Monday, August 9, 2010


மாயவரம் மெது பகோடா

நம் வீட்டிற்கு திடீரென்று விருந்தினர் வந்து விட்டார்கள் என்றால் எங்கள் மாயவரம் பகுதியில் இந்த மெது பகோடாதான் செய்து தருவார்கள். குழந்தைகள் பள்ளிவிட்டு வந்தவுடன் ஏதாவது நொறுக்குத் தீனி கேட்பார்கள். சரியாக 10 நிமிடத்தில் செய்து கொடுத்து விடலாம். செய்வதும் மிகச் சுலபம். மாலை வேளையில் காபி, டீ, உடன் வைத்து சாப்பிடச் சுவையாக இருக்கும். எங்கள் ஊர் டீக்கடைகளில் இந்த மெது பகோடா ரொம்ப பிரபலம்.

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் : 4
பச்சை மிளகாய் : 2
கடலை மாவு : 100 கிராம்
அரிசி மாவு : 2 ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் : 1 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : வறுக்கத் தேவையான அளவு


செய்முறை:

பெரியவெங்காயத்தை நீள வாக்கிலும், பச்சை மிளகாயை பொடிப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி, உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையில் நறுக்கிய வெங்காயத்தையும், பச்சை மிளகாவையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

சூடான எண்ணையில், கலந்து வைத்த மாவை உதிரி, உதிரியாகப் போடவும். அடுப்பை குறைந்த தீயில்
வைத்து இந்த பகோடாவை செய்ய வேண்டும். பகோடா மொறுமொறுவென்று வரும் வரை காத்திராமல், முக்கால் பதம் வேகும்போதே எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் பார்ப்பதற்கு பொன் முறுகலாகவும், மெதுவாகவும் இருக்கும். இந்த பகோடா பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை கஷ்டமில்லாமலும், ருசித்தும் சாப்பிடுவர்.

18 comments:

ஸ்ரீ.... said...

காலையில் இடுகைகளை வாசிக்க வந்தவனை பசிக்க வைத்துவிட்டீர்கள். சுவையான இடுகை!

ஸ்ரீ....

a said...

படத்த பார்த்தவுடனே நாக்குல எச்சில் ஊருது...

காவேரி நகர் I.O.B எதிரில ஒரு தள்ளுவண்டி கடையில போடுற மெது பகொடா சூப்பரா இருக்கும்.

இப்ப அந்த கட இருக்கான்னு தெரியல...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஸ்ரீ.

நன்றி யோகேஷ். எனக்கும் தெரியவில்லை. பார்த்தால் சொல்கிறேன்.

Menaga Sathia said...

மிகவும் அருமையாக இருக்கு....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

vanathy said...

நல்லா இருக்கு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி வானதி.

ஆயில்யன் said...

//காவேரி நகர் I.O.B எதிரில ஒரு தள்ளுவண்டி கடையில போடுற மெது பகொடா சூப்பரா இருக்கும்.//

அதே! அதே! ரசிகர்மன்றத்துல சேர்த்துக்கிடறீங்களா பாஸ் :)))))


அந்த கடை முன்னாடி அர்ச்சனாவுக்கு பக்கத்துல கொஞ்சம் தூரம் தள்ளி நின்னுக்கிட்டிருந்து [அது ஒரு 10 வருசம் முந்தி இருக்கும் ] பிறகு அப்படியே ஐ ஒ பி பக்கம் வந்து செட்டிலாகிடாங்க! பிறகு நாராயணன்பிள்ளை சந்து முனையில ஒரு தள்ளுவண்டி கடை அங்கேயும் கூட்டமா இருக்கும் பிறகு அங்கே வடைதான் ஸ்பெஷலாகிடுச்சு அப்படிக்கா நேரா போனா குருஞானசம்பந்தர் ஸ்கூல் வாசல்ல ஒரு கடை அது நைட்டு 7 மணிக்குத்தான் ஸ்டார்ட் ஆகும்!

இப்படிக்கு
ஊர் ஃபுல்லா சுத்தி சுத்தி மெதுவடை டீ குடிச்ச புண்ணியவான்
மீ த ஆயில்யன்

mohamedali jinnah said...

அருமையாக இருக்கும் .

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஆயில்யன்,
மாயவரத்துல உங்க புண்ணியத்துல டீக்கடைகள் வியாபாரம் அமோகமா நடந்துருக்கும் போல தெரியிது.

@நீடூர் அலி,
நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா நாங்களும் மெதுபக்கோடா பொட்டனம் வாங்கித்திம்போமே.. கொறநாடு காய்கறி கடை பக்கத்துல.. :)

புவனேஸ்வரி ராமநாதன் said...

அப்படியா, எங்க ஸ்பாட் கச்சேரி ரோடு மற்றும் கண்ணாரத்தெரு.

R.Gopi said...

புவனா...

நீங்க மாயவரமா? எங்க அப்பா கூட மாயவரம் தான்..

அந்த மொறு மொறு மெது பகோடாவ பார்த்தாலே நாக்குல தண்ணி ஊறது...

ம்ம்ம்ம்.... சாப்பிட்டு ரொம்ப நாள் ஆறது....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நானும் மாயவரம் தான். தங்களின் தந்தை மாயவரம் தான் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி கோபி.

அப்பாதுரை said...

நாளைக்கு முயற்சிப் பண்ணப் போகிறேன்... பாக்கவும் படிக்கவும் இத்தனை ஜோரா இருக்கும் பொழுது..

புவனேஸ்வரி ராமநாதன் said...

செய்து பார்த்துவிட்டு அவசியம் சொல்லுங்கள். மிக்க நன்றி.

க.கமலகண்ணன் said...

பார்த்த உடனே நாக்கு ஊறுது இன்னிக்கு வீட்டுக்கு போய் மனைவியை செய்ய சொல்லி சாப்பிடனும்...

மிக்க நன்றி சகோதரி புவனா

புவனேஸ்வரி ராமநாதன் said...

செய்து சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க. நன்றி கமலகண்ணன்.

Post a Comment

Related Posts with Thumbnails