Saturday, September 11, 2010


பிள்ளையார் கொழுக்கட்டை

கிண்ணம் செய்ய தேவையான பொருட்கள் :
பச்சரிசி : 500 கிராம்
நல்லெண்ணெய் : 1/2 குழிக்கரண்டி
உப்பு : ஒரு சிட்டிகை

தித்திப்பு பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு : 250 கிராம்
தேங்காய் : 1/2 மூடி
வெல்லம் : 250 கிராம்
ஏலக்காய் : 3

கார பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:
முழு வெள்ளை உளுத்தம்பருப்பு : 250 கிராம்
சிவப்பு மிளகாய் : 4
தேங்காய் : 1/4 மூடி
கடுகு : 1/2 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு

மேல்மாவு செய்முறை:
முதலில் பச்சரிசியை நன்றாக ஊற வைக்கவும். நன்கு ஊறிய பச்சரிசியை மிக்ஸியில் நன்றாக பட்டு போல, நீர்க்க அரைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்திரத்தில் சிறிது தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு, நல்லெண்ணெய் விட்டு இதன்மேல், அரைத்து வைத்துள்ள அரிசி மாவினைக் கலந்து நன்றாகக் கிண்டிக்கொண்டே இருக்கவும். இந்த அரிசி கலவை மஞ்சள் நிறமாக, பளபளவென வந்ததும் இறக்கிவிடவும். நன்கு வெந்த இந்த மேல் மாவினை ஒரு பாத்திரத்தில் வைத்து வெள்ளைத் துணியால் மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

தித்திப்பு பூரணம் செய்முறை:
கடலைப் பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப் பருப்பை குக்கரில் நன்றாக வேகவைக்கவும். அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லப்பாகு,
வேகவைத்து மசித்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய் இவற்றை கலந்து கொதிக்க விடவும். இந்த கலவை பூரணம் பதத்திற்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.


கார பூரணம் செய்முறை:
முழு வெள்ளை உளுத்தம் பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய், உப்பு, இவற்றை மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதினை இட்லி பானையில், இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெந்த உளுந்து கலவையை உதிர்த்து விடவும். இதில் தேங்காய் போட்டு பிரட்டவும்.


இத்தனையும் தயார் செய்து கொண்டு, மேல்மாவினை கிண்ணம் போல் செய்து அல்லது அவரவர் விருப்பம் போல் வடிவத்தில் செய்து, தயார் செய்து வைத்துள்ள பூரணங்களை உள்ளே வைத்து மூடி, இட்லி பானையில் ஆவியில் வேக வைக்கவும். எல்லோருக்கும் பிடித்த, பிள்ளையாருக்கும் பிடித்த கொழுக்கட்டை தயார்.

****************

விநாயகருக்கு மிக உகந்தது கொழுக்கட்டை என்றழைக்கப்படும் மோதகம். பிரம்மம் எப்படி எங்கும் பரந்து, பரவி இருக்கிறதோ, அதுபோல் விநாயகர் எங்கும் எதிலும் வியாபித்து இருக்கிறார். நம் உள்ளேயும், வெளியேயும் நிறைந்து இருக்கும் விநாயகர், தன் இல்லம் வரப் போகிறார் என குறிப்பால் அறிந்தாள் அருந்ததி. பிரம்மம் அண்ட வெளி எங்கும் நிறைந்திருக்கிறது என்ற ரகசியத்தை அறிந்த அருந்ததி, இந்த உண்மையை இவ்வுலகிற்கு உணர்த்த விரும்பினாள்.


அண்டம் என்ற பொருள் பூரணமாக நிறைந்துள்ளது என்பதை உணர்த்தும் விதத்தில், உள்ளே அமிர்தம் போன்ற தித்திப்பான பூரணத்தை உள்ளே வைத்து கொழுக்கட்டை செய்து, தன் இல்லம் வரும் விநாயகருக்குப் படைத்தாராம். விநாயகரும் அதனை ஏற்று அருந்ததி தம்பதியருக்கு நன்மை தரும் வரங்களை அளித்தாராம்.

இந்த தத்துவத்தை உணர்த்தும் விதத்திலேயே கணபதி எப்போதும் தன் கையில் மோதகத்துடன் காணப் படுகிறார்.

****************

அருகம்புல்லின் மகிமை:
தமிழ் மொழியிலே அருகு என்றும், அருகம் புல் என்றும் வடமொழியிலே தூர்வா என்றும் அழைக்கப்படும் அருகம்புல் வீரியமுள்ள மருந்தாகும். அருகம்புல் பலவகைப்படும். அவை,
ருகு
உப்பருகு
கூந்தலருகு
சிற்றருகு
கொடியருகு
புல்லருகு
பேரருகு
பாளையருகு
வெள்ளருகு

அருகம்புல் இயற்கையில் முதல் மூலிகை. தெய்வீக மூலிகை. மிக குளிர்ச்சி உடையது. கோடையிலும் வாடாது. அருகம்புல்லைக் கொண்டு செய்யப்படும் தூர்வாதி தைலம், பலவிதமான நோய்களைத் தீர்க்கக் கூடியது. விநாயகருக்கு உகந்த மாலை அருகம்புல் மாலை.

****************

சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய விநாயகர் பாடல்களில் இரண்டு..

விநாயகனே வினை தீர்ப்பவனே...


ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்...


****************

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்

14 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.
கொழுக்கட்டை சாப்பிட்ட ஒரு உணர்வை உங்கள் பதிவும், படங்களும் தந்தன எண்டு சொன்னால் மிகை ஆகாது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராம்ஜி.

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பகிர்வு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராமலக்ஷ்மி.

R.Gopi said...

புவனா மேடம்....

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், ஏனைய வலையுலக தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்....

பதிவு வழக்கம் போல களை கட்டியது...

கூடவே அந்த மோதகம்.... யம்மா... பார்த்தாலே சாப்பிட தூண்டும் வகையில் இருந்தது...

சாப்பிட தான் முடியல.... அட்லீஸ்ட் கண்ணால பார்த்து சந்தோஷப்பட்டுப்போமே....

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி கோபி. உங்களுக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

a said...

aha......... kozhukkattai super........

(nankalum nethu seythu sappittom...)

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி யோகேஷ்.

Menaga Sathia said...

சூப்பர்ர் கொழுக்கட்டைகள்...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி மேனகா.

Jaleela Kamal said...

இரண்டு கொழுக்கட்டையும் ரொம்ப அருமை

எனக்கு ரொம்ப பிடிக்கும்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ஜலீலா மேடம்.

அப்பாதுரை said...

செய்து பார்க்கத் தோன்றுகிறது.
ஒரு விடுமுறை நாளில் ட்ரை பண்ணிவிட்டு திரும்ப வந்து சொல்கிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அவசியம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க. நன்றி அப்பாதுரை.

Post a Comment

Related Posts with Thumbnails