையே!!

பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியம் சேர்மினே!!

புற்றில் ஆடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவம் இல்லையே!!

அங்கம் ஆறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயிலும் நகர்
செங்கண் மால்இட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்தாம் அமரர்க்கு அமரரே!!

நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிகள் உறைபதி
மாறு தான் ஒருங்கும் வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே!!

அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு
உற்ற நற்றுணை யாவன் உறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத்து ஆவதே!!

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடி யான்திக ழும்நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யால்அடை வார்க்கு இல்லை அல்லலே!!

திருச்சிற்றம்பலம்!!

Saturday, March 29, 2014


காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில், ஊத்துக்காடு

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த, குழலூதும் கண்ணன் வீற்றிருக்கும் ஊத்துக்காடு எனும் சிறிய ஊரில் அமைந்துள்ள காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில்.


காளிங்கன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு
அவன் நீள் முடியைந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிபற தூமணி வண்ணனை பாடிபற!!
-- பெரியாழ்வார் திருமொழி

திருக்கோயில் அமைவிடம்:
இந்த ஊத்துக்காடு காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூரில் இருந்து 30 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 15 km தொலைவிலும் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாக ஊத்துக்காடு திருக்கோயிலை சென்றடையலாம். கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், பட்டீஸ்வரம், கோவிந்தகுடி வழியாக இத்திருக்கோயிலை அடையலாம்.

திருத்தல குறிப்பு:
தல இறைவன்: ஸ்ரீ வேத நாராயண பெருமாள்
தல இறைவி: ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி
உற்சவர்: ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன்

திருத்தல வரலாறு:
பொதுவாக கண்ணன் கதைகளைக் கேட்கக் கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும். கிருஷ்ண பகவானின் லீலைகளை கேட்பதில் அப்படி ஒரு ஆனந்தம். சாதாரண மனித ரூபத்தில் அவதாரமெடுத்து, மனிதர்கள் சூழ, சக மனிதன் அனுபவித்த சுக துக்கங்களில் பங்கெடுத்து, தானும் அதே சுக துக்கங்களை அனுபவித்து, நமக்கு ஒரு நண்பனின் சொரூபத்தில் வாழ்ந்த கண்ணனின் மீது நமக்கு அதீத அன்பு ஏற்படுவது இயற்கைதானே.

அதே நேரத்தில், கண்ணன் மீது அளவில்லா அன்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலக உயிர்கள் அத்தனைக்கும் உண்டு என்பதை நிரூபிக்கிறது இத்தல இறைவனின் திருத்தல வரலாறு. தன் பக்தர்களுக்காக, பக்தர்களின் அன்பில் குழைந்து, திளைத்து, எதையும் செய்யத் துணியும் கண்ணனின் காருண்யம்தான் இத்தல வரலாறு.

இந்த ஊத்துக்காடு என்னும் இயற்கை அன்னையின் அருள் பெற்று அளவற்ற செழிப்புடன், பசுமை வண்ணத்தால் கண்களையும், மனதையும் குளிரச் செய்யும்படி அமைந்துள்ள சிற்றூருக்கு அருகில் ஆவூர் என்னும் ஊரில் சிவன் திருக்கோயில் ஒன்று உள்ளது.

இத்தல இறைவனான ஸ்ரீ கைலாசநாதரின் திருவடி சேவை செய்யும் பொருட்டு, தேவலோக பசுவாகிய ஸ்ரீ காமதேனு தன் குழந்தைகளான நந்தினி, பட்டி என்னும் இரு கன்றுப் பசுக்களையும் இத்தலத்திலேயே விட்டுச் சென்றது.

இவ்வாறாக நந்தினி, பட்டி என்கிற இவ்விரு பசுக்களும் அபிஷேகப் பிரியரான கைலாசநாதரின் அபிஷேக ஆராதனைகளுக்கு பால் கொடுத்துக் கொண்டும், பூஜைக்குரிய பூக்களை நந்தவனத்தில் இருந்து பறித்து இறைவனுக்குப் படைத்துக் கொண்டும் தங்களது கைங்கர்யங்களைச் செய்து வந்தன. இது போல பசுக்களினால் தெய்வ ஆராதனை செய்யப்பட்ட காரணத்தினால் இத்தல ஈஸ்வரனுக்கு பசுபதீஸ்வரர் என்ற காரணப் பெயரும் உண்டானது.

இயற்கை எழில் மிகுந்த ஊத்துக்காடு மலர்கள் நிறைந்த சோலைவனமாகத் திகழந்தமையினால் ஆவூர் தெய்வத்திற்கு இந்த ஊத்துக்காட்டில் இருந்துதான் நந்தினி, பட்டி பசுக்கள் பூக்களை பறித்துச் செல்வதை தங்களது வழக்கமாகக் கொண்டிருந்தன.

இதுபோல தினமும் இப்பசுக்கள் மலர்களைக் கொய்த வண்ணம் இருக்க, ஸ்ரீ நாரத முனிவரோ இப்பசுக்களுக்கு தெய்வீகக் கதைகளைச் சொன்ன வண்ணம் உள்ளார். இது தினப்படி நடக்கும் ஒரு செயலாகிப் போனது இப்பசுக்களுக்கு.

இப்படியே புராணக் கதைகளை ஸ்ரீ நாரத முனிவர் சொல்லிக் கொண்டிருக்கையில், ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்ற பாம்பினை, அதனுடன் சண்டையிட்டுப் போராடி, அப்பாம்பின் ஆணவத்தை அடக்கி, அதன் தலை மீதேறி பேரழகு நர்த்தனம் ஆடி, அந்த பாம்பிற்கு அருள் பாலித்த கிருஷ்ணனின் கதையைச் சொல்லி முடித்தார் ஸ்ரீ நாரத முனிவர். மேலும், இந்த பெரும் லீலையை கண்ணன் மேற்கொள்ளும்போது பெருமான் ஐந்து வயது குழந்தைதான் என்ற விவரத்தையும் சொன்னார்.

இந்தக் கதையைக் கேட்ட நந்தினி, பட்டி பசுக்கள் கேவி, கேவி கண்ணீர்விட்டு அழத் தொடங்கி விட்டன. ஏன் இந்த அழுகை எனக் கேட்ட நாரத முனியிடம், அத்தகைய பெருத்த, பருத்த, பயமூட்டும் காளிங்கனிடம் எவ்வளவு கஷ்டப்பட்டு பகவான் போராடியிருப்பார்? அவ்வாறு போரிடும்போது கண்ணனது உடலெங்கும் காயங்கள் பட்டிருக்குமே. நீல வண்ண மேனி வலித்திருக்குமே எனப் பலவாறாக புலம்பித் தீர்த்து அழுது கொண்டே இருந்தன அந்த கன்று பசுக்கள்.

இது போன்ற மனதை நெகிழச் செய்யும் காட்சியினை தேவ லோகத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீ காமதேனுப் பசு, தன் பிள்ளைகள் கதறி அழுவதைக் காண முடியாமல், ஸ்ரீ கிருஷ்ண பகவானை தரிசனம் செய்து, தன் குழந்தைகளின் நிலையினை எடுத்துச் சொல்லி இப்படி ஒரு நிலைக்குத் தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டது.

அவ்வாறே ஸ்ரீ காமதேனு பசுவின் வேண்டுகோளுக்கு இணங்க பூமாதேவி வாசம் செய்யும் பூலோகத்திற்கு வந்து இவ்விரு பசுக்களையும் அரவணைத்து ஆறுதல் சொன்னார்.

கண்ணன் ஆறுதல் படலத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் சென்று, இந்த ஊத்துக்காட்டில் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த புஷ்ப வனத்திற்கு அருகாமையிலேயே ஒரு ஊற்றினை உருவாக்க, தண்ணீர் பெருக்கெடுத்து அங்கொரு குளம் உண்டானது. ஊத்துக்காடு எனும் பெயரும் பெற்றது. அக்குளத்திலேயே காளிங்க நர்த்தனத்தை மீண்டும் இப்பசுக்களுக்காக ஒரு முறை செய்து காண்பித்தார். தான் காளிங்க நர்த்தன லீலையை புரியும்போது எவ்விதத்திலும் கஷ்டப் படவில்லை, துன்பப் படவில்லை என்பதை அப்பசுக்களுக்கு உணர்த்தினார்.

இந்த காளிங்க நர்த்தன லீலையைக் கண்ணுற்ற இவ்விரு பசுக்களும் மூர்ச்சையாகி, மயங்கி விழுந்தன. பின்னர் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அருளினால் மயக்கம் தெளிந்து, பெரும்மூச்சும் வந்ததால் மூச்சுக்காடு என்றும் இத்தலம் பெயர் பெற்றது.

திருத்தல அமைப்பு:
மெத்தச் சிறப்பு வாய்ந்த புனிதத் தன்மை உடைய காவிரி ஆற்றினாலும், அதன் கிளை நதிகளாலும் சூழப்பட்டு, வெட்டாற்றின் வடகரையில் அமைந்துள்ள தேனுஸ்வாஸபுரம் என வடமொழியிலும், மூச்சுக்காடு என தேன் தமிழிலும் ஆதிகாலப் பெயர் கொண்ட வரலாற்றுப் புகழ் வாய்ந்த இவ்வூர் சிவஸ்தலமாகவும், விஷ்ணுஸ்தலமாகவும் விளங்குகிறது.

சங்க காலத்தில் இச்சிறிய கிராமம் கோவூர் என்ற திருநாமத்துடன் பெருமை பெற்று விளங்கியது. தண்ணீரே இல்லாமல் இருந்த இடத்தில் தனது கிருஷ்ண லீலையை செய்து காண்பிக்க ஏற்படுத்திய ஊற்றினால் ஊத்துக்காடு என்ற பெயருடன் இன்றுவரை விளங்குகிறது. இந்த பெருமை மிகு காளிங்க நர்த்தன பெருமாள் இங்கு வாசம் செய்வதால் இவ்வூருக்கு தென் கோகுலம் என்னும் பெயரும் உண்டு.

இந்த ஆலயத்தின் மேற்கு திசையில் ஏரியைப் போன்ற தோற்றத்தில் பெரிய தாமரைத் தடாகம் ஒன்று அமைந்துள்ளது.

மிகவும் பழமையானதும், பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு சிறப்பம்சங்களை தானகத்தே கொண்டுள்ள இத்திருக்கோயில் நுழைவு வாயிலின் இடப்புறமாக அருள்மிகு கணேசமூர்த்தி, நர்த்தன கோலத்தில் காட்சி அளித்து அருள் செய்கிறார். திருக்கோயில் மூலஸ்தான சன்னதியில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ வேதநாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ பாமா சமேதராக ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமாள் காளிங்கன் என்னும் சர்ப்பத்தின் சிரசின் மேல் நடன கோலத்தில் உற்சவ மூர்த்தியாக ஐம்பொன் சிலா ரூபமாக காட்சி அளிக்கிறார். இதுபோன்ற பாம்பின் மேல் நடனமாடும் கோலத்தில் காளிங்க நர்த்தன பெருமாளை உலகில் வேறு எங்கும் காண இயலாது.

ஸ்ரீ நாரதர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தாங்கள் காளிங்கன் மீது நர்த்தனம் ஆடிய லீலையை மீண்டும் இங்கே புரிந்ததால் நீங்கள் இங்கேயே விக்கிரகமாகி ஊத்துக்காட்டிலேயே தங்கி உலக மக்களுக்கெல்லாம் அருள் புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க பெருமானும் இங்கேயே தங்கி விட்டார். ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகத்தை ஸ்ரீ நாரதரே பிரதிஷ்ட்டையும் செய்துள்ளார். இந்த உற்சவ மூர்த்தி காளிங்க நர்த்தனரின் காலடியிலேயே நந்தினி, பட்டி எனும் இரு பசுக்களின் விக்கிரகங்கள் கண்ணனை அண்ணாந்து, கண்ணனையே பார்த்த கோலத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

தனிச்சிறப்பு:
ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமான், காளிங்கனின் சிரசின் மேல் தன் இடது திருவடியை வைத்துள்ளார். தனது வலது காலை நர்த்தன கோலத்தில் உயர்த்தியபடி உள்ளார். ஆக இறைவனது ஒற்றைப் பாதமே பாம்பின் சிரசின் மேல் உள்ளது. அவரது பாதத்திற்கும் பாம்பின் சிரசிற்கும் ஒரு நூல் விட்டு எடுக்கும் இடைவெளி உள்ளது. ஒரு கையை நானிருக்கிறேன் என்னும் பொருள்படும்படி அபயஹஸ்தமாகவும், மற்றொரு கையினால் காளிங்கனின் வாலைப் பிடித்தபடி காட்சி தருகிறார். அதுவும் காளிங்க பாம்பின் வாலினை பகவானின் கட்டை விரல் மட்டுமே தொட்டுக் கொண்டிருக்கும். மற்ற நான்கு விரல்கள் பாம்பின் வாலைத் தொடவில்லை.

இவ்வாறாக வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும், பாம்பின் தலையிலும் பிடிமானம் இல்லை என இந்த காளிங்க நர்த்தன பெருமாள் சிற்பத்தின் சிறப்பினை கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். இந்த விக்கிரகத்தின் தனிச்சிறப்பினை உணர்ந்த மத்திய அரசாங்கம் 1982-ம் ஆண்டில் மூன்று ருபாய் மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில் மிகச்சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும், பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

ஊத்துக்காடு வெங்கடகவி:
உலகமெங்கும் இசை உலகில் பிரபலமாகவும், எல்லா இசைக் கலைஞர்களாலும் பாடப்படும் பாடல்களை இயற்றிய பெருமை கொண்டவர் ஊத்துக்காடு வெங்கடகவி. இவர் பிறந்த ஊரோ பல்வேறு சிறப்புக்களை உடைய மன்னார்குடி. ஆனால் அவர் வளர்ந்து கண்ணன் மேல் பாடல் பாடி உலகப் புகழ் பெற்ற ஊர் ஊத்துக்காடு. இந்த ஊரின் பெயரே இவரது பெயருடன் ஒட்டிக் கொண்டது.

இவருக்கு ஸ்ரீ காளிங்க நர்த்தன் பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். பெருமானை கண்ட பெரு மகிழ்ச்சியில் இத்தல இறைவன் மேல் நிறைய பாடல்களை எழுதியுள்ளார். இவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் அனேக கர்னாடக சங்கீத பாடகர்களால் உலகமெங்கும் பாடப்பட்டு வருகிறது.

கதிரும் மதியும் என
நயன விழிகள் இரு நளினமான
சலனத்திலே காளிங்க சிரத்திலே
கதித்தபதத்திலே என்
மனத்தை இருத்தி கனவு நினைவினோடு
பிறவி பிறவி தோறும் கனிந்துருக
வரந்தருக.....
(பால் வடியும் முகம்) எனத் தொடங்கும் பாடல்
-- ஊத்துக்காடு வேங்கடகவி

ஊத்துக்காடு வெங்கட கவி எழுதிய எண்ணற்ற பாடல்களில் ஆடாது அசங்காது, அலை பாயுதே கண்ணா, அசைந்தாடும், குழலூதும் எனத் தொடங்கும் மிகப் பிரபலமான கர்னாடக சங்கீத கீர்த்தனைகளும் அடங்கும்.

இவ்வாறாக பல்வேறு பெருமைகளை உள்ளடக்கிய இத்திருக்கோயிலை நமது வாழ்நாளில் நாம் நமது குடும்பத்துடன் சென்று இத்தல பெருமானது தனித்த தன்மையையும், பேரழகையும், உலகில் எங்கும் காணக் கிடைக்காத இப்பெருமானது தோற்றப் பொலிவையும், பெருமானது கண்ணில் பொங்கும் கருணையையும் கண்ணார மனதாரக் கண்டு களித்து வருவோம். இந்த காளிங்க நர்த்தன பெருமாளைக் காணும் அந்த கணம் அந்த நொடிப் பொழுது அப்படியே நின்று விடாதா? என நினைக்கும் வண்ணமும், நம்முடன் பகவான் பேசுவது போலவும், பல்வேறு நிலைப்பாடுகள் நம்முள்ளே வந்து வந்து செல்கின்றன. இப்படி ஒரு உன்னத அனுபவம் இத்திருக்கோயில் சென்று நர்த்தன பெருமாளை நேரில் காணும்போது மட்டுமே கிடைக்கும் அனுபவம்.

நமது இந்திய நாடு, குறிப்பாக தமிழகம் எத்தனையோ கால மாற்றங்களைச் சந்தித்தாலும் இந்தத் திருக்கோயில் வடிவங்களும் அதன் அமைப்புகளும், திருக்கோயிலில் காணப்பெறும் பல்வேறு சிலாரூபங்களும், அவற்றின் அதிசய சிறப்புக்களும், இத்தனை யுகங்களைத் தாண்டி வந்த நமது பாரத நாட்டின் சொத்துக்களாகிய இவை, இனியும் எத்தனை யுகங்கள் ஆனாலும் காலங்களைக் கடந்து நிற்கும் என்பதில் துளியும் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. நமது பெருமைமிகு சிறப்புமிகு சொத்துக்களைக் காத்திடுவோம்!

இவற்றுக்கெல்லாம் மேலாக, இத்தகைய சிறப்பு வாய்ந்த, பழமை வாய்ந்த இத்திருத்தலம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதால், இக்கோயிலை சீரமைக்கும் திருப்பணி நடைபெற்று வருகிறது.


திருக்கோயில் தொலை பேசி எண்:
ஊத்துக்காடு: 04374 - 268549, 94426 99355
சென்னை: 98846 20129

ஊத்துக்காடு வேங்கடகவி பாடல் தொகுப்பு


பட உதவி : www.oothukkadu.com

Friday, April 13, 2012


திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்.


திருஞானசம்பந்தர் தேவாரம்:
முத்திலங்கு முறுவல் லுமையஞ்சவே
மத்தயானை மருகவ் வுரிவாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர்ரெம்
அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே!!

அப்பர் திருத்தாண்டவம்:
குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாம்கருகாவூ ரெந்தைதானே!!

பாபநாசத் திருப்பதிகம்:
மருகல் உறையும் மாணிக்கத்தை
வலஞ்சுழியில் மாமாலையைக்
கருகாவூரில் கற்பகத்தைக் .
காண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூர் எம்பிறப்பிலியை
பேணுவார்கள் பரிவரிய
திருவாஞ்சியத் தெம் செல்வனை
சிந்தையுள்ளே வைத்தேனே!!

க்ஷேத்திரக் கோவைத் திருப்பதிகம்:
திண்டிச்சரம் செய்ஞலூர் செம்பொன்பள்ளி
தெவூர்சிராபுரம் சிற்றேம் சேறை
கோண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர்
கூடல் குருகாவூர் வெள்ளடை குமரிகொங்கு
அண்டர்தொழும் அதிகை வீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமத்தூரும்
கண்டியூர் வீரட்டம்கருகாவூரும்
கயிலாய நாதனையே காணலாமே!!
- அப்பர்

திருக்கோயில் அமைவிடம்:
பாடல் பெற்ற 276 தேவாரத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் இருந்து 6 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 20 km தூரத்திலும், சாலியமங்கலத்தில் இருந்து 10 km தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 20 km தொலைவிலும் சிறப்புற அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் பாபநாசம் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து திருக்கருகாவூர் என்னும் இத்திருத்தலம் அமைந்துள்ள சிற்றூரை அடையலாம்.

திருக்கோயில் குறிப்பு:
தலமூர்த்தி: முல்லைவனநாதர் (மூவலிங்கமூர்த்தி, மாதவிவனேச்சுவரர், கர்ப்பபுரீச்சுவரர், கருகாவூர் கற்பகம்)
தல இறைவி: கர்ப்பரட்சாம்பிகை (கருகாத்தநாயகி, கரும்பானையாள்)
தல விருட்சம்: முல்லைக்கொடி
தல தீர்த்தம்: க்ஷீரகுண்டம் (பாற்குளம்) (கோவிலின் முன்புறம்), சத்திய கூபம் (சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில்), பிரம்ம தீர்த்தம் (இவ்வூரின் தென்மேற்கே), விருத்த காவிரி (முள்ளிவாய்) (திருக்கோயிலுக்கு தென்மேற்கே)


இத்திருக்கோயில் இறைவன் திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். திருநாவுக்கரசர் மேலும் இவ்விறைவனை தனது அன்பின் பக்தியின் மிகுதியால் குருகு வைரம், அமிர்தம், பாலின் நெய், பழத்தின் சுவை, பாட்டில் பண், வித்து பரஞ்சோதி, எட்டுருவ மூர்த்தி என்றும் தனது பாடல்கள் மூலம் போற்றிப் புகழ்கிறார்.

திருத்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லைவனமாக இருந்தது. அந்த அழகிய வனத்தில் கௌதமர், கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும் நித்துருவர்-வேதிகை தம்பதியினர், முல்லை வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர் பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள் வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப் பெற்றனர்.

இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர் இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில் சுகமான சுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்த காரணம் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, இறைவன் அருளினால் அவள் பெற்ற கரு கலைந்தது. அம்பாளிடம் சென்று தன் நிலையை எடுத்து இயம்பினாள் வேதிகை. தன் பக்தையின் நிலை அறிந்து அன்னை கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி நைந்துருவன் என்ற பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.

கருகாத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம் இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவுலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் ஒருசேர காப்பாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்ய அன்னை அவ்வாறே இத்தலத்தில் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருளுகின்றாள். இதன் காரணமாகவே இத்தலம் திருக்கருகாவூர் என்றும், இத்தல இறைவி கர்ப்பரட்சாம்பிகை என்றும் பெயர் விளங்கப் பெற்றது. இந்த நேரத்தில் அருட்குழந்தை நைந்துருவனுக்கு கொடுக்க வேதிகையிடம் தாய்ப்பால் இல்லாத காரணத்தால், அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதன் காரணத்தால் பால்குளம் தோன்றியது.


இந்த புனித குளம் இன்றும் திருக்கோயிலின் முன்புறம் க்ஷீரகுண்டம் என்ற பெயரில் இருந்து வருகிறது. இத்தல கருகாத்த நாயகியை மனதார வேண்டி வணங்கிட கரு உண்டாகிறது, கரு கலையாமல் நிலைக்கிறது, சுகப்பிரசவம் உண்டாகிறது என்பது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இத்தல இறைவன் முல்லைவனநாதர் சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். இந்த லிங்கத்தின் சிறப்பு புற்று மண்ணினால் ஆன லிங்கம் என்பதே. அதனாலேயே இந்த லிங்க மேனிக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆகவே இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்தமைக்கான வடுவினை, அடையாளத்தினை இன்றும் காணலாம்.

பழைய தலவரலாறு:
பிரம்மன் பூஜித்த வரலாறு:
படைப்புக் கடவுளான பிரம்மன் தன் படைப்புத் தொழிலின் காரணமாக மிகுந்த கர்வம் கொண்டு அந்த ஆணவத்தினால் அத்தொழில் செய்ய முடியாமல் போனது. அதன் காரணமாக இங்கு வந்து திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் ஒரு தீர்த்தத்தை நிறுவி அதில் நீராடி முல்லைவனநாதரை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.

கார்க்கியர் பூஜித்த வரலாறு:
ஸ்வர்ணகாரன் என்ற வைசியன் தான் செய்த தீய செயல் காரணமாக பேயுரு அடைந்தான். அந்த உருவில் இருந்து தன்னை மீட்க வேண்டி கார்க்கியர் என்னும் முனிவரை நாடினான். அவரும் திருவாதிரை நன்னாளில் வைசியனை இத்திருக்கோயில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடச் செய்தார். அவனும் பேயுரு நீங்கப் பெற்றான்.

கௌதமர் பூஜித்த வரலாறு:
ஒரு சமயம் தன்னிடம் புகலிடம் அடைந்த சில முனிவர்களின் சூழ்ச்சியினால் கௌதம முனிவர் பசுவதை செய்த பாவத்திற்கு ஆளானார். அந்த நேரத்தில் போதாயனர் என்னும் முனிவரின் சொல்படி கௌதமர் திருக்கருகாவூர் வந்து புனித நீரில் நீராடி சிவலிங்கம் வைத்து பூஜித்தார். அவர் செய்த பசுவதை பழியும் நீங்கியது. அவர் வழிபட்ட லிங்கம் கௌதமேசுவரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியின் எதிரே தனிச் சன்னதியில் அமைந்துள்ளது.

மன்னர் குசத்துவன் சாப நீக்க வரலாறு:
மன்னன் குசத்துவன் ஒரு சமயம் சத்திய முனிவரின் சொல்லைக் கேட்காமல் அவர் வசித்த வனத்திலேயே வேட்டையாடினான். அதனால் முனிவரது சாபத்திற்கு ஆளாகி புலியின் உருவத்தைப் பெற்றான். தன் தவறை உணர்ந்து அம்முனிவரை மன்னன் வணங்கிட, அவர் இத்தலத்தில் உள்ள சத்தியகூப தீர்த்தத்தில் நீராடச் சொன்னார். அவ்வாறு செய்தமையால் மன்னன் தன் பழைய உருவினை அடைந்தான்.

சங்குகர்ணன் என்ற அந்தணனும் தன் சாபம் நீங்கப்பெற்ற தலம் இத்திருத்தலம். தட்சனது சாபத்தால் வேதனையுற்ற சந்திர பகவான் இங்கு வந்து பங்குனி பௌர்ணமி நாளில் சிவ பூஜை செய்து நல்ல கதி அடைந்தான். இன்றும் பங்குனி பௌர்ணமி நாளில் நிலவின் ஒளி இறைவன் திருமேனியில் படுவதைக் காணலாம்.

இத்தலத்தலம் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். ராமலிங்க அடிகளாரும் இத்திருக்கோயிலைப் பாடியுள்ளார்.


திருக்கோயில் அமைப்பு:
திருக்களாவூர் என்னும் திருக்கருகாவூர் திருக்கோயிலில் தல இறைவன், விநாயகமூர்த்தி, நந்தி பகவான் மூவரும் சுயம்பு வடிவமாகவும், சிவன் சன்னதியின் பின்புறம் லிங்கோத்பவர் அமைந்திருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் அமைந்திருப்பது இத்தல சிறப்பாகும்.

பஞ்சாரண்யத் தலங்கள் என அழைக்கப்படும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய தலங்களில் முதலாவதாக அமைந்துள்ளது இந்த திருக்கருகாவூர் தலம். இத்திருத்தலத்திற்கு மாதவி வனம், முல்லைவனம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.

திருக்கருகாவூரைச் சேர்த்து ஒரே நாளில் தரிசித்துப் பலனடைய வேண்டிய திருக்கோயில்கள் பற்றிய விபரங்கள்:
1) முல்லைக்கொடி தலவிருட்சமாக உள்ள திருக்கருகாவூரில் விடியும் முன்னரே உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டும்.
2) பாதிரிமரம் தலவிருட்சமாக அமைந்துள்ள அவளிவனல்லூரில் காலை சந்தி காலத்தில் தரிசனம் செய்ய வேண்டும்.
3) வன்னிமரம் தலவிருட்சமாக உள்ள அரப்பெரும்பாழி என்னும் அரித்துவாரமங்கலத்தில் உச்சி காலத்தில் தரிசிக்க வேண்டும்.
4) பூளைமரம் தலவிருட்சமாக உள்ள இரும்பூளை ஆலங்குடியில் சாயங்காலத்தில் தரிசனம் மேற்கொள்ளவேண்டும்.
5) வில்வமரம் தலவிருட்சமாக உள்ள திருக்கொள்ளம்பூதூரில் அர்த்தஜாமப் பொழுதில் திருக்கோயில் தரிசனம் செய்யவேண்டும்.

திருக்கருகாவூர் சென்று கடவுள் வழிபாடு செய்வது முக்திக்கு வழிவகுக்கும் என்பதை,
தில்லை வனங் காசி திருவாரூர் மாயூரம்
முல்லை வனம் கூடல் முதுகுன்றம் நெல்லை களர்
காஞ்சி கழக்குன்றம் மறைக் காருடணை காளத்தி
வாஞ்சிய மென் முத்தி வரும்

இப்பாடல் மூலம் அறிய முடிகிறது.

பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ள இத்தலம் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனது சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் இடையினில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ள, இந்த சோமாஸ்கந்த அமைப்பினை சேர்ந்தாற்போல் வலம் வந்து வணங்குதல் சிறப்பு.


இராசகோபுரத்தினை வணங்கி உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது நடவான மண்டபமும், வசந்த மண்டபமும்தான். அதன் பின் உட்கோபுரம் இரண்டாம் கோபுரத்தினை அடைந்து உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரத்தில் சுவாமி சன்னதியும் அம்பிகை கோயிலும் தனித்தனி பிரகாரத்தில் அமைந்துள்ளன. சுவாமி சன்னதிக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி போன்றவையும், பிராகாரத்தில் மடப்பள்ளி, அறுபத்துமூன்று நாயன்மார்களும், நடராஜர் சபா மண்டபமும், யாக சாலையும் உள்ளன. நடராஜர் சன்னதி, நவக்ரகங்கள், சோமஸ்கந்தர் சன்னதி, தல விநாயகர் கற்பக விநாயகர் சன்னதி, நடராஜருக்கு எதிரே, சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும், ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் சன்னதிகளும், தலவிருட்சமாகிய முல்லைக்கொடியும் அமையப் பெற்றுள்ளன. இந்த முல்லைக்கொடி சண்டேசுவரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலை சுற்றி முல்லை மாகாளியம்மன் திருக்கோயிலும், வரதராஜ பெருமாள் திருக்கோயிலும், பிள்ளையார் கோயில் ஒன்றும், திரௌபதி அம்மன் திருக்கோயிலும், ஒரு மாரியம்மன் கோயிலும், ஐயனார் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயில் சோமஸ்கந்தர், நடராஜர், ஆறுமுகர் ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகள் அழகாம்சம் நிறைந்தவை.

திருவிழாக்கள்:
சுவாமிக்கு வைகாசி விசாக பிரம்மோற்சவமும், அன்னைக்கு ஆடிப்பூரம், நவராத்திரி விழாக்களும், நடராஜருக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மேலும், அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீபத் திருவிழா, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ விழாக்கள் போன்றவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முதலில் சிவ வணக்கமும் சக்தி வணக்கமும் தனித்தனியாக இருந்து பின்னர் இரண்டு வணக்கமும் ஒன்றாகத் திகழந்தது. காஞ்சிபுரம், கருகாவூர் தலங்களில் சோமஸ்கந்தர் அமைப்பைக் காணலாம். போகச்சக்திக்கு சிவசன்னதிக்கு அருகில் ஆலயம் இருக்கும். இங்கே தனியே அம்பாள் சன்னதி அமைந்துள்ளதால், இது வீரசக்தி என அழைக்கப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு:
இத்திருக்கோயிலில் வளர்பிறை பிரதோஷ தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. சுக்கில பட்ஷம், கிருஷ்ண பட்ஷம் என்னும் இரண்டு பட்சத்திலும் வருகின்ற திரயோதசி திதியில் சூரியன் மறைவதற்கு முன்னதாக மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்னர் மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலம் என்கின்றனர். (மாலை 4:30 முதல் 7:30 மணி வரை உள்ள காலம்). இந்த நேரத்தில் சிவபிரான் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிகிறார் என்பது ஐதீகம்.

வாழ்க முல்லைவனநாதரின் பெருமை!!
வாழ்க கருகாத்த நாயகியின் அருள்!!
வாழ்க சீர் அடியாரெல்லாம்!!


திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரம்:
ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான் கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குநின் றான் அவன் ஆவதறிந்தே!!

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே!!

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைந் தொழிந்தானே!!

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருங்குழி தேடித் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே!!

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே!!

பூவின் மணத்தை பொருந்திய வாயுவுந்
தாவி உலகின் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவினில் மெல்ல நீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிகொண்ட போதே!!

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே!!

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே!!

ஏயங் கலந்த இருவர்தரு சாபத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காண பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே!!

கர்ப்பத்துக் கேவல மாயால் கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே!!

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலைசெய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே!!

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப்பகலோன்
இதஞ்செய்யும் மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ் செய்யும் அங்கியின் கோபந்தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந்தானே!!

ஒழிபல செய்யும் வினையுற்ற நானே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைக்
கழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே!!

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால் விரல்
அக்கரம் எட்டும் எண் சாணது வாகுமே!!

போகத்துள் ஆங்கே புகுந்து புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே!!

பிண்டத்தின் உள்ளுறுபேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தினூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே!!

இலைப்பொறி யேற்றி யெனதுடல் வைத்தமன் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பத்து நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே!!

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே!!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினும் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே!!

உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கைகலந் தேனே!!

கேட்டுநின் றேன் எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழல் பின்கரு வையுரு
நீட்டிநின் றாகத்துநேர்பட்ட வாறே!!

பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்தபின்
காவுடை தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே!!

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று காரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்றுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுஙகண்ணுதல் காணுமே!!

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிட
பண்ணுதல் செய்து பசுபாவம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக எடுத்துவைத் தானே!!

அருளள்ள தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயார் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே!!

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிற சோதி யவனும்
பகுத்துணீர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பதுவாமே!!

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதி தன் ஆண்மையே!!

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாரும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே!!

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் னாலோடில பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமாமே!!

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே!!

மாதா உதரம் மலமிகில் மந்தனும்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே!!

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அழியாகுங் கொண்டதால் ஒக்கிலே!!

கொண்டநல்வாயு இருவர்க்கும் ஒத்தொழில்
கொண்ட குழவியுங் கோமள மாயுடுங்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே!!

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந்துள்ளே பகலவன் பொன்னுருப்
போல் வளர்ந்துள்ளே பொருந்துருவாமே!!

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம் தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம் தாவதிங் காரறிவாரே!!

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மை யெவ்வாறே!!

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புற பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்
முன்புற நாசி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலுமாமே!!

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே!!

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய் இன்ப மாவதுபோல்
அதற்கது வாய் நிற்கும் ஆதிப் பிரானே!!

ஏனோர் பெருமைய னாகினும் எம்மிறை
ஊணே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினுள்ளே!!

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைகடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே!!

Thursday, December 2, 2010


பச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)

பயணங்கள் மனிதனை பக்குவப்படுத்துகின்றன. அது திருக்கோயிலை நோக்கிய ஆன்மீகப் பயணமாக இருந்தாலும் சரி, நம் நண்பர்களையும் உறவினர்களையும் காணச் செல்லும் உள்ளூர் பயணமாக இருந்தாலும் சரி, நமது வேலை நிமித்தமான வெளியூர் பயணமாக இருந்தாலும் சரி, பயணம் என்கிற விஷயம் சுவாரஸ்யம் மிகுந்த ஒன்று. நாம் அன்றாடம் பார்த்துப் பழகிய முகங்களைத் தவிர, பல ஊர்களைத் தாண்டிச் செல்லும் நெடுந்தூரப் பயணத்தின் போது பல்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அந்தப் பயணத்தில் ஏற்படும் புதிய நட்பு, சில நேரத்தில் வாழ்நாள் முழுக்க தொடரும் நட்பாகக் கூட அமைந்து விடுகிறது. பேருந்தில் ஏறியதும், யாரோ முகம் தெரியாத புதிய நபர் நமக்கு உட்கார இடம் தருவார். உட்கார இடம் கிடைக்கா விட்டாலும் நமது பையின் பாரத்தை யாரோ ஒருவர் மடியில் வாங்கிக் கொள்வார். இந்த இடத்தில் எல்லா மனிதரிடத்திலும் இருக்கும் சின்னச் சின்ன மனிதாபிமானம் எட்டிப் பார்க்கும். பேருந்தை விட்டு இறங்கி நாம் செல்லும் இடத்திற்கு வழி கேட்கும் வேளையில் தானே முன்வந்து வழி சொல்லும் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம்.

சாதாரண பயணத்திற்கே இப்படி என்றால் நம் சொந்த மண்ணை நோக்கிச் செல்லும் பயணம் என்றால் குதூகலத்திற்கு அளவே இல்லைதானே. மழையில் பயணம் அதை விட சுகானுபவம். ஜெயச்சந்திரன் ஒரு பாடலில் பாடியது போல "மழைக் காலமும் பனிக் காலமும் சுகமானது". சூரியனைப் பார்த்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது பெய்யும் மழை பலருக்கு சந்தோஷத்தையும், பலருக்கு மிகுந்த சிரமத்தையும் கொடுத்துள்ளது. வாழ்க்கையில் எல்லாமே இப்படித்தானே. ஒருவருக்கு நல்லதாகத் தோன்றும் ஒரு செயல் மற்றவருக்கு கஷ்டத்தைத் தருவது அன்றாடம் நிகழ்வது.

இது போன்றதொரு மழைக் காலத்தில் தொடங்கியது எங்கள் பயணம் கும்பகோணத்தை நோக்கி. திருச்சியிலிருந்து, தஞ்சை வழியாக கும்பகோணம், புகை வண்டிப் பயணம். நகர நெரிசல்களில் இருந்து விடுபட்டு தூய காற்றினை சுவாசித்தபடியே, ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே தொடர்ந்தது உல்லாசப் பயணம். வெயில் காலத்திலேயே இவ்வூர் வயல்களின் வனப்பு கண்ணைப் பறிக்கும். இப்போதோ மழையில் நனைந்த வயல்களின் பச்சை வண்ணமோ ஜொலிக்கிறது!!! இயற்கை அழகை விஞ்சியது உலகில் வேறெதுவும் இல்லை.


இயற்கை அழகு நிறைந்தது மட்டுமல்ல சோழ வளநாடு. கலை அழகிலும் விஞ்சி நிற்கும் பகுதிதான். சோழர்கள் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி உள்ளார்கள் என்பது வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்க்கும்போது மட்டுமல்ல, இது போன்ற பயணங்களின் போதும் நமக்குத் தெரிய வருகிறது. இசை, நாட்டியம், இலக்கியம் தவிர சிற்பக் கலையிலும் மேலோங்கி திகழ்ந்துள்ளனர் என்பது இப்பகுதி கோயில்களைக் காணும்போது நிரூபணமாகிறது. மிகவும் வலிமை வாய்ந்த பேரரசர்களாக விளங்கிய சோழ மன்னர்கள் தங்களது ஆட்சிப் பகுதிகளை கடல் தாண்டியும் விரிவுபடுத்தி இருந்திருக்கிறார்கள்.

சோழர்களது சிற்பக் கலையின் உன்னதம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக, முதலாம் இராஜராஜ சோழனால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், இராஜேந்திர சோழனால் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரம், இரண்டாம் இராஜராஜ சோழனால் 12- ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், என அடுக்கிக்கொண்டே போகலாம் சோழர்கள் சிற்பக் கலையின் மேல் கொண்டிருந்த தீராத காதலை.

இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த சோழநாட்டின் முக்கிய பகுதி கும்பகோணம். குடந்தை, குடமூக்கு, திருக்குடந்தை, பாஸ்கரக்ஷேத்திரம் என்று பல்வேறு பெயர்களைக் கொண்ட ஆன்மீகத் தலம் இந்த கும்பகோணம். கோயில்களையும், குளங்களையும் அதிகம் கொண்ட ஊர் கும்பகோணம். காவேரி, அரசலாறு என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள அழகிய ஊர் கும்பகோணம். கும்பகோணத்தை சுற்றியும், ஊருக்குள்ளேயும் சுமார் 180 கோயில்களுக்கு மேல் உள்ளதாகச் சொல்கிறார்கள். கும்பகோணம் வெற்றிலை உலகமெங்கும் பிரசித்தி பெற்றது. கும்பகோணத்திற்கு பக்கத்தில் உள்ள திருபுவனம் பட்டிற்கு பெயர் பெற்ற ஊராகத் திகழ்கிறது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள நாச்சியார்கோயில், தென்னிந்தியாவிலேயே பித்தளை குத்துவிளக்குகள், பூஜை சாமான்கள், தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. நவக்ரஹ ஸ்தலங்கள், பாடல் பெற்ற ஸ்தலங்கள், திவ்யதேசங்கள், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை என பல்வேறு முக்கியமான ஆன்மீகத் தலங்கள் கும்பகோணத்தை சுற்றியே அமைந்துள்ளன. இங்குள்ள அரசு கல்லூரி தென்னிந்தியாவின் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் சிறப்புடையது. கணித மேதை ராமானுஜம் இந்தக் கல்லூரியில் பயின்றவர்தான்.

கும்பகோணம் என்றால் காட்டாயம் நம் நினைவில் வந்து நிற்பது மகாமகம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம், அந்த மகாமகக் குளத்தில் நீராடுவது, கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, மகாநதி, நர்மதா, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடிய புண்ணியம் கிட்டும். இந்த கும்பகோணம் நகரம் புராண காலத்தில் இருந்து, பல்வேறு காவியங்களில் இடம்பெற்றுள்ளது. இது போன்றதொரு அமைதியும், அதே நேரத்தில் சகல வசதிகளும், அதிக செலவும் இல்லாத, இயற்கை எழில் கொஞ்சும் கும்பகோணத்தில் வாழ்க்கையின் நிறைவுப் பகுதியையாவது வாழ மனம் ஏங்குகிறது.

இப்படி கும்பகோணம் பல்வேறு ஆன்மீகத் தலங்களின் குடியிருப்பாக இருந்தாலும், அவற்றுள் சிற்பக் கலையின் மகோன்னதமாக ஒரு கோயில் திகழ்கிறது. அதுவே கும்பகோணத்தில் இருந்து 3 km தூரத்தில் அருள்மிகு ஐராவதேஸ்வரர் குடிகொண்டுள்ள அழகிய கிராமம் தாராசுரம். கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு சிற்றுந்தை(மினி பஸ்) பிடித்து ஏறி அமர்ந்தால் பத்தே நிமிடத்தில் வந்து விடுகிறது தாராசுரம். கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சற்றே உட்புறமாக அமைந்துள்ளது தாராசுரம். தாராசுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறமாக சென்று, அரசலாற்றின் மேலே உள்ள சிறிய பாலத்தின் வழியாக நடந்து, சில தெருக்களைக் கடந்து சென்றால் பரந்து விரிந்த நிலப்பரப்பில் காணப்படுகிறது தாராசுரம் அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்.


இத்திருக்கோயில் மாநில அரசின் இந்து அறநிலையத் துறையின் கீழும், மத்திய அரசின் ASI எனப்படும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கீழும், உலகெங்கும் அமைந்துள்ள கலைப் பொக்கிஷங்களைத் தேர்ந்தெடுத்துப் பாதுகாத்துவரும் UNESCO அமைப்பின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் நிரம்பி வழியும் சிற்பங்களும், அவற்றின் பேரழகும், நுணுக்கங்களுமே இந்த அனைத்து அமைப்புக்களையும் இந்த கோயிலை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது.


இத்திருக்கோயிலின் அமைப்பு அப்படியே தஞ்சை பெரிய கோயிலின் வடிவத்தை போன்றே அமையப் பெற்றுள்ளது. 12-ம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜ ராஜ சோழனால் கட்டப் பட்ட சிற்பக் கோயில் இது. மழை பெய்து திருக்கோயிலே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. ஒரு ஆற்றின் நடுவே அமைக்கப் பட்ட கோயிலைப் போல காட்சி அளித்தது. முதலில் நம்மை வரவேற்பது நந்தி பகவான். அதையடுத்து ஐந்து கலசங்களைத் தாங்கிய அழகிய கோபுர வாசல் வழியாக திருக்கோயில் பிரவேசம். இத்திருக்கோயில் உயர்ந்த மதில் சுவர்களுடன், திருக்கோயிலைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு உள்ளது. இந்த மழையில் அவை நீரால் நிரம்பி உள்ளன.

நந்தி பகவான் அமர்ந்து அருள்பாலிக்கும் சிறிய மண்டபத்தின் தூண்கள், படிகள் என அனைத்திலும் சின்னச் சின்ன சிற்ப வேலைப்பாடுகள். இக்கோயில் சிறப்புகளில் ஒன்றான இசைப் படிகள் இந்த நந்தி பகவான் அமர்ந்துள்ள மண்டபத்தின் பின் புறம் அமைந்துள்ளது. ஏழு கருங்கற் படிகள் ஏழு ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.



நாம் கோயிலுக்குள் நுழையும்போது உள்ள மண்டபத்திலும் சரி, உள்ளே உள்ள கோபுரங்களிலும் சரி ஒவ்வொரு அடுக்குகளிலும், ஒரு இடம் கூட விட்டு வைக்காமல் சிற்பக் களஞ்சியமாக விளங்குகிறது. இயற்கை சீற்றம் முதற்கொண்டு பல்வேறு சூழ்நிலைகளைத் தாண்டி இக்கோயிலின் எதிரே காணப்படும் ஒரு வாயிலுடன் கூடிய மண்டபம். உடைந்த நிலையில் கோபுரம் எழும்பாத நிலையில் காணப் படுகிறது.

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள கோயில் என்பதால் கோயிலைச் சுற்றி அழகிய புல் தரையுடன் கூடிய பூங்கா ஒன்று அமைக்கப் பட்டு அழகாக பராமரிக்கப் பட்டு வருகிறது. இத்திருக்கோயிலும் புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு கற்களாக கழற்றி எடுத்து அதில் எண்கள் இட்டு, அந்த கற்களை சுத்தம் செய்து மீண்டும் ஒன்று சேர்த்து மிக நல்ல முறையில் கோயில் சிற்பங்கள் பாதுகாக்கப் பட்டுவருகின்றன.


கொடி மரத்தை வணங்கி கோயிலின் உள்ளே சென்றதும் ஏதோ சிற்பக் கூடத்திற்குள் நுழைந்தது போன்ற பிரமை நமக்கு. ஏற்கனவே புதுப் பொலிவுடன் விளங்கும் கோயில் மழையில் நனைந்து புளி போட்டு தேய்த்த பித்தளைப் பாத்திரம் போல பளபளவென காட்சி அளித்தது. கோயில் முழுவதும் தூண்கள் நிறைந்து காணப்படுகின்றன.

மண்டபங்களின் கீழ் பகுதியில் நடனத் தாரகைகளின் நடன அமைப்புக்கள், குத்துச் சண்டை வீரர்களின் சண்டைக் காட்சி, இரண்டு செம்மறி ஆடுகள் தலையால் முட்டிக் கொண்டு சண்டையிடுவது போன்ற சிற்பக் காட்சி, பூதகணத்தின் பின் செல்லும் காளை மாட்டின் தோற்றம், மனித உருவமும் விலங்கு உருவமும் சேர்ந்து அமைந்துள்ள சிற்பம், யோகாசனம் செய்வது போன்ற தோற்றத்துடன் கூடிய சிற்ப அமைப்பு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சிற்பங்களின் அமைப்பினை.




இத்திருக்கோயிலே ஒரு தேர் போன்ற அமைப்புடனேயே காணப் படுகிறது. தாராசுரம் கோயில் உள்ளே உள்ள கோபுரம் ஒற்றைக் கலசத்துடன் கூம்பிய வடிவில் தோன்றுகிறது. இந்த கூம்பிய விமானத் தோற்றமும் அதற்குக் கீழே இரு புறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய தேர், ரதம் போல காட்சி தருகிறது. இது போன்ற மண்டபத்தின் அமைப்பு வான்வெளி ரகசியத்தைக் காட்டுவதாக வான்வெளி அறிஞர்கள் கூறியதாக தகவல்.


இராமாயணம், மகாபாரதம், ரதி மன்மதன் கதைகள், சிவபுராண கதைகள், மேலும் அதிபத்தர், இயற்பகையார், இசைஞானியார், அமர்நீதியார், எறிபத்தர், ஏனாதிநாயனார் உட்பட அறுபத்துமூன்று நாயன்மார்களின் கதைகளும் கோயில் முழுதும் ஆங்காங்கே சிற்ப வடிவில் காணப்படுகின்றன. பரதநாட்டிய அடவுச் சிற்பங்கள் அதிகம் காணப் படுகின்றன.

ஒவ்வொரு தூண்களின் நான்கு பட்டைகளிலும் சிற்பங்கள் அழகிய அரிய சிற்பவகைகள். தூண்களில் காணப்படும் சிற்பங்கள், இரண்டு பெண்கள் ஒன்றாக நடனமாடும் தோற்றம், ஓருடல் சிற்பங்கள், நர்த்தன விநாயகரின் வடிவம், போருக்குச் செல்லும் வீரர்கள் கையில் வில், வேல் என போர்கருவிகளுடன் காணப் படுவது, சிவபிரான் நந்தி மேல் அமர்ந்தும் பூதகணங்கள் அவருக்கு பணிவிடை செய்வதும், சிவனும் பார்வதியும் நந்தி தேவர் மேல் பவனி வர பக்தகோடிகள் பின்தொடரும் காட்சி, சிவபிரான் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்க, அவரது சீடர்கள் குருவின் போதனைகளை கேட்கும் விதமான தோற்றம், என பலவகையான சிற்ப வடிவங்கள்.






மண்டபங்களின் கீழ்புறம், தூண்களின் நான்குபுறம் மட்டுமல்லாது, ஒவ்வொரு மண்டபங்களின் மேற்கூரையிலும் கணக்கிலடங்கா சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. இங்கும் நடன மங்கைகளின் தோற்றம், விநாயகர் தோற்றம் என சிற்ப வேலைப்பாடுகள். கட்டம் கட்டமாக வடிவமைக்கப் பட்டு அந்த கட்டங்களுக்குள்ளே பல நூறு சிற்பங்களா, சிற்ப ஓவியங்களா என ஐயப் பட வைக்கும் தோற்றம்.



இத்திருக்கோயிலின் தல விருட்சம் வில்வமரம்.


நீண்ட மண்டபத்துடன் கூடிய கோபுரத்தில் சுவர் முழுக்க சிற்பங்களோடு, கருப்பு வண்ண கருங்கற்களில் அன்னை, அப்பனது பல்வேறு அவதாரங்களின் சிற்ப வடிவம். அடிமுடி தேட வைக்கும் அண்ணாமலையார் லிங்கோத்பவரின் சிற்ப வடிவம் கோயில் சுவற்றின் ஒரு பக்கம்.


கோயில் கோபுரத்தின் மேற்புறத்தில் எத்தனை சிற்பங்கள், அவற்றில் ஒன்றாக கலைகளின் தந்தை நடராஜரின் அழகிய சிற்பம்.


வண்ணமயமான ரதத்தினை குதிரை இழுத்துச் செல்வது போன்ற அற்புதத் தோற்றம் தேர் சக்கரத்துடன்.


ஐராவதேஸ்வரர் குடிகொண்டுள்ள சன்னதியின் முன்புறம் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்களில் ஒரு வினோத மிருகம் அந்த மண்டபத்தையே தாங்கிக் கொண்டுள்ளது போன்ற தோற்றம். அந்த மிருகம், யானையின் தந்தம், தும்பிக்கை, சிங்கத்தின் தலை, பற்களுடன் கூடிய முக அமைப்பு, செம்மறி ஆட்டின் கொம்பு, மாடு அல்லது மான் இவற்றின் காது, முதலையின் கால் அவற்றின் நக அமைப்பு என நிறைய மிருகங்கள் ஒன்று சேர்ந்து அமைந்த வடிவமாக இந்தச் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. என்ன விஷயத்தை உணர்த்த இந்த வடிவத்தை செதுக்கினார்களோ தெரியவில்லை. இந்த சிற்பத்தை பார்க்கும்போது எனக்குத் தோன்றிய ஒரு விஷயம், தற்கால மனிதன் தன்னிடம் உள்ள தீய குணங்களை விடுத்து, நல்ல குணங்களை தக்க வைத்துக் கொண்டு, இந்த விலங்குகளிடம் உள்ள நல்ல குணங்களைப் பெற்று நல்ல மனிதனாய் வாழ வேண்டும் என்பதை இந்தச் சிற்பம் உணர்த்துவதாகப் பட்டது.


வேணுகோபாலனின் இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் யாருமுண்டோ. இசையில் மயங்கி நிற்கும் இராதை வேணுகோபாலனுடன்.


தானத்தில் சிறந்தது கண்தானம். இதனை அப்போதே நிரூபித்துக் காட்டிய கண்ணப்ப நாயனாரின் அழகிய தோற்றம். கடவுள் முன் கவி பாடுபவனும் ஒன்றுதான், காட்டு வாசியும் ஒன்றுதான். தன் அன்பை மென்மையாக அல்லாமல், மேன்மையாக வெளிப்படுத்தி நாயன்மார்களுள் ஒருவராகிப் போன புண்ணியவானின் உன்னதச் சிற்பம்.

கல்விக்குத் தலைவியான சரஸ்வதி தேவியின் அழகிய சிற்பம்.

இவரிடம் அனுமதி பெற்றே சிவனை காணச் செல்வது கோயில் மரபு. சிவபிரானின் ஆயுட்கால காவலன். அதிகார நந்தியின் அற்புதத் தோற்றம்.

உலகத்துக்கெல்லாம் படியளக்கும் அன்னபூரணித் தாயாரின் வார்த்தைகளால் வடிக்க முடியாத காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சிற்பம். அன்னப் பாத்திரம் ஏந்திய இவரது கை விரல்களின் நகங்கள் கூட தத்ரூபமான வடிவத்துடன் காட்சி அளிக்கிறது. கால் விரல்களும் அவ்வாறே.



முனிவரின் தவக்கோலம் நம் கண் முன்னே.

எட்டு கையுடன் தோன்றும் மகிஷாசுரமர்த்தினியின் முழு வடிவம்.

முப்புரம் எரித்த திரிபுராந்தகன் கதை சொல்லும் சிற்பம்.

யானையை வதம் செய்து அதன் தோலைத் தன்மீது உடுத்திக் கொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர் கஜசம்ஹாரமூர்த்தியின் கதை மற்றொரு சிற்பம்.



இடப் பக்கத்தில் இருந்து பார்த்தால் ஒரு காளையின் உருவம், வலப் பக்கத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானையின் வடிவம் தெரிகிறது. இந்தச் சிற்பம் அதிசயத்தின் உச்சம்.


கண்ணப்ப நாயனாரின் காலணிகள் சிற்பவடிவில். காட்டில் அலையும் அவர் அணிந்திருந்த காலணியின் தோற்றம், காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்த அமைப்பு.


இந்திரனின் வெள்ளை யானை, துர்வாச முனிவரின் சாபத்தினால் நிறம் மாறியது. தனது சாபம் நீங்கி சுய உருவம் அடைய வேண்டி இத்திருக்கோயில் குளத்தில் நீராடி தன் சாபம் நீங்கப் பெற்றது. இந்த யானையின் பெயர் ஐராவதம் என்றும், இதன் சாபம் இக்கோயிலில் நீங்கப் பெற்றதன் காரணமாக இத்தல இறைவன் ஐராவதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார் என்பதும் தல வரலாறு.

மேலும் எமன் ஒரு ரிஷியின் சாபத்தால் தனக்கேற்பட்ட சரும நோய் நீங்க இக்கோயில் குளத்தில் குளிக்க சரும நோய் நீங்கப் பெற்றான் எமதருமன். இதன்காரணமாகவே இக்கோயில் தீர்த்தம் எம தீர்த்தம் என அழைக்கப் படுகிறது.


பல நூறு கோயில்களுக்குச் சென்று பல ஆயிரம் சிற்பங்களை, அவற்றைக் காணும் பாக்கியத்தினை ஒரே கோயிலிலேயே காணும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இந்த தராசுரம் திருக்கோயில். மத வேறுபாடுகளின்றி அனைவரும் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது இதன் சிற்பக் கலை சிறப்பிற்காகவே நம் அடுத்த தலைமுறையினரும் கட்டாயம் காண வேண்டிய கலைப் பொக்கிஷம்.

பச்சை பூமி - முதல் பாகம்

Related Posts with Thumbnails