Tuesday, August 3, 2010


ஆடி வரும் காவிரி

உலகின் எந்த நாகரிகமாக இருந்தாலும் அது ஆற்றுப் படுகையில்தான் செழித்து வளர்ந்துள்ளது. பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு, இவற்றில் தண்ணீருக்கே மிக உயர்ந்த இடம். நமது பூமியை முக்கால் பாகம் நீர் தான் சூழ்ந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் தற்போது நிலவில் கூட தண்ணீர் இருப்பதாக நம் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


பொங்கி வரும் தண்ணீரைக் கண்டால் நம் எல்லோருக்குமே சந்தோஷம்தான். அதுவும் பொங்கி வரும் காவிரியைக் கண்டால் சந்தோஷத்திற்குக் கேட்கவா வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதி கல்லணை திறக்கப்பட்டு, மேட்டூரில் இருந்து அன்ன நடை நடந்து வந்த காவேரி, கல்லணைக் கதவுகள் திறந்ததும் ஆனந்த நடனமாடிய காட்சி கண்கொள்ளாக் காட்சி.


தீர்க்கதரிசி கரிகாலச் சோழனால் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது இந்த கல்லணை. உலகிலேயே மிகப் பழமையான இன்னமும் நல்ல நிலையில் பயன்பாட்டில் உள்ள நீர்த்தேக்கம் நமது கல்லணை என்பதில் நாம் பெருமை கொள்வோம். காவேரி நமது தமிழகத்தில் சேலம், ஈரோடு இடையே ஆரம்பித்து தஞ்சை, திருச்சி என்று பல ஊர்களைத் தாண்டி நாகை மாவட்டத்தில் பூம்புகார் என்னும் ஊரில் கடலில் கலக்கிறது. இந்த காவிரியின் நடுவில் தான் கல்லணை கட்டப் பட்டுள்ளது. சுமார் 1000 அடி நீளம் உள்ளது இந்த கல்லணை.

கரிகாலச் சோழன் சிலை

கல்லணை, திருச்சியில் இருந்து சுமார் 25 km தொலைவில் உள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதை என்பதற்கிணங்க, கல்லணையில் திறந்து விடப் படும் தண்ணீர் நமது விவசாயிகளுக்கு இந்த வருடம் அமோக பயிர் விளைச்சலைத் தர கடவுள் அருள வேண்டும். விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்ற ரபீந்தரநாத் தாகூரின் வார்த்தைகளுக்கு ஏற்ப விவசாயி செழித்தால்தான் நம் அனைவரின் வாழ்வும் செழிக்கும்.


காவிரிக் கரையோரம் உள்ள ஊர்களில் முக்கியமாக தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள ஊர்களில் ஆடிப்பெருக்கு மிகவும் சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப் படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி சொல்லும் விழாவாகவே ஆடிப்பெருக்கு நடைபெறுகிறது. ஆடி 18-ம் நாள், ஆகஸ்ட் 3-ம் தேதி இந்த வருடம் ஆடிப் பெருக்கு கொண்டாடப் படுகிறது.


ஆற்றங்கரையோரம் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி காப்பரிசி கிளறி, பல்வேறு வகையான சாதம் கிளறி எடுத்துக் கொண்டு வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, பழங்கள் வைத்து, காவிரி
த் தாய்க்குப் படைத்து மஞ்சள் கயிற்றினை, நமக்குத் தெரிந்தவர், தெரியாதவர்களுக்கு நாம் கட்டி விட, அவர்கள் நமக்கு கட்டிவிட, அங்கே அனைவரது பாசமும், ஒற்றுமையும் வெளிப்படும். ஆடிப்பெருக்கு அன்று புது மணப் பெண்ணிற்கு தாலி பெருக்கிப் போடுவார்கள். காதோளக் கருகமணி, எலும்பிச்சம்பழம் இவற்றை அம்மா காவிரித் தாயே, எங்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களையும், நலன்களையும் தா என்று வேண்டிக்கொண்டு தண்ணீரில் விடுவார்கள்.


இந்த
ஆண்டு நல்ல மழையும் பெய்து விவசாயமும் செழிக்க நாம் இறைவனை வேண்டுவோம். அனைவருக்கும் நலன்கள் பெருக, சுகங்கள் பெருக, அனைத்து செல்வங்களும் பெருக, ஆடிப்பெருக்கை கொண்டாடுவோம்.


11 comments:

Unknown said...

காவிரியின் அழகே.. அழகு ...

சௌந்தர் said...

போட்டோவில் பார்க்கும் போதே அழகா இருக்கிறது

ராம்ஜி_யாஹூ said...

உலகின் எந்த நாகரிகமாக இருந்தாலும் அது ஆற்றுப் படுகையில்தான்செழித்து வளர்ந்துள்ளது.

அற்புதமான வரிகள். மனித சிந்தனைகள், பழக்கங்கள் கூட நீரை சார்ந்து தான் மாறுகிறது என நினைக்கிறேன்.

Chitra said...

காவிரியின் அழகை, படங்கள் மூலமாகவும் உங்கள் பதிவின் மூலாமாகவும் ரசிக்க வைத்ததற்கு நன்றி.

தமிழ் உதயம் said...

ஆடிப்பெருக்கன்று அழகான படங்களுடன் ஒரு நல்ல பதிவு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி செந்தில்.

நன்றி சௌந்தர்.

நன்றி ராம்ஜி.

நன்றி சித்ரா.

நன்றி தமிழ் உதயம்.

அம்பிகா said...

\\உலகின் எந்த நாகரிகமாக இருந்தாலும் அது ஆற்றுப் படுகையில்தான்செழித்து வளர்ந்துள்ளது\\
உண்மைதான்.
புகைப் படங்கள் அழகு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி அம்பிகா.

Madhavan Srinivasagopalan said...

நல்லா, விலாவாரியா, படத்தோட சொல்லிட்டீங்க.. நன்றி...
நாகூட சுருக்கமா இதைப் பத்தி சொல்லியிருக்கேன்.. என்னோட வலைப்பூவுல..http://madhavan73.blogspot.com/2010/08/18.html

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மாதவன். ஏற்கனவே படித்துவிட்டேன்.

R.Gopi said...

புவனா...

பொங்கி வர்ற காவிரிய பாக்கறச்சே, அந்த நாள்ல 18ம் பேர் அன்னிக்கு, ஒரு சின்ன சப்பரம் இழுத்துண்டு காவிரி கரைக்கு போய், கட்டு சாதம் சாப்பிட்டது ஞாபகத்துக்கு வர்றது....

அது ஒரு இனிய காலம்... மலரும் நினைவுகளை எழுப்பிய உங்களின் இந்த பதிவிற்கு ஒரு பெரிய ஜே போட்டுக்கறேன்....

Post a Comment

Related Posts with Thumbnails