Tuesday, November 30, 2010


முந்திரி அமிர்தம்

தேவையான பொருட்கள்:
மைதா மாவு : 250 கிராம்
முந்திரி : 50 கிராம்
பாதாம் : 10
சர்க்கரை : 200 கிராம்
நெய் : 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் : 1 ஸ்பூன்
உப்பு : ஒரு சிட்டிகை
ஏலக்காய் : 3
கேசரி பொடி : ஒரு சிட்டிகை


செய்முறை:
முதலில் பாதாம் பருப்பினை வெந்நீரில் ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். மிக்ஸியில் தோலுரித்த பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பினை நன்றாக வழுவழுவென்று அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவில், சிறிதளவு உப்பு, ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், அரைத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் விழுது இவற்றை ஒன்றாகக் கலந்து பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு பிசையும் போதே வாசனை கமகமக்கும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவு சர்க்கரை விட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சர்க்கரைப் பாகு கம்பிப் பதம் வரும் வரை கொதிக்க விட்டு கேசரி பொடி, ஏலக்காய் பொடி கலந்து இறக்கி விடவும். ஏலக்காய் பொடி பொதுவாக நாம் எல்லா இனிப்புப் பலகாரங்களுக்கும் சேர்ப்போம். ஏலக்காய் பொடி பொடியும் போது ஏலக்காயை ஓர் வாணலியில் லேசான சூட்டில் தோலுடன் சேர்த்து வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு தோலுடன் சேர்த்து அரைக்கும் போது அதன் முழுமையான பயனும் கிடைப்பதோடு, ஏலக்காய் வாசனை இன்னும் அதிகமாகக் கிடைக்கும். ஏலக்காய் இனிப்பில் சேர்ப்பதே, அந்த பலகாரம் மணமுடன் இருப்பதற்கு மட்டுமல்ல. விரைவில் செரித்துவிடும் என்பதற்காகவும் தான்.

அடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் இளந்தீயில் வைத்துக் கொண்டு உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். பொரிக்கும் போதே மாவில் முந்திரியும் பாதாமும் கலந்திருப்பதால் வீடே மணம் வீசும். ஐந்து நிமிடங்கள் கழித்து இந்த முந்திரி உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போடவும். பாகில் நன்றாக ஊறி வந்ததும் முந்திரி அமிர்தத்தை எடுத்துப் பரிமாறவும்.

Sunday, November 28, 2010


என்றும் இனியவை - S.P.சைலஜா

திருக்குறள் உலகப் பொதுமறை என்பது போல, இசையும் கூட உலகத்தின் பொதுவான மொழி என்று கூறலாம். இசை எல்லோரையும் அழச் செய்கிறது, சிரிக்கச் செய்கிறது, சாந்தப் படுத்துகிறது. இசையை ரசிக்கும் போது மனிதன் ஒரு தவ நிலைக்குப் போய்விடுகிறான். இசைக்கு உயிர் கொடுப்பவர்களால் உருவாக்கப்படும் இசை, அதனை ரசிப்பவர்களால் மட்டுமே தொடர்ந்து வாழ்கிறது. எந்த விஷயமுமே உருவாக்கப் படுவது எத்தனை முக்கியமோ, அதை விட பல மடங்கு அதனை ரசிக்க பலர் இருந்தால் மட்டுமே அது தொடர்ந்து பயணிக்க முடியும். அந்த வரிசையில் S.P.சைலஜா அவர்களின் அசத்தலான குரலினை யாரும் ரசிக்காமல் இருக்க முடியாது.


இசைக்கு மொழி தடையில்லை என்பதை நிரூபிப்பது போல இவரும் சுந்தரத் தெலுங்கு பிரதேசத்தில் தன் இசைப் பயணத்தை தொடங்கியவர். தமிழகத்திலும் தன் இசைக் கொடியை நாட்டி இருக்கிறார். தனது பதினைந்தாவது வயதில் பாட ஆரம்பித்த இவரது குரல் இன்றும் எப்படி இளமை மாறாமல் அப்படியே உள்ளது என்பது வியப்பாக உள்ளது.

"பொண்ணு ஊருக்கு புதுசு" என்கிற படத்தில் வரும் "சோலைக் குயிலே காலைக் கதிரே" என்ற படத்தில் இவரது குரலில், சரிதா மிதிவண்டி ஓட்டிக்கொண்டே மலை கிராமம் முழுவதும் சுற்றிவரும் போது பாடலைக் கேட்கும் நாமும் அந்த கிராமத்தை ஒரு வலம் வந்து விடுவோம். அந்த அளவிற்கு மிக இனிமையான பாடல். பாடல் வரிகளும் இந்தப் பாடலின் இனிமைக்கு வலிமை சேர்த்துள்ளன. "ரோசாப்பூ ரவிக்கைக்காரி" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான்" பாடலில் தனது சகோதரர் S.P.B.யைப் போல, சற்று குரலை மாற்றிப் பாடினாலும் பாடல் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்.

"சலங்கை ஒலி" என்ற படத்தின் மூலம் நடிப்புத் துறையிலும் கால் பதித்துள்ளார். இவரைப் போன்ற நல்ல குரல்வளம் கொண்டவர்களின் பாடல்களைக் செவிமடுக்கும்போது மனம் அமைதி பெறுகிறது. S.P.சைலஜா அவர்கள் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் சிலவற்றை கேட்டு மகிழ்வோம்.

ஆசைய காத்துல தூது விட்டு.. (ஜானி)


சின்னஞ்சிறு வயதில்.. (மீண்டும் கோகிலா)


அரிசி குத்தும்.. (மண் வாசனை)


ஏதோ.. நினைவுகள்.. (அகல் விளக்கு)


கீதம்.. சங்கீதம்.. (கொக்கரக்கோ)


காலை நேரக் காற்றே.. (பகவதிபுரம் ரயில்வே கேட்)


கண்ணுக்குள்ளே.. யாரோ.. (கை கொடுக்கும் கை)


மலர்களில் ஆடும் இளமை.. (கல்யாண ராமன்)


மாமன் மச்சான்.. (முரட்டுக் காளை)


மனதில்.. என்ன நினைவுகளோ.. (பூந்தளிர்)


ஒரு கிளி உருகுது.. (ஆனந்தக் கும்மி)


வரம் தந்த சாமிக்கு.. (சிப்பிக்குள் முத்து)


மொட்டு விட்ட முல்லைக் கோடி.. (இன்று நீ நாளை நான்)


ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. (தனிக்காட்டு ராஜா)


வான் போலே வண்ணம் கொண்டு.. (சலங்கை ஒலி)


Friday, November 26, 2010


கிரிக்பஸ்ஸின் அழகான உலகக் கோப்பை அட்டவணை

இங்கிலாந்துக்காரர்கள் நாட்டை விட்டுச் சென்றாலும், அவர்கள் போகும் போது இங்கேயே விட்டுச் சென்ற சில விஷயங்களில் கிரிக்கெட்டும் ஒன்றாகிப் போனது. ஒரு வீட்டில் தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை, அப்பா, அம்மா என அனைவரும் ஒத்துப் போகும் ஒரே விஷயம் கிரிக்கெட்தான்.


கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை போட்டியின் அட்டவணை பல தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. cricbuzz.com என்ற தளம் வெளியிட்டிருக்கும் அட்டவணை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அட்டவணையில், இருக்கைகள் இருக்குமிடங்களில், போட்டிகள் நடைபெறும் நாட்கள், இடங்கள், அணிகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

cricbuzz.com அட்டவணையைக் காண இங்கு செல்லவும்.

Thursday, November 25, 2010


நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில்.

பொன்கொண்ட மலர்அயனும் நெடுமாலும்
அமரர்களும் புகழ்ந்து போற்ற
மின்கொண்ட மருங்குமையாள் இடம்பயில்
நடம்புரியும் விமல மேலோன்
கொன்கொண்ட ஐங்கரனும் அறுமுகனும்
புடைசூழுங் கோமான் எம்மான்
மன்கொண்ட நெல்வேலி நாதன் இரு
பாதமலர் மனத்துள் வைப்பாம்!!!


என வேணுவன புராணத்தில் நெல்வேலி நாதரைப் பற்றியும்,

ஏர்கொண்ட நெல்லை நகர் இடங்கொண்டு
வலங்கொண்டங் கிறைஞ்சு வோர்கள்
சீர்கொண்ட தன்னுருவும் பரனுருவும்
விளங்க அருள்செய்து நாளும்
வேர்கொண்டு வளர்ந்தோங்கும் வேய்ஈன்ற
முத்தைமிக விரும்பிப் பூணும்
வார்கொண்ட கபளமுலை வடிவுடைய
நாயகிதாள் வணங்கி வாழ்வாம்!!!


என வேணுவன புராணத்தில் காந்திமதி அம்மனைக் குறித்தும் பாடப்பட்டுள்ளது.


இயற்கை எழில் கொஞ்சும் நெல்லை பூமிக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர் என்பதால் வயல்வெளிகள் செழிப்போடு காட்சி அளிக்கின்றன. இவ்வூர் மக்கள் பேசும் நெல்லைத் தமிழைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவர்களது தமிழிலும் சரி, பேச்சு நடையிலும் சரி அன்பு இழையோடுகிறது. அன்பு மட்டுமல்ல வீரம் விளைந்த மண்ணும் கூடத்தான். நம் நாட்டில் நிறைய இரட்டை நகரங்கள் உள்ளன. அவற்றுள் பெருமை மிகு திருநெல்வேலியும் ஒன்று. பாளையங்கோட்டையும் திருநெல்வேலியும் இரட்டை நகரங்களாக திகழ்வது கூடுதல் பெருமை.

இத்திருநெல்வேலி நகரம் சிவபிரான் ஆட்சி செய்யும் திருக்குற்றாலத்திற்கு கிழக்கு திசையிலும், மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரைக்கு தெற்கு திசையிலும், ஆறுமுகன், வேல்முருகன் ஆட்சி செய்யும் திருச்செந்தூருக்கு மேற்கு திசையிலும், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாக்குமரியை அடுத்த சுசீந்திரத்திற்கு வடக்கு திசையிலும் அமையப் பெற்றுள்ளதாக நெல்லை தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

திருத்தலம் அமைவிடம்:
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து 284 km தொலைவிலும், மதுரையில் இருந்து 154 km தூரத்திலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகரத்தின் நடுநாயகமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. நெல்லை புகைவண்டி நிலையத்தில் இருந்து சுமார் 2 km தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி அல்வாவிற்கும் புகழ் கொண்டதல்லவா? இந்த அல்வா கிடைக்கும் இருட்டுக் கடை கூட இத்திருக்கோயிலின் எதிரே தான் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் காந்திமதி அம்மனுக்கும், நெல்லையப்பருக்கும் என இரு தனித்தனி கோயில்களாக அமைந்துள்ளன.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : நெல்லையப்பர் (வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர்)
தல இறைவி : காந்திமதி அம்மை (வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்)
தல விருட்சம் : மூங்கில்
தல தீர்த்தம் : மொத்தம் 32 தீர்த்தங்கள். முக்கியமான தீர்த்தங்கள் 9. திருக்கோயிலின் உள்ளே அமைந்துள்ள தீர்த்தங்கள் பொற்றாமரை தீர்த்தம், கருமாறி தீர்த்தம், வயிரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம். திருக்கோயில் வெளியே அமைந்த தீர்த்தங்கள் கம்பை, தெப்பக்குளம், சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குதுறை.


திருத்தலச் சிறப்பு:
பெருமை வாய்ந்த திருநெல்வேலிக்கு வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம் போன்ற பெயர்களும் உண்டு. இவ்வூர் மேலும், தென்காஞ்சி, கன்னிப்பதி, கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களுடனும் விளங்குகிறது. சைவ சமயப் பெரியவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் அவர்களால் பாடி அருளப் பெற்ற பெருமைவாய்ந்த தலம் நெல்லையப்பர் திருத்தலம். அதற்கு திருநெல்வேலி பதிகம் என்றே பெயர். இத்திருத்தலம் பாண்டியநாட்டு பாடல் பெற்ற பதினான்கு தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

திருவிளையாடல் புராணத்தில் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை, பன்னிரெண்டாம் திருமுறை நூல்களில் இத்திருக்கோயிலைப் பற்றி பாடப்பட்டுள்ளன.

நான்கு வேதங்களும் சிவபிரானிடம், ஈசனின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் வேண்டும் எனக் கேட்க, அதன்படியே இறைவன், தான் நடனம் புரியும் இருபத்தியோரு திருத்தலங்களில் தென்காஞ்சி எனப்படும் திருநெல்வேலியில், மூங்கில் மரங்களாய் வேதங்கள் தோன்ற லிங்க உருவில் சிவன் அருள்பாலிக்கிறார்.


ஈசன் பார்வதி தேவியின் திருமணம் இமயத்தில் நடைபெற்றபோது தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வடப்புறம் தாழ்ந்து, தென்புறம் உயர்ந்தது. இதனைக் கண்ட சிவன், அகத்திய பெருமானை தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே அகத்தியர் தென்பால் வந்து திருக்குற்றாலம் அடைந்து பின் பொதிகை மலையை அடைந்து
பூமியை சமன் படுத்தினார். இங்கே திருநெல்வேலி வந்த அகத்தியருக்கு சிவபிரானும், பார்வதி தேவியும் மணக் கோலத்தில் காட்சி கொடுத்தனர்.

இராமபிரான், சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் முன், அகத்தியரின் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று நெல்லையப்பரை வணங்கி பாசுபதாத்திரம் பெற்று போரில் இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி அடைந்தார்.

இத்திருக்கோயில் தெற்குப் பிரகாரம், மேலப் பிரகாரம், வடக்குப் பிரகாரம், கீழப் பிரகாரம் என்ற அமைப்புடன் உள்ளது. மணி மண்டபத்தில் இருந்து மேற்குப் பக்கமாக நேரே சென்றால் நெல்வேலி நாதரை வழிபடலாம். பின்னர், வேணுவன நாதருக்கு வடப் புறமாக கிடந்த கோலத்தில் பெரிய உருவத்துடன் ரெங்கநாதரின் தரிசனம் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி. உட்பிரகாரத்தில் பிள்ளையார், சந்திரசேகரர், பிச்சாண்டேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரது தரிசனம். வட பிரகாரத்தில் பள்ளத்தில் திருமூலநாதரின் தரிசனம்.

நெல்லையப்பர், காந்திமதியம்மன் உற்சவ மூர்த்திகள், ஏழு கன்னியர், ஏழு முனிவர், அறுபத்து மூன்று நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், பொல்லாப் பிள்ளையார் சந்நதிகளையும் காணலாம். மேலப் பிரகாரத்தில் தாமிர சபை அமைந்துள்ளது.

பஞ்சபூத ஸ்தல இறைவன் நடனமாடிய சபைகள் ஐந்து உள்ளன.
1. திருக்குற்றாலம் - சித்திரசபை
2. மதுரை - வெள்ளிசபை
3. திருவாலங்காடு - ரத்தின சபை
4. சிதம்பரம் - பொற்சபை

என இந்த வரிசையில்,
5. திருநெல்வேலி - தாமிரசபை
அமைந்துள்ளது.


தாமிர சபை மண்டபத்தின் உள்ளே சந்தன சபாபதியை வழிபடலாம். வடக்குப் பிரகாரத்தில் அஷ்டலெட்சுமி, சனீஸ்வர பகவான், சஹஸ்ரலிங்கம் போன்றோரது தரிசனம். நெல்லை நகரத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் அம்மன் கோயில், சுவாமி கோயில் என இரு பகுதிகளாக அமைந்துள்ளன. அம்மன் கோயில் தென்புறம், வடபுறம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது. அதேபோல சுவாமி கோயிலும் வடபுறம், மேற்க்குபுரம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் சுவாமி ரதம், அம்மன் ரதம், விநாயகர் ரதம், சுப்பிரமணியர் ரதம், சண்டிகேஸ்வரர் ரதம் என ஐந்து ரதங்கள் இருக்கின்றன. அது போலவே, இத்திரு கோயில் சார்ந்த ஆறு சபைகள் உள்ளன. அவை,

1. சிந்துபூந்துறை - தீர்த்த சபை
2. மானூர் - ஆச்சர்ய சபை
3. அம்மன் கோயில் முன்புறம் வடப் பக்கமாக சிவன் ஆனந்த நடனம் புரிந்த - சௌந்திர சபை
4. அம்மன் கோயிலின் திருக்கல்யாண மண்டபம் - கல்யாண சபை
5. சுவாமி கோயிலின் முன்பக்கம் - அழகிய ராஜசபை
6. சுவாமி கோயிலின் மேல்புறம் - தாமிர சபை


அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஐப்பசி மாதம் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியதும், மூன்று நாட்கள் ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நாள்களில் தேவாரம், திருவாசகம், நான் மறைகள் ஓதுவதும், சமய சொற்பொழிவுகளும் நடைபெறும். திருக்கல்யாண மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் சிறப்பாக அமைந்துள்ளது.


இந்த ஊஞ்சல் மண்டபத்தின் வடக்குப் பக்கமாக பொற்றாமரைக் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் சிவனே நீர் வடிவமாய் உள்ளதாக ஐதீகம். பிரம்மன் தங்க மலரோடு வந்து எழுந்தருளியதாகவும் நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே பொற்றாமரைக் குளம் என்ற பெயர் வந்தது.


அம்மன் தலையில் வைரமணி முடி, இராக்குடியுடனும், முகத்தில் புல்லாக்கு மூக்குத்தியுடனும், நவமணி மாலை அணிந்தும், காலில் மணிச் சிலம்பும், வலக்கரம் உயர்த்திய நிலையிலும், இடக்கரம் தாழ்த்திய நிலையிலும், கிளியுடனும் காட்சி தரும் காந்திமதி அம்மனின் தோற்றம், கருணை வடிவம்.

அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் ஆரம்பத்தில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பிற்காலத்தில் 7-ம் நூற்றாண்டில் நின்றசீர்நெடுமாறனாலும் கட்டப் பட்டவையாகும். கி.பி. 1647-ம் ஆண்டு வாக்கில் வடமலையப்ப பிள்ளையன் இரண்டு கோயிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை கட்டினார். இத்திருக்கோயிலில் சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் என பல்வேறு மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த மண்டபங்கள் சிற்பக் கலையின் சின்னமாகத் திகழ்கின்றன.

இக்கோயில் கல்வெட்டுக்களில் இருந்து நமக்குத் தெரிய வரும் விஷயம் திருநெல்வேலி மாநகரம் அக்காலத்தில் இருந்தே சீரும் சிறப்புமாக விளங்கியுள்ளது என்பது. மதுரை நாயக்க மன்னர் தனது ஆட்சிகாலத்தில் தங்களது தெற்கு பிராந்தியப் பகுதிகளுக்கு திருநெல்வேலியையே தலை நகராகக் கொண்டிருந்தனர். நவாப் ஆட்சி காலத்திலும் திருநெல்வேலி தலைநகரமாக விளங்கியுள்ளது.

இத்திருக்கோயில் வேணுவன நாதரின் திருவிளையாடல்கள்:
மூங்கில் மரங்கள் நிறைந்த காட்டின் வழியாக அந்நாட்டினை ஆண்டு வந்த மன்னருக்கு தினந்தோறும் பால் நிரம்பிய குடங்களை எடுத்துச் செல்வார் இராமக்கோன் என்னும் ஆயன். இவ்வாறு தினம் பால் எடுத்துச் சென்ற வேளையில் ஒருநாள், அங்குள்ள மூங்கில் கன்றில் மோதி கால் தடுக்கி பால் மட்டும் சிந்தும், ஆனால் குடம் உடைவதில்லை. இது போன்ற நிகழ்வு நாள்தோறும் நிகழ்ந்தது. அதிசயித்த இராமக்கோன் தினமும் மூங்கில் கன்றில் கால் இடருவதால் அதனைக் கோடரியால் வெட்டினார். வெட்டிய வேகத்தில் அதில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதனைக் கண்டு பயந்த ஆயன் மன்னரிடம் சென்று முறையிட அவர் தன் பரிவாரங்களுடன் அவ்விடத்திற்கு வந்தார். மரத்தில் குருதி வடிவத்தைக் கண்டார். அந்நிலையில் ஆயன் இறைவனை எண்ணி பெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்து, இறைவனது முழு திருமேனியையும் காட்டியருள்க என வேண்டி இரத்தம் வரும் பகுதியைத் தொட்டவுடன் குருதி வருவது நின்றது. நிலவினைச் சூடிய தலையில் ஆயனால் வெட்டுபட்ட காயத்துடன் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க முழு, வானுயர வடிவத்தினையும், பின் அரசனின் வேண்டுகோளுக்கிணங்க குறுகிய தோற்றத்துடனும் காட்சியளித்தார்.

திருமூலநாதருக்கும், வேயின் முளைத்த லிங்கத்திற்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் ஆகம விதிப்படி திருக்கோயில் அமைத்து விழாக்களும் நடத்தினார் அரசர். இத்திருவிளையாடல் பங்குனி மாதம் செங்கோல் திருவிழாவின் நான்காம் நாள் அன்று நடைபெறுகிறது.

நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்:
முன்னொரு காலத்தில் நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பசியால் வாடினர். வேதசன்மா என்னும் சிவனடியாரிடம் அவரது பக்திக்கு இணங்கி, "நீ, நான் குடியிருக்கும் நெல்லை நகருக்கு வந்தால் உன் துயர் நீங்கும்", எனக் கட்டளை இட்டார் ஈசன். அவ்வண்ணமே அங்கு சென்றார் வேதசன்மா. அவ்வாறு வந்த சிவனடியாருக்கு இறைவன் நிறைய செல்வங்களை வழங்கினார். அதுமுதல் நாடு செழிப்புடன் விளங்கியது. தன்னிடம் இருந்த நெல்லைக் கொண்டு நாள்தோறும் இறைவனுக்கு பூஜை செய்து அமுது படைத்தார் வேதசன்மா. பஞ்ச காலத்தில் தனது அடியவரை சோதிக்க நினைத்தார் சிவபிரான். தான் வைத்திருந்த நெல் அனைத்தும் அமுது படைத்து தீர்ந்து போன நிலையில் அன்றைய பொழுதிற்கு மட்டும் மீதம் வைத்திருந்தார் வேதசன்மா.

பொருநை நதியில் நீராடிவிட்டு வந்து இறைவனுக்கு உணவு படைக்கலாம் என நினைத்து, அந்த நெல்லினை உலர வைத்துவிட்டு நீராடச் சென்றார் அடியவர். அந்த நேரத்தில் இறைவன் பெருமழையினைப் பொழியச் செய்தார். இதனைக் கண்ட வேதசன்மா ஒரு நாளைக்கு மட்டுமே மீதம் இருந்த நெல் இந்த மழையில் நனைந்தால் ஈசனுக்கு அமுது படைக்க முடியாதே என வேகமாக வந்து காய வைத்த நெல்லை அள்ள முயல, அவர் கண்ட அதிசயக் காட்சி இறைவனின் பேராற்றலை அவருக்கு உணர்த்தியது. சுற்றி மழை பெய்து கொண்டிருக்க நெல் காயும் இடத்தில் மட்டும் வேலி இட்டது போல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. இந்த அதிசய நிகழ்வைக் கண்ட சிவனடியாரும், அந்நாட்டு மன்னரும் வேணுவன நாதரின் தாள் பணிந்தனர். அன்று முதல் வேணுவன நாதர், நெல்வேலி நாதர் என்ற திருநாமத்துடனும் விளங்கினார்.

இத்திருக்கோயிலில் நிகழ்ந்த மற்றொரு திருவிளையாடல் சுவேதகேதுவுக்கு எமபயம் ஒழித்த திருவிளையாடல். இத்திருவிளையாடல் மூலம் ஈசன், இந்த நெல்லையில் இருப்பவர், வாழ்பவர், தனது மனத்தால் நினைப்பவர், இவ்வுலகில் பிறந்தோர், இறந்தோர் அனைவரும் முக்திபெறுவர் எனவும், இத்தலமே தென் கைலாயம் என்றும் சிவலோகம் என்றும் விளங்கும் என்று அருளினார் நெல்வேலி நாதர். மேலும், கருவூர் சித்தருக்கு அருள் செய்த திருவிளையாடல், நின்ற சீர் நெடுமாறன் என்னும் அரசனுக்கு திருஞானசம்பந்தர் மூலமாக அருளிய திருவிளையாடல், என பல்வேறு திருவிளையாடல்களை இத்தலத்தில் புரிந்துள்ளார் இறைவன்.

திருவிழாக்கள்:
இத்திருக்கோயிலில் விழாக்களுக்கு பஞ்சமில்லை. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள்தான். ஆனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்போது நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். வருடாபிஷேகம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா அம்பாளுக்கு பத்து நாட்கள், பௌத்திர உற்சவம் நான்கு நாட்கள், அம்மனுக்கு ஐப்பசி மாதத்தில் பதினைந்து நாட்கள் திருக்கல்யாண வைபவம், கந்த சஷ்டி திருவிழா, கார்த்திகை மாதத்தில் சோமவாரம் நான்கு நாட்கள், மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி முப்பது நாட்கள், திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம், தை மாதத்தில் தைப்பூசத் தெப்ப உற்சவம் உட்பட பன்னிரண்டு நாட்கள், வைகாசி விசாகத் திருநாள் மூன்று நாட்கள், மாசி மகத்தன்று பொற்றாமரைத் திருக்குளத்தில் அப்பர் தெப்பம் என அடுக்கிக் கொண்டே போகலாம் இத்திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களை.

இத்திருக்கோயில் இறைவன், இறைவியைப் போற்றி சமயப் பெரியோர்களும், புலவர் பெருமக்களும் பதிகங்கள் பாடி பெருமை கொண்டுள்ளனர். நெல்லையப்பர் பிள்ளை அவர்கள் பாடிய திருநெல்வேலி தல புராணம், அருணாசல கவிராயர் இயற்றிய வேணுவன நாதர் புராணம், வித்வான் சொக்கநாதப் பிள்ளை பாடி அருளிய காந்திமதிஅம்மை பிள்ளைத் தமிழ், ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, நெல்லை வருக்கை கோவை, நெல்லைச் சிந்து, திருநெல்வேலி சேத்திரக் கும்பி, மும்மணிக் கோவை போன்ற நூல்கள் இத்தல இறைவன், அன்னையின் அருளினை சிறப்பித்துக் கூறுகின்றன.

வியப்பில் ஆழ்த்தும் சிற்பங்கள்:
நம் நாட்டு திருக்கோயில்களின் சிறப்பம்சமான சிற்ப வேலைப்பாடுகள் இத்திருக்கோயில் முழுவதும் வியாபித்திருக்கின்றன. திருக்கோயில் கோபுரத்தை அடுத்த மேற் கூரையில் மரத்தால் ஆன ஆயிரக் கணக்கான சிற்பவேலைப்பாடுகள் காணக் கிடைக்கின்றன. மேற்கூரையில் மட்டுமல்லாது இருபுறங்களிலும்.


உள்ளே சென்றால் கொடிமரத்தின் முன்னே நந்தி தேவரின் பிரம்மாண்ட தோற்றம்.


தூண்கள்தோறும் சிற்பவேலைப்பாடுகள், ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு, மறுபக்கம் தன் பெரியபிள்ளைக்கு சோறூட்டும் அன்புத் தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்துச் செல்லும் அக்கால கணவன் மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம்தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனைக் கொல்லவந்து, கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன், போன்றோரது சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்யும் வண்ணம் அமைந்துள்ளன. இந்த சிற்பங்களில் எலும்பு தெரிகிறது. நரம்பு, நகம், மண்டை ஒட்டு மாலையில் ஒவ்வொரு தலையும் தனித்தனியாகத் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால் முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல, உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு.









ஓடுகளால் வேய்ந்தது போன்ற அமைப்பில் கருங்கற்களால் ஆன மேற்கூரை.


போர்காட்சியை கண்முன்னே நிறுத்தும் புடைப்புச் சிற்பம்.


இசைக்கு இவ்வுலகமே அடிமை என்பதை உணர்த்தும் இசைத் தூண்கள் நெல்லையப்பர் சன்னதி முன்பாக. ஏழு ஸ்வரங்களும் எழுகின்றன இந்த இசைத் தூண்களில்.


மல்யுத்த வீரர்கள் சண்டைப் பயிற்சி மேற்கொள்ளும் காட்சி அப்படியே சாளர வடிவத்தில். மேல் புறம் ஒரு தலை, கீழ்புறம் ஒரு தலை வடிவம். ஒருவரது ஒரு காலால் மற்றவரது காலினையும், கையினால், கையினையும், துளி கூட நகர முடியாத அளவிற்கு கால் கைகளாலேயே கிடுக்கி பிடி பிடித்திருக்கும் மல்யுத்தக் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சிற்பக் காட்சி.


பிறை நிலவுகளை ஒன்று சேர்த்து கட்டி உள்ளார்களோ என்று எண்ணும் விதமாக தாமிர சபையின் முன்னே உள்ள மண்டபத்தின் தோற்றம்.


அக்காலத்திய சிவனடியார்களின் தோற்றத்தினை அப்படியே நம் கண் முன் காட்டும் சிலை வடிவம். தலையைச் சுற்றிய உத்திராட்ச மாலை. கழுத்தில் அணிந்திருக்கும் மாலையின் வடிவம் அனைத்தும் வடிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு தூண்களின் அடிபாகத்தில் அக்கோயிலைக் கட்ட உதவியவர்களின் சிலைகளும், தூண்களின் மேற்புறத்தில் சிங்கங்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்கூரையில் வரிசையாக நீண்ட தூண்களை படுக்கை வாக்கில் அடுக்கியது போன்ற அமைப்பு.


தட்சிணாமூர்த்தி சன்னதியின் வெளிப்புறத்தில் எத்தனை அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முன் மண்டபம். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். இக்கோயிலில் அமையப் பெற்றுள்ள சிற்பங்களைக் காண ஒரு நாள் போதாது.


திருக்கோயிலில் உள்ளே மட்டுமல்லாது வாயிற் கதவுகளில் கூட அழகிய சிற்ப வடிவங்கள்.


நிலைக் கதவுகள் உயரமாகவும், கலை வண்ணத்துடன் காட்சி தருவது, எங்கு திரும்பினாலும், கோயிலுக்குள் எங்கு சென்றாலும் அங்கு வரும் பக்தர்கள் கட்டாயம் ஏதோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு சிற்ப வடிவத்தை கண்டாகவேண்டிய அளவிற்கு கணக்கிலடங்கா சிற்பங்கள்.

****************

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய திருநெல்வேலி பதிகம்:
மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றும் மெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூஞ்
செருத்திசெம் பொன்மலர் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

என்றுமோர் இயல்பினர் எனநினை வரியவர் ஏறதேறிச்
சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
தன்றுதண் பொழில் நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர் போலுஞ்
செறிபொழில் தழுவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்
தீண்டிவந் துலவிய திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளவுரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனில்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதன் ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெல்லாம் புகழுறுந் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

பைங்கண்வாழ் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்ச நின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அணைலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆலத்
திவருறு மதிதவழ் திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடம்மல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே !!

*** திருச்சிற்றம்பலம் ***

Saturday, November 20, 2010


பால் போளி

தேவையான பொருட்கள்:
பால் : 1/2 லிட்டர்
பாதாம் பருப்பு : 12
முந்திரி பருப்பு : 7
சர்க்கரை : 200 கிராம்
ஏலக்காய் : 3
மைதா மாவு : 1/4 கிலோ
உப்பு : ஒரு சிட்டிகை
எண்ணெய் : தேவையான அளவு


செய்முறை:
முதலில் பாதாம் பருப்பினை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். வெறும் வாணலியில் முந்திரிப் பருப்பை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பாதாம் பருப்பு நன்கு ஊறியபின் அதன் தோலினை நீக்கவும். தோல் நீக்கிய பாதாம் பருப்பு, லேசாக வறுத்த முந்திரிப் பருப்பு இரண்டையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்றாக மசித்துக் கொள்ளவும்.

மைதா மாவில் சிறிதளவு உப்பு போட்டு பூரி மாவு பதத்தில் பிசைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சி அதில் தேவையான அளவு சர்க்கரை கலந்து கொதிக்க விடவும். அரைத்து வைத்துள்ள பாதாம் முந்திரி கலவையை பாலில் போட்டு நன்கு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். ஏலக்காய் கலந்து இறக்கி விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் வைத்து, மைதாவில் பூரி போல இட்டு எண்ணையில் போடும்போது, இரண்டு வடவாரிகளை வைத்துக் கொண்டு பூரி உப்பி வரும்போது அதனை இரண்டாக அல்லது நான்காக மடித்து பொரித்து எடுத்து தயார் செய்து வைத்துள்ள பாதாம் பால் கலவையில் போட்டு ஊற விடவும்.

இந்த பூரி நன்கு ஊறிய பின் ஒரு தட்டில் எடுத்து வைத்து இந்த பாலையும் அதன் மேல் ஊற்றி சிறிது பாதாமினை துண்டுகளாக நறுக்கி அதன் மேல் தூவ பால் போளி தயார்.

Thursday, November 18, 2010


குடுமியான்மலை - காலத்தை வென்ற கலைச்சுரங்கம்

விதையின் விஸ்வரூபமாய் மரம் ....
விதியின் விஸ்வரூபமாய் வாழ்க்கை....
விழியின் விஸ்வரூபமாய் கண்ணீர்....
வீணையின் விஸ்வரூபமாய் இசை....
நதியின் விஸ்வரூபமாய் கடல்....
மழையின் விஸ்வரூபமாய் வெள்ளம்....
காற்றின் விஸ்வரூபமாய் புயல்....
கலையின் விஸ்வரூபமாய் சிற்பம்....
சிற்பக்கலையின் விஸ்வரூபமாய் குடுமியான் மலை....

ஆம்.. குடுமியான் மலை கோயிலே ஒரு கலைச் சுரங்கமாய் விளங்குகிறது. திருக்கோயிலின் உள்ளே நுழைந்தது முதல், கோயிலை முழுவதும் சுற்றி வந்து திரும்பும் வரை சிற்பங்களின் ராஜ்ஜியமே. நாம் கண்ணுறங்கும் நேரத்தில் காணும் கனவுகள் கண்விழித்ததும் காணாமல் போய்விடும். கனவில் காணும் சிலைகள்தான் நேரில் வந்தனவோ என நினைக்கும் அளவிற்கு அத்தனை தத்ரூபமான, நுட்பமான, நுண்ணிய வேலைப்பாடுடைய சிற்பங்கள்.


இத்திருக்கோயில், குன்றின் அடிவாரத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குன்றின் மேல், அதன் அருகில் என மொத்தம் நான்கு கோயில்கள் அமைந்துள்ளன. சோழநாட்டில் அமைந்துள்ள தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற ஊர்களில் அமைந்துள்ள திருக்கோயில்கள், பாண்டிய நாட்டில் அமைந்துள்ள மதுரை, திருநெல்வேலி என்று இந்த ஊர்களில் அமைந்துள்ள திருக்கோயில்கள் போல இந்த சிற்பக்கலையில் சிறந்து விளங்கும், குடுமியான்மலை நிறைய மக்களுக்கு சென்றடைந்துள்ளதா என்று தெரியவில்லை. இத்திருக்கோயிலின் பழமையினால், சிற்பங்களின் செழுமையினால் இந்திய தொல்பொருள்துறையின் கீழ் கொண்டுவந்துள்ளனர். தற்போது இங்கு திருக்கோயிலை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருக்கோயில் கோபுர வாசலை தாண்டி, உள்ளே உள்ள மண்டபத்தில் அத்தனைவிதமான சிற்பங்களின் அணிவகுப்பு. அத்தனை சிலைகளிலும் அப்படி ஒரு தத்ரூபம்.

லட்சுமணன் உயிர்காக்க மலையையே பெயர்த்து எடுத்து வந்த அன்பின் இலக்கணமான அனுமன்.


தன் அடியவர்களின் குறைகளை அவர்கள் மனதில் நினைத்த மாத்திரத்தில் வந்து முடிக்கும் கருணை உள்ளம் கொண்ட நரசிம்மர் இரணியனை வதம் செய்யும் காட்சி, நம் கண் முன்னே நடப்பது போன்ற பிரமை.


ஏறுமயில் ஏறி விளையாடுமுகம் ஒன்று,
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று,
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று,
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று,
மாறுபாடு சூரரை வதைத்த முகம் ஒன்று,
மாசிலா வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று..
என்ற பாடலை நினைவூட்டும் விதமாக அமைந்த மயில் மேல் அமர்ந்த ஆறுமுகனின் சிற்பம்.


சாதாரணமாக, எளிமையாக எல்லா பக்தர்களின் நெஞ்சத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் எளிமையின் வடிவமாக விளங்கும் விநாயகரின், ஒற்றைக் காலைத் தூக்கி ஆடும் நிலையில் உள்ள விநாயகர் சிற்பம்.


எத்தனை கடவுள் பக்தி இருந்தாலும், எத்தனை வீரம் நிறைந்திருந்தாலும், தவறான பாதையில் சென்றால் அழிவு நிச்சயம் என்பதை உணர்த்தும் காவிய நாயகன் இராவணனின் பத்து தலை வடிவ சிற்பம்.


லிங்கத்தின் மேல் தன் அன்பு மிகுதியால் பாலைச் சுரக்கும் பசுவின் அற்புதச் சிற்பம்.


மூவுலகையும் காக்கும் மஹா விஷ்ணுவின் அபயக் கரத்துடனான அழகிய சிற்பம்.


அசுரனை வதைக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவின் பேரழகு சிலை.


தீயவர்களை வென்று நல்லவைகளைக் காக்கும் மகிஷாசுரமர்த்தினியின் அபாரத் தோற்றம்.


சிவபிரானின் நடன அசைவுகளில், தாண்டவங்களில் ஒன்றான ஊர்த்துவ தாண்டவத்தின் சிற்ப வடிவம்.


அழகின் அடையாளங்களாகக் கருதப்படும் ரதி, மன்மதன் சிலைகள்.



நுழைவு மண்டபத்தைத் தாண்டி பிரகாரத்தில் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் ஒரு முகத்துடன் கூடிய இரு உடல் அமைப்பு. காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சிலை அமைப்பு இது.


திருக்கோயில் பிரகாரத்தினை சுற்றி வரும் போது, மலையின் மேல் ஏறிப் பார்க்கவேண்டிய அவசியமில்லாமல் பிரகாரத்தில் இருந்தே அறுபத்துமூன்று நாயன்மார்களின் வடிவங்கள், ரிஷப வாகனத்தின் மேல் சிவன்,பார்வதி வடிவம் மலையில் செதுக்கப் பட்டுள்ள அற்புதம். பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் பிரகாரத்தில்தான் இந்த அறுபத்துமூவர் சிலைகளை காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். அதுவும் ஒரே நேரத்தில் காண முடியாத வண்ணம் நீண்டு காணப்படும். ஆனால் ஒரே பார்வையில் அத்தனை நாயன்மார்களையும் ரிஷபத்தில் அமர்ந்த சிவன் பார்வதி, என அனைவரையும் பார்க்க முடிவது தமிழகத்தில் இந்தக் கோயிலில் மட்டும்தான். இது ஒரு சிற்ப அதிசயம்.


முருகன் சன்னதிக்கு முன்பாக மேல் கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் விதமாக கட்டங்கள் போன்ற அமைப்பினை வடித்துள்ளனர்.


இவை அனைத்தும் முன்புறம் அமைந்துள்ள கற்கோயிலில் அமைந்துள்ளன. பின் புறமாக அமைந்துள்ள குடைவரைக் கோயில் அதிசய சிற்பங்களின் அபூர்வக் களஞ்சியமாக விளங்குகிறது.

சிரித்த முகத்துடன் கூடிய த்வாரபாலகரின் தோற்றம் வேறு எந்த கோயிலிலும் காண முடியாத சிறப்பம்சம்.


சிவன் சன்னதியின் வெளிச்சுவற்றிலேயே வலஞ்சுழி விநாயகரின் அற்புதத் தோற்றம்.


எங்கும் காண முடியாத இசையின் வடிவத்தை விளக்கும் வண்ணம் அமைந்த இசைக் கல்வெட்டு.


இசைக் கல்வெட்டின் அருகிலேயே புடைப்புச் சிற்ப வடிவ அமைப்பில் பிள்ளையார் உருவம் பொறிக்கப் பட்டுள்ளது. இயற்கைப் பாதுகாப்பை தேனீக்களும், தெய்வீகப் பாதுகாப்பை விநாயகரும் தருகின்றனர்.


திருக்கோயில் முழவதும் அத்தனை சிலைகளும் பிண்ணப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் இசைக் கல்வெட்டு பகுதி மட்டும், பல நூற்றாண்டுகளைக் கடந்தும், புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. அதற்குக் காரணம், இயற்கையை வெல்ல யாராலும் முடியாது என்பதை நிரூபிக்கும் வண்ணம் அந்த பகுதியை அருகில் சென்று காண முடியாத அளவிற்கு, ஒரே இடத்தில் பத்து பதினைந்து தேன்கூடுகள். இயற்கை அமைத்த அரண். இந்த காட்சியினைக் காணும்போதே மெய் சிலிர்க்கிறது.


முன்புறம் அமைந்துள்ள கோயிலில் சிகாநாதர் குடிகொண்டுள்ளார். மற்றொரு தனிக் கோயிலில் அகிலாண்டேஸ்வரி தாயார் அருள்பாலிக்கிறார்.

இந்த திருக்கோயில் புதுக்கோட்டையில் இருந்து கொடும்பாளூர் வழியாக மணப்பாறை செல்லும் வழியில் 20 km தொலைவில் அமைந்துள்ளது.


திருக்கோயில் சிறப்புக்கள்:
இத்திருக்கோயிலில் மொத்தம் 120 கல்வெட்டுக்கள் காணப்படுவதாக சொல்கிறார்கள். இது ஒரு சனி பரிகாரத் தலமாக கருதப்படுகறது. மலை உச்சியில் நாயன்மார்கள், மலை ஏறிச் சென்று காண வேண்டிய அவசியம் இல்லாமல், பிரகாரத்தில் இருந்தே தரிசனம். நாயன்மார்கள் சிலைகள் முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால் மலையுச்சியில் செதுக்கப் பட்டுள்ள நாயன்மார்களின் நடுவே ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதி அமைந்துள்ளது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு அமைப்பு.


இத்திருக்கோயில் சிவாலயமாக இருந்தாலும் பெருமாளின் பத்து அவதாரங்களான தசாவதாரச் சிற்பங்கள் தூண்களில் அமைக்கப் பட்டுள்ளன. குதிரை மேல் அமர்ந்த வண்ணம் உள்ள வீரனின் சிலை கல்கி அவதாரமாகவே எண்ணப்படுகிறது. கோயிலின் உள்ளே அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம் வரலாற்று அதிசயம்.

நவக்ரகங்களின் அடிப்படையில் சனி ஸ்தலமாக கொள்ளப்பட்டுள்ள தலம். 10-ம் நூற்றாண்டில் திருநலக்குன்றம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் சிகாநல்லூர் எனவும், தற்போது குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது. சனீஸ்வரனால் சோதனை மிகுந்து காணப்பட்ட காலத்தில் நளன் இத்தலம் வந்து சிகாநாதரை வணங்கி அருள் பெற்றான் என்பது புராண காலக் கதை.

சங்கீதக் கலை வித்தகர்கள் நிச்சயம் காணவேண்டிய திருக்கோயில் இது. சங்கீதம் பற்றிய விதிமுறைகள் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளது. அவை கிரந்த எழுத்தில் காணப்படுகின்றன. ருத்ராச்சாரியார் என்பவரின் சீடரான பரம மகேஸ்வரன் என்ற மன்னன் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ராகங்களைப் பாடியுள்ளதாக வரலாறு கூறுகிறது.


கற்கோயிலின் பின்புறம் அமைந்துள்ள குடைவரைக் கோயில் அமைந்துள்ள நிலப் பகுதியை அப்போது ஆண்ட அரசர் ஏலம் விட நினைத்தார். ஏலம் விட்ட பணத்தில் அம்மனுக்கு தனிக் கோயில் கட்ட நினைத்தார் அரசர். இதனைக் கேள்வியுற்ற உமையாள்நாச்சி என்ற தேவதாசி தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் நிலப் பத்திரங்களை அரசரிடம் கொடுத்து கோயில் நிலத்தை ஏலம் விடவேண்டாம் எனவும், தன்னிடம் உள்ள இந்த சொத்துக்களை வைத்து அம்மனுக்கு தனிக் கோயில் கட்ட வேண்டியுள்ளார். இதனை ஏற்ற அரசர் அந்தப் பெண்மணி கொடுத்த செல்வத்திலேயே தாயாருக்கு தனிக் கோயில் அமைத்து அப்பெண்ணின் பெயரிலேயே திருக்காமக் கோட்டத்து அருவுடை மலைமங்கை நாச்சியார் என்ற பெயரிலேயே குடைவரைக் கோயில் தாயாரின் பெயர் விளங்கியது. இப்பெயர் மறைந்து பிற்காலத்தில் சௌந்தரநாயகி என்ற பெயருடன் விளங்குகிறது. குடைவரைகோயில் பெருமான் திருநலத்து நாயனார் திருமேற்றளி என்ற பெயருடன் விளங்குகிறார்.

திருத்தல வரலாறு:
லிங்க வடிவில் காணப்படும் சிவபிரான் இத்திருக்கோயிலில் குடுமியுடன் காணப்படுகிறார். குடுமியான் என்றால் உயர்ந்தவன் என்றும், குடுமி என்றால் மலை உச்சி என்றும் பொருள்படும்படி உள்ளது. உயர்ந்த மலைக் குன்றை ஒட்டி அமைந்த கோயிலில் குடிகொண்டுள்ளதால் குடுமியான்மலை என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில் குடுமியான்மலையும் ஒன்று.


முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகராக இருந்த ஒருவர் சிவனுக்கு நாள்தோறும் தனது பணிகளை சீரியவண்ணம் செய்து கொண்டிருந்தார். அந்நிலையில் ஒருநாள் இரவு இறைவனுக்கு நடக்கும் அர்த்தஜாம பூஜைக்கு அரசர் வர கால தாமதம் ஏற்படவே, சுவாமிக்கு வைத்திருந்த பூவினை தனது காதலிக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டார். திடீரென அரசர் கோயிலுக்கு வரவே என்ன செய்வதென்று தெரியாமல், அப்பெண்ணிடம் கொடுத்த பூவினை திரும்ப எடுத்து வந்து இறைவனுக்கு சூட்டி பூஜை செய்து மன்னனுக்கு பிரசாதமாகக் கொடுத்தார். அப்போது அந்தப் பூவில் ஒரு முடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அரசர் இது என்ன என்று வினவினார் மன்னர் அர்ச்சகரிடம்.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அர்ச்சகர் அது, சிவனின் குடுமியில் இருந்து வந்த முடிதான் எனவும், இக்கோயில் சிவனுக்கு குடுமி உள்ளது எனவும், அர்ச்சகர் கூறினார். சந்தேகம் விலகாத மன்னர் இன்று இரவு தான் இங்கேயே தங்க உள்ளதாகவும், விடியற்காலை சன்னதி திறந்ததும், தனக்கு இறைவனின் குடுமியை காட்டவேண்டும் எனவும், கட்டளை இட்டார். இல்லையெனில் அடுத்த நாள் சிரச்சேதம் செய்யப்படுவாய் என்றும் ஆணையிட்டார். அரசர் சொன்னது போல அங்கேயே தங்கியும் விட்டார். தான் எத்தனை பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த அர்ச்சகர், முக்கண்ணனின் காலடியினைப் பிடித்து மன்றாடினார். தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காக்கும்படி வேண்டினார். அவர் முன் தோன்றிய பெருமான், ''நீ உன் தவறை உணர்ந்ததால் வெறும் மூன்று நாழிகை மட்டும் நான் குடுமியுடன் இருப்பேன், அதற்குள் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்'', என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் காலை மன்னனனிடம் சிவனுக்கு குடுமி உள்ளது என்பதைக் காண்பித்தார் அர்ச்சகர். ஆனாலும் சந்தேகம் நீங்காத அரசர் குடுமியை இழுக்த்துப் பார்த்தார். இழுத்த வேகத்தில் சிவனின் தலையில் இருந்து இரத்தம் பீறிட்டது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியுற்றனர். மன்னரும் சிவனின் தலையில் குடுமி இருப்பது உண்மைதான் என்பதை உணர்ந்து, சுவாமி தன்னை மன்னித்தருள வேண்டினார். தன் கருணை உள்ளத்துடன் அனைவரையும் மன்னித்தருளிய இறைவன் இது தனது திருவிளையாடல் என்பதையும் அனைவருக்கும் உணர்த்தினார். அன்று முதல் அழகிய குடுமியுடன் காணப்படுகிறார் இக்கோயில் சிவபிரான்.


இப்பூவுலகில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் மனசாட்சி எழுதிய சட்டங்கள் சில உள்ளன. பெற்றோரைப் பேணி காப்பது, பெரியோரை வணங்குவது, தாய் நாட்டை காப்பது, மட்டுமல்லாது, நம் நாட்டை இழித்துப் பேசாமல் இருப்பது, போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த வரிசையில் உள்ளன. அந்த வரிசையில் நமது கலை வடிவங்களை போற்றிப் பாதுகாப்பது. நம்மால் இதுபோன்ற கலைப் பொக்கிஷங்களை உருவாக்குவது என்பது பெரிய விஷயம். ஆனால் நம் ஒவ்வொருவராலும் முடியக்கூடிய விஷயம் இவற்றைப் பாதுகாப்பது. இது போன்ற செயல்கள் மூலமாகவும் நாம் நமது தேசப் பற்றினை வெளிப்படுத்தலாம்.

Related Posts with Thumbnails