Friday, May 4, 2012


நவதிருப்பதி திருத்தலங்கள்

தசாவதாரமும் நவகிரகங்களும்:
பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர


என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
ஸ்ரீ வாமனவதாரம் - குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
ஸ்ரீ வராகவதாரம் - ராகு
ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.


அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் - சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்



கள்ளபிரான் சுவாமி திருக்கோயில்:
சூரிய ஸ்தலமான இத்திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
தல மூர்த்தி: கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
தல இறைவி: வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார், சோரநாத நாயகி)
தல தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
கிரகம்: சூரிய ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



விஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை):
சந்திர ஸ்தலமான இத்திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல மூர்த்தி: விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்)
தல இறைவி: வரகுணவல்லி, வரகுணமங்கை
தல தீர்த்தம்: தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்
கிரகம்: சந்திரன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்
செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.
தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்:
புதன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)
தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)
தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்
விமானம்: வதசார விமானம்
கிரகம்: புதன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்:
குரு ஸ்தலமான இத்திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி
மேலும் விவரங்களுக்கு...



தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்:
சுக்ரன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)
தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்:
சனி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):
ராகு ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):
கேது ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்)
தல இறைவி: கருத்தடங்கண்ணி
தல தீர்த்தம்: வருணை தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
க்ரகம்: கேது ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



நவதிருப்பதி ஆலயங்களை, ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம், அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.

இதுபோல, நவதிருப்பதி தலங்கள் திருநெல்வேலிக்கு அருகில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்ல, நமது பெருமைமிகு கோயில் நகரமான கும்பகோணத்தைச் சுற்றிலும் நவதிருப்பதி தலங்கள் அமைந்துள்ளன. அவை,

திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோயில் - சூரியன்
நந்திபுர விண்ணகரம் (ஸ்ரீ நாதன் கோவில்) - சந்திரன்
நாச்சியார்கோவில் - செவ்வாய்
திருப்புள்ளம் பூதங்குடி - புதன்
திருஆதனூர் - குரு
திருவெள்ளியங்குடி - சுக்கிரன்
ஒப்பிலியப்பன் கோயில் - சனி
கபிஸ்தலம் - ராகு
ஆடுதுறை பெருமாள் கோயில் - கேது

இவை அனைத்தும் ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களாகவும் விளங்குகின்றன. இந்த திருத்தலங்களைப் பற்றியும், அத்திருக்கோயில்களை தரிசனம் செய்து, எழுதவேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய அவா. நிச்சயம் செய்ய முயல்வேன்.

இப்போது நம் அனைவருக்குமே கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம், நமக்குக் கிடைத்துள்ள கோடை விடுமுறை. இந்த விடுமுறை நாட்களில் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு நம் பிள்ளைகளை அழைத்துச் செல்வதோடு நின்றுவிடாமல், இது போன்ற பல்வேறு திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம், நம் முன்னோர்களது வாழ்க்கை முறை பற்றியும், அவர்கள் எத்தகைய பெருமை மிகுந்த சிறப்பான வாழ்க்கையை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள் என்பதையும், நமது கோயில்களின் கலை நுணுக்கங்களையும், வண்ணக் கலவைகளையும், சிற்ப வேலைப் பாடுகளையும், அவை இத்தனை காலங்கள் ஆகியும் நிமிர்ந்து நிற்பதன் மேன்மையையும், இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற சமதர்ம சன்மார்கத்தையும், அவர்களுக்கு நேரடியாகக் காண்பித்து, நமக்கு எத்தனை பெருமை மிகு பின்னணி உள்ளது என்பதையும், அவற்றை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பது போன்ற பொன்னான விஷயங்களை அவர்களது மனதின் ஆழத்தில் விதைக்க வேண்டியது நம் எல்லோரது கடமையாகும். வாழ்க வளர்க நமது திருக்கோயில்களும், அவற்றின் பெருமைகளும்!!

Thursday, May 3, 2012


திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோயில் (இரட்டை திருப்பதி)

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் கேது ஸ்தலமாக விளங்கும் திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி), தூத்துக்குடி மாவட்டம்.


சிந்தையாலும் சொல்லாலும் செய்கை னாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்றடைந்து வண்குரு கூர வர் சடகோபன் சொல்
முந்தை ஆயிரத்துள்ளி இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லர் அடி மை செய்வார் திருமாலுக்கே!!


திருத்தல அமைவிடம்:
இந்த கேது ஸ்தலமான திருத்தொலைவில்லிமங்கலம் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.


திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்)
தல இறைவி: கருத்தடங்கண்ணி
தல தீர்த்தம்: வருணை தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
க்ரகம்: கேது ஸ்தலம்


திருத்தல வரலாறு:
தேவர்பிரான் திருக்கோயிலில் யாகம் செய்து மனநிறைவுடன் வாழ்ந்து வந்த சுப்ரபர், தினப்படி திருக்கோயிலின் அருகில் அமைந்திருந்த திருக்குளத்தில் இருந்து தாமரை மலர்களை பறித்து, அவற்றை மாலையாகத் தொடுத்து தேவர்பிரானுக்குச் சூட்டி மகிழ்ந்தார். நம் கையால் மலர்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சூடிபார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், மன நிறைவிற்கும் அளவே இல்லைதான். அத்தகைய மனநிறைவுடன் தன் வேலைகளை, சுவாமி கைங்கர்யங்களை அன்றாடம் செய்து வந்து கொண்டிருந்தார் சுப்ரபர். தனக்கு மாலை சூட்டி வணங்கும் சுப்ரபரின் பக்தியில் மனம் மகிழ்ந்த தேவர்பிரான், அவர் நாள்தோறும் எங்கிருந்து தனக்கு மலர் மாலை கொண்டுவந்து அணிவிக்கிறார் என்பதை அறிய ஆசைகொண்டு, முனிவர் பெருமான் தோட்டத்தில் உள்ள பொய்கைக்கு செல்லும் நேரம் பார்த்து அவரைப் பின்தொடர்ந்தார்.


அங்கு வந்த தேவர்பிரான், அந்தப் பொய்கையின் வளமையையும், பசுமையையும், குளிர்ச்சியான தோற்றப் பொலிவும் கண்டு, முனிவரை நெருங்கி அவரிடம், "முனிவரே, இந்த இடம் மிகவும் குளிர்ச்சி மிகுந்ததாகவும், மலர்கள் நிறைந்த இடமாகவும் இருக்கிறது, இங்குள்ள மலர்களைப் பொழியும் மரங்களின் மீது மலய மலையில் இருந்து வீசுகின்ற தென்றல் தவழ்ந்தோடுகிறது. இந்த இடம் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது, அதனால் இந்த சுகந்தமான பொய்கையின் கரையிலேயே நான் வாசம் செய்ய விரும்புகிறேன், உமது யாகசாலையில் தேவநாதனாகவும், இந்தத் தூய்மையான தடாகத்தில் அரவிந்தலோசனாகவும் குடியிருக்கப் போகிறேன். இன்றிலிருந்து தடாகங்களின் கரையோரம் அமைந்துள்ள எனக்கும், எனக்குத் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள தேவர்பிரானையும் தாமரை மலர்களால் பூஜை செய்வீர்களாக", என்று சுப்ரப முனிவரிடம் கூறி அருளினார். அதுமுதல் இரட்டை திருப்பதியில் அமைந்துள்ள இரண்டு திருமாலுக்கும் தாமரை மலர்களால் அன்றாடம் அர்ச்சனை செய்து இறைவனடி சேர்ந்தார் சுப்ரப முனிவர்.

அரவிந்த லோசனர் அஸ்வினி தேவர்களுக்கு வரம் அளித்த வரலாறு:
முன்னொரு காலத்தில் அஸ்வினி தேவர்கள் என இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மக்களுக்கு வைத்தியம் செய்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் பிரம்மதேவனிடம் சென்று, "உலகில் செய்யப்படும் வேள்விகளிலும், யாகங்களிலும் இருந்து தேவர்களுக்கு கிடைப்பதுபோல எங்களுக்கும் பங்கு வேண்டும்" எனக் கேட்டனர். மக்களுக்கு வைத்தியம் செய்யும் நீங்கள், உங்களுக்கும் யாகத்தில் பாகம் வேண்டும் என்று விரும்பினால் பூலோகத்திற்குச் சென்று அங்கு திருத்தொலைவில்லிமங்கலம் என்ற இடத்தில் வாசம் செய்யும் தேவநாதன், அரவிந்தலோசனர் என்னும் இரண்டு பெருமாளையும் வணங்கி தவமிருக்க, நீங்கள் வேண்டியது கிடைக்கும், என பிரம்மன் அருளினார்.

அதுபோலவே தொலைவில்லிமங்கலம் வந்த அஸ்வினி தேவர்கள், இத்தல தேவர்பிரானையும், அரவிந்தலோசனரையும் மனதார எண்ணி தவமியற்றினர். அவர்களது அன்பிற்கும், பக்திக்கும் மனமிரங்கிய பெருமான், அஸ்வினி தேவர்கள் முன் தோன்றி, அவர்களிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அஸ்வினி தேவர்கள்,"யாகங்களில் இருந்து தேவர்களுக்குக் கிடைப்பது போல பாகம் எங்களுக்கும் வேண்டும்" எனக் கேட்டனர். உடனே திருமால் தேவர்களைப் பார்த்து இவர்கள் என்மீது கொண்ட பக்தியின் பலனாக இவர்களுக்கும் இன்றிலிருந்து யாகத்தில் பாகம் தரவேண்டும் எனக் கட்டளை இட்டார். அஸ்வினி தேவர்கள் இருவரும் இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி என் மீது தவம் இருந்த காரணத்தால் இன்று முதல் இந்த தீர்த்தம் அஸ்வினி தீர்த்தம் என அழைக்கப்படும்" என்றார் பெருமாள்.


அஸ்வினி தீர்த்த மகிமை:
பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்பாக இமயமலைக்குத் தென் புறமாக, கங்கை நதிக் கரையில் அகளங்கம் என்ற ஊரில் சத்தியசீலர் என்பவர் தனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் வன்னிசாரன், விபீதகன், சுவர்ணகேது என மூன்று பேரும் ஆவர். இதில் விபீதகன் சரும நோயால் பாதிக்கப் பட்டிருந்தான். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவனது நோய் தீர்ந்தபாடில்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த நாரத பெருமானிடம், தனது பிள்ளை விபீதகன் இவ்வாறு நோயால் அவதிப்பட என்ன காரணம் எனக் கேட்டார். அதற்கு நாரதர், "இவன் தனது முற்பிறவியில் தனது குருவின் பசுவைத் திருடிவிட்டான், அதனால் அவனது குரு தந்த சாபத்தினால், இப்பிறவியில் விபீதகனுக்கு இந்த சரும நோய் பீடித்துள்ளது" எனக் கூறினார். மேலும், "தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள தொலைவில்லிமங்கலம் சென்று, அங்குள்ள அஸ்வினி தீர்த்தத்தில் நீராடினால் உன் உடல் உபத்திரவம் தீரும்" எனவும் கூறி அருளினார் நாரதர். அவ்வாறே விபீதகனும் அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி தனது நோயிலிருந்து விடுபட்டான். விபீதகன் அங்கேயே தங்கி தேவர்பிரானுக்கும், அரவிந்தலோசனருக்கும் சேவை புரிந்து முகுந்த பெருமானால் முக்தி பெற்றான்.



இந்தத் திருத்தலமும் வனத்திற்கு நடுவிலேயே அமைந்து மிகவும் அமைதியான சூழ்நிலையில் நிறுவப்பட்டுள்ளது. கோயிலுக்குள்ளேயே பசுமாடுகள் வளர்க்கப் படுகின்றன. வனங்களுக்கு இடையில் திருக்கோயில் அமைந்துள்ளதால் வீடுகள் அதிகம் இல்லாத காரணத்தால் திருக்கோயில் சிப்பந்திகளுக்கு திருத்தலத்திற்கு அருகிலேயே வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்கு உள்ளேயே பூங்காக்கள் அமைக்கப்பட்டு நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.



வேலூருக்கு அருகில் அமைந்துள்ள படவேடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ள புண்ணியமிகு திருத்தலங்களில் ஏறக்குறைய 14 திருத்தலங்களை TVS நிறுவனத்தார் தங்களது மேற்பார்வையின் கீழ் கொண்டுவந்து, அவற்றை மிகவும் தூய்மையாகவும், அழகாகவும் பராமரித்து வருகின்றனர். அதுபோலவே இங்கு அமைந்துள்ள நவ திருப்பதி ஆலயங்களையும் அதே TVS நிறுவனத்தரே மிகுந்த கர்ம சிரத்தையுடன் பாதுகாத்து வருகின்றனர். இது போல நாமும் நம் நாட்டின் பெருமைகளான, அழியாத சொத்துக்களாக விளங்கும் திருக்கோயில்களை சிறப்பாகப் பேணி காத்திட நம்மால் முடிந்ததை செயல்படுத்திடவேண்டும். நாம் சேர்த்து வைக்கும் புண்ணியங்களே நம் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் உண்மையான நிலையான சொத்து.

Wednesday, May 2, 2012


திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி)

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் ராகு ஸ்தலமாக விளங்கும் திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி), தூத்துக்குடி மாவட்டம்.


துவளில் மாமணி மாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண்சங்கு சக்கரம் என்றும் தாமரை தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர் கண்கள் நீர்மல்க நின்று நின்ரு குமுருமே!!
நம்மாழ்வார்

திருத்தலம் அமைவிடம்:
இந்த ராகு ஸ்தலமான திருத்தொலைவில்லிமங்கலம் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.


திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம்


திருத்தல வரலாறு:
திருப்புளியங்குடி என்ற புண்ணியமிகு திருத்தலத்திற்கு சற்று அருகாமையில் மலர்கள் நிறைந்த, நெல் வயல்களால் சூழ்ந்த, பசுமையும் இயற்கையின் வண்ணமும் நிறைந்த ஒரு திருப்பதியாக திருத்தொலைவில்லிமங்கலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் பல காலங்களுக்கு முன்பாக ஆத்திரேய கோத்திரத்தில் தோன்றிய ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். சுப்ரபர் என்ற திருநாமம் கொண்ட அந்த முனிவர் யாத்திரையாக பயணம் செய்து வந்து கொண்டிருந்த வேளையில், இந்த தொலைவில்லிமங்கலம் சேத்திரத்தை அடைந்தவுடன், இவ்விடத்தின் அழகான, எழிலான சூழ்நிலை கண்டு, இந்த இடத்தில் ஒரு யாகம் செய்ய எண்ணினார். அதனால் இந்த இடத்தை யாகம் செய்வதற்காக சுத்தம் செய்து உழுது பண்படுத்தினார். அவ்வாறு சுத்தம் செய்யும்போது அங்கே ஒரு தராசையும் வில்லையும் கண்டார். இங்கே எப்படி இவை வந்ததென்று எண்ணி வியப்படைந்தார். இவை எக்காலத்தில், யாரால் கொண்டுவரப்பட்டன என்று நினைத்துக்கொண்டே அவற்றை தன் கையால் எடுத்தார். அந்த முனிவரின் கை பட்டதும், அந்த தராசு ஒரு பெண்ணாகவும், அந்த வில் ஒரு ஆணாகவும் உரு மாற்றம் பெற்றன. அவர்கள் இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து வெளி வந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்து முனிவரும், அவர் கூட இருந்த பக்த கோடிகளும், "நீங்கள் எப்போது, எதனால், யாரால் இதுபோல வில்லாகவும் தராசாகவும் உரு மாறினீர்கள்" எனக் கேட்டனர். அதற்கு அத்தம்பதியினர், "நான் வித்யாதரன், இவள் என் மனைவி, நாங்கள் இருவரும் குபேரனது சாபத்தால் இந்நிலையை அடைந்தோம், அவரிடமே எங்களுக்கு சாப விமோசனம் கேட்டோம், அதற்கு குபேரன், இவ்வாறு நீ வில்லாகவும், உனது பத்தினி தராசாகவும் வெகு காலத்திற்கு நிலத்தில் அழுந்தி இருக்க வேண்டும், சில காலம் சென்றபின் ஆத்ரேயசுப்ரபர் என்ற முனிவர் எந்த இடத்திலும் யாகம் செய்ய மனமில்லாமல் இந்த தலத்திற்கு வந்து சேர்ந்து யாகம் நடத்த நிலத்தை உழுவார். அந்த நேரத்தில் நீங்கள் சாபம் நீங்கப் பெறுவீர்கள்" என்று கூறினார்.

அன்றிலிருந்து நாங்கள் இந்த உருவத்திலேயே இந்நிலத்தில் புதைந்து கிடக்கிறோம். உங்கள் புண்ணியத்தால் சாபம் நீங்கப் பெற்றோம் என்று அந்த தம்பதியினர் கூறினர். அதன் பிறகு முனிவர்கள் யாகத்தை செய்து முடித்து விஷ்ணு பெருமானை ஆராதனை செய்தனர். அங்கு எழுந்தருளிய பெருமானை வணங்கி, "இத்தலத்தில் நீங்கள் தேவர்பிரான் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்" என்று வேண்டினர். இந்த தலத்தில் வில்லும், துலை என்னும் தராசும் முக்தி அடைந்த காரணத்தினால், இவ்விடம் திருத்தொலைவில்லிமங்கலம் என்ற பெயருடன் விளங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர். ஆத்ரேயசுப்ரபர் கேட்ட இந்த வேண்டுகோளை ஏற்று அதனை அங்கீகரித்தார் விஷ்ணு பெருமான்.

இத்திருக்கோயிலின் கோபுரங்களில் சிவபிரானின் வடிவமான மரத்தின் அடியிலே அமர்ந்து தன் பக்தர்களுக்கு அருளிக் கொண்டிருக்கும் தட்சிணாமூர்த்தியும் இருப்பது ஒரு தனிச் சிறப்பு.
இந்த இரட்டை திருப்பதி தலத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இரண்டு திருத்தலங்கள் அருகருகே அமைந்துள்ளன. இத்திருக்கோயிலின் அருகிலே வீடுகள் அதிகம் காணப்படவில்லை. வனங்களுக்கு நடுவிலேதான் இத்திருக்கோயில்கள் அமைந்துள்ளன. மிகவும் தூய்மையாக, சுத்தமாகத் திருக்கோயிலை பராமரித்து வருகின்றனர் இத்தலத்தை. தூய்மை இருக்கும் இடத்தில் இறைவன் குடியிருப்பான்.


வாயும் மனைவியர் பூமங்கையார்கள் எம்பிராற்கு
ஆயுதங்கள் ஆழி முதல் ஐம்படைகள் தூய
தொலைவில்லி மங்கலமூர் தோள் புருவமேனி
மலையில் இமம் கலந்தவாள்!!
108 திருப்பதி அந்தாதி

Monday, April 30, 2012


திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதி திருத்தலங்களில் சனி ஸ்தலமாக விளங்கும் திருக்குளந்தை (பெருங்குளம்), தூத்துக்குடி மாவட்டம்.


தனக்குடலம் வேறான தண்மையுணரான்
மனக்கவலை தீர்த்துய்ய மாட்டானி னைக்கிற்
றிருக்குளந்தையாருரைத்த சீர்க்கீதை பாடும்
தருக்குளந்தையாமலிருந்தால்!!

திருத்தல அமைவிடம்:
இந்த திருக்குளந்தை திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம்


திருத்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் துலைவில்லி மங்கலம் என்ற ஊருக்கு அருகிலே தடாகவனம் என்ற தலம் இருந்தது. அத்தலத்தில் வேதஸாரன் என்ற அந்தணர், தனது மனைவி குமுதவல்லியுடன் வாழ்ந்து வந்தார். தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற திருமாலின் அருளினால் இந்தத் தம்பதியினருக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு கமலாதேவி என்று பெயரிட்டு அழைத்தனர்.

தனது பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பில் சிறப்புடன் வளர்ந்து வந்த கமலாதேவி, பெருமாள் மேல் உள்ள பெரும் பக்தியின் காரணமாக, இறைவனையே கணவனாக அடைய விரும்பினாள். பெற்றவர்கள், நட்புவட்டம், உறவினர் என யார் சொல்லியும் கேளாமல், திருமாலை எண்ணி தவம் இயற்றினாள். இவ்விளம் பெண்ணின் கடும் தவத்தினை கண்ட விஷ்ணுபிரான், கமலாதேவி முன் தோன்றி, "நீ இவ்வாறு கடுந்தவம் புரிவதன் நோக்கம் என்ன" எனக் கேட்டார். அதற்கு கமலாதேவி, ஸ்ரீமந் நாராயணனையே மணம் புரிந்து வாழ விரும்புவதாகக் கூறினாள். அதற்கு சம்மதம் தெரிவித்து திருமாலும் கமலாதேவியை திருமணம் செய்துகொண்டார். இவ்வாறாக கமலாதேவி என்னும் பாலிகை தவம் செய்த வனம் என்பதால் பாலிகாவனம் என்ற பெயர் உண்டானது. வேதஸாரனும் தான் அன்றாடம் வழிபடும் பெருமாளே, தன் மகளை தன் இதயத்தில் இருத்தி உள்ளதை எண்ணி எண்ணி மனம் மகிழ்ச்சியுற்றார். அன்றாடம் பெருமாளை மனதார நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் பூஜை செய்து வந்தார்.


பெருமான் மாயக் கூத்தாடிய வரலாறு:
ஒரு நாள் வேதஸாரனின் மனைவி குமுதவல்லி ஆற்றங்கரையில் நீர் எடுக்கச் சென்றிருந்த வேளையில், அம்சநாரன் என்ற அரக்கன் அவளை கடத்திச் சென்று இமயமலைச் சாரலில் சிறை வைத்தான். தனது அன்பு மனைவியை அரக்கன் ஒருவன் கவர்ந்து சென்றதை பெருமாளிடம் கூறி, தன் மனைவியை மீட்டுத் தர மன்றாடினான் வேதஸாரன். அவனது அழுகுரலுக்கு மனமிறங்கி தனது கருடவாகனத்தில் இமயமலை சென்று அம்சநாரனிடம் இருந்து குமுதவல்லியை மீட்டு வந்தார் திருமால்.

பாலிகாவனத்தில் திருமால் குடிகொண்டிருப்பதை அறிந்த அந்த அரக்கன் இந்த வனத்திற்கு வந்து பெருமானுடன் போரிட்டான். திருமால், அந்த அரக்கனை போரில் வென்று வதம் செய்து அரக்கனது தலை மேல் ஏறி நர்த்தனமாடினார். அதற்குப் பிறகு இத்தல இறைவனுக்கு தேவர்கள் அனைவரும் கங்கை நீரால் திருமஞ்சனம் செய்வித்தனர். நடனமாடிய காரணத்தினாலேயே இத்தல இறைவனுக்கு சோரநாட்டியன் என்றும் மாயக்கூத்தன் என்றும் பெயர் வந்தது. அரக்கனுடன் ஏற்பட்ட போரில் வெற்றிபெற கருடாழ்வார் பெருமானுக்கு உதவிய காரணத்தினால் இன்றும் இத்தல உற்சவ மூர்த்தியுடனும், தாயாருடனும் கருடாழ்வாருக்கு ஒரே ஆசனத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தலத்திலும் சிற்பங்களின் பேரழகு கண்ணைக் கவர்கிறது மனதையும் சேர்த்து. பல தூண்கள் சிற்பங்களின் அழகால் நிறைந்திருந்தாலும் குறிப்பாக ஒரு தூணில் குதிரையும் யாழியும் கலந்த ஒரு மிருகத்தை வாகனமாகக் கொண்டு கல்கி அவதாரம் வாளுடன் தோற்றமளிப்பது தனித்துவமாக உள்ளது, வேறெங்கும் இல்லாத வடிவம்.
இத்திருக்கோயிலில் பல வருடங்களுக்கு முன்பாக வாசத்தடம் என்ற குளம் பிரசன்ன ஜோதிடம் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலின் தெற்குப்புறமாக கழுநீர் தொட்டியான் என்ற சன்னதி உள்ளது. திரு மடப்பள்ளியில் இருந்து வரும் பிரசாத நீர், இவரது பாதம் வழியாகத்தான் செல்கிறது.

திருக்குளந்தை பெரிய அளவிலான குளங்கள், வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த பசுமையான பூமியாகும். இங்கு, மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் நின்ற கோலத்தில் பெரிய உருவத்துடன் காட்சி தருகிறார். பொதுவாக வைணவத் தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் பெரிய பாக்கியமாகக் கருதப் படுகிறது. அதன் காரணமாகவே, இத்தல பெருமாளின் திருவடியை நன்றாக தரிசிக்க அர்த்த மண்டபத்திற்கு வெளியே பெரிய கண்ணாடி ஒன்று உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது புதுமையான ஒன்றாகும்.


கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன் கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தன்
மாடக்கொடிமதின் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே!!
நம்மாழ்வார்

Friday, April 27, 2012


தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நவதிருப்பதிகளில் சுக்ரன் ஸ்தலமாக விளங்கும் தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.


வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தித்த தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்கேன் அன்னைமீர்காள்
வெள்ளச் சுகமன் வீற்றிருக்க வேதவொலியும் விழா வொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே!!
நம்மாழ்வார்

திருக்கோயில் அமைவிடம்:
இந்த தென்திருப்பேரை திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு, (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)
தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம்


திருத்தல வரலாறு:
வைகுண்டத்தில் ஒருநாள் ஸ்ரீதேவி கவலையுடன் காணப்பட்டாள். தன் பதி திருமால் தன்னைவிட பூமாதேவியிடம் தான் மிகுந்த அன்புடனும், பிரியத்துடனும் இருப்பதாக எண்ணிக்கொண்டு மனம் வருந்தினாள். தன்னுடைய இந்த வருத்தத்தினை துர்வாச முனிவரிடம் போய் சொல்லி முறையிட்டாள். தன்னை விட பூமாதேவி அழகு என்பதனால் தான் இவ்வாறு திருமால் நடந்துகொள்வதாக ஸ்ரீதேவி தானாகவே நினைத்துக்கொண்டு, துர்வாசரிடம் தன்னையும் பூமாதேவி போல வடிவத்தில் மாற்றுமாறு கூறினாள்.

அதற்குப் பிறகு துர்வாசர் பூமாதேவியைக் காணச் சென்ற வேளையில், திருமாலுடன் இருந்த பூமாதேவி தன்னை சரியான விதத்தில் விருந்தோம்பல் புரியாமலும், மதிக்காமலும் அலட்சியம் செய்வதைக் கண்டு கோபமுற்று, பூமாதேவியிடம், நீ ஸ்ரீதேவியின் உருவத்தைப் பெறுவாய், என சாபமிட்டார். தான் செய்த தவறினை உணர்ந்த பூமாதேவி, முனிவரிடம் சாப விமோசனம் கேட்க, தாமிரபரணியின் கரையிலே அமைந்துள்ள தென்திருப்பேரை என்னும் தலத்திற்கு வந்து ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மனதாரச் சொல்லிவர, பங்குனி பௌர்ணமி, முழு நிலா நாளன்று, ஆற்று நீரை அள்ளி எடுக்கும் போது இரண்டு மகர குண்டலங்கள், மீன் வடிவிலான காதில் அணியும் அணிகலன்கள், பூமாதேவிக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் திருமால் பூமாதேவி முன் தோன்ற, தனக்குக் கிடைத்த காதணிகளை திருமாலுக்குக் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு பூமாதேவி தன் அன்புக் கணவரிடம் கொடுக்க, திருமாலும் அதனை விருப்பமுடன் அணிந்து கொண்டார்.

அந்த நிமிடமே பூமாதேவி தன் சுய உருவத்தினை அடைந்தாள். இந்த திருத்தலத்திலே பூமாதேவி, லக்ஷ்மி தேவியின் உருவத்தில், வடிவத்தில் காட்சி கொடுப்பதால், இத்தலம் திருப்பேரை என பெயர் பெற்றது. இன்றும் இத்தல பெருமாள் மகரகுண்டலங்களுடன் காட்சி தருகிறார். அதனாலேயே, இத்தல இறைவன் மகரநெடுங்குழைக்காதன் என அழைக்கப்படுகிறார்.


வருணன் பாசம் பெற்ற வரலாறு:
ஒரு சமயம் வருணன் அசுரர்களுடன் போரிட்டு, தனது பாசம், நாகம் போன்ற ஆயுதங்களை இழந்தான். உடன், இந்த திருப்பேரை திருத்தலம் வந்து தவம் இயற்றி, தான் இழந்த ஆயுதங்களை திரும்பப் பெற்றான். இதன் காரணாமாகவே, தற்போதும், மழை வேண்டி இத்தல இறைவனை வேண்டினால், அந்த வேண்டுதல் பொய்க்காது.

விதர்ப்ப நாட்டில் பஞ்சம் நீங்கிய வரலாறு:
முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டில் ஒரு மாமாங்கத்திற்கு மழையே பொழியாமல் வானம் பொய்த்துப்போனது. நாடெங்கும் வறட்சி மிகுதியால் பஞ்சம் தோன்றியது. அந்நாட்டு அரசன், தன் குருநாதரைச் சந்தித்து, நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரிடம் யோசனைக் கேட்டான். குருவும் "திருப்பேரைத் திருத்தலம் சென்று மகரநெடுங்குழைக்காதரை வழிபட்டு வந்தால்" உன் நாட்டு மக்கள் துன்பம் தீரும் எனக் கூறினார். அவ்வாறே அம்மன்னன் செய்ய, அந்நாட்டில் மழை பெய்து வளம் பெற்றது.

பிரம்மனுக்கும், ஈசான்ய ருத்தரருக்கும் முன்னிலையில் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதமாக, பரமபத திருக்கோலத்தில் இத்தல பெருமாள் காட்சி அளிக்கின்றார். பக்த கோடிகள் வேதம் ஓதும் அழகிய காட்சியையும், குழந்தைகள் திருக்கோயிலில் மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் காட்சியையும் காணும் நோக்கத்துடன், தன் தலைசிறந்த பக்தன், கருடாழ்வாரை நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி அமரச் சொன்ன காரணத்தால், இத்திருக்கோயிலில் கருடன் சன்னதி, திருமால் சன்னதிக்கு நேர் எதிரே இல்லாமல் இடது பக்கம் சற்றே நகர்ந்து அமைந்த கோலம், வேறு எந்த திருத்தலத்திலும் காணாத அமைப்பாகும்.


இத்திருக்கோயிலில் 10-ம் நூற்றாண்டின் மத்தியில் கொடிமரமும், மண்டபங்களும், திருத்தேரும் அமைக்கப்பட்டுள்ளதாக இங்கு கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகின்றது. அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்த சுந்தரபாண்டிய மன்னன், தனக்கு பிள்ளை வரம் வேண்டி, தினப்படி திருமாலுக்கு பூஜை செய்ய, இவ்வூரைச் சேர்ந்த அந்தணர்கள் மட்டுமல்லாது, சோழ நாட்டில் இருந்து மேலும் 108 அந்தணர்களை அழைத்து வர எண்ணினார். இவ்வூர் அந்தணர்கள், பெருமாளைத் தனக்குள் ஒருவராகவே எண்ணி நித்தியப்படி பூஜைகளையும் வெகு சிறப்பாகவும், பெரும் பக்தியுடனும் செய்து வந்தனர்.

மன்னனின் எண்ணப்படி சோழ நாட்டில் இருந்து 108 அந்தணர்களை அழைத்து வரும் வேளையில், ஒருவர் மட்டும் காணாமல் போய்விட்டார். ஊருக்கு அனைத்து அந்தணர்களும் வந்து சேரும்போது மொத்தம் 107 நபர்களே இருந்தனர். பாண்டிய மன்னன் வந்து பார்க்கும்போது 108 அந்தணர்கள் இருந்தனர். திருமாலாகிய பெருமாளே 108-வது அந்தணராக வந்து சேர்ந்து கொண்டதாகவும், அதனாலேயே இத்தல இறைவன் தங்களுக்குள் ஒருவன் என இவ்வூர் மக்கள் கொண்டாடுகின்றனர்.

கூடுபுனல் துறையும் குழைக்காதன் திருமாலையும் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது இவ்வூர் மக்களின் வழக்கில் உள்ள கூற்று. இத்தல இறைவனின் அழகை, பேரழகுடைய முகில் வண்ணன் என்றும், ஈடு இணையில்லாத அழகை உடையவன் என்றும் நம்மாழ்வார் தனது பாசுரத்தில் பாடியுள்ளார்.


அதைசாகி வையமுழுதாண்டாலும் இன்பக்
கரைசார மாட்டார்கள் கண்டீர் முரைசாரும்
தென் திருப்பேரைப் பதியான் சீர்கெட்டு நாவிலவன்
தன்றிருப் பேரைப்பதியாதார்!!
108 திருப்பதி அந்தாதி

Thursday, April 26, 2012


ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.


திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள பெருமாள் ஆலயங்கள், நவதிருப்பதி ஸ்தலங்கலாகவும், அவற்றினை நவகிரகங்கள் உடன் தொடர்பு கொண்ட திருக்கோயில்களாகவும் வரிசைபடுத்தி நவதிருப்பதி என ஒன்பது பெருமாள் ஆலயங்களை வரிசைபடுத்தி ஆலய தரிசனம் செய்யலாம். இந்த நவதிருப்பதிகளின் வரிசையில், ஏற்கனவே நாம் சூரிய ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் திருத்தலத்தையும், சந்திரன் ஸ்தலமான ஸ்ரீவரகுணமங்கை திருத்தலத்தையும், செவ்வாய் ஸ்தலமான திருக்கோளூர் திருத்தலத்தையும், புதன் ஸ்தலமான திருப்புளியங்குடி திருத்தலத்தையும் தரிசனம் செய்துள்ளோம். இப்போது, நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமான, ஆழ்வார் திருநகரி என்னும் திருத்தலத்தை தரிசிப்போம் வாருங்கள்.

நவ திருப்பதி ஆலயங்களை ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம் அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.

திருக்கோயில் அமைவிடம்:
அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.

ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடியாடிப் பணிந்து பலபடிகளால் வழியேறிக் கண்டீர்
கூடிவானவரத்தே நின்ற திருக்குருகூரதனுள்
ஆடுபுட்கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே!!
ஸ்ரீ நம்மாழ்வார்

ஒன்றுந்தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றும் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றெத் தெய்வம் நாடுதிரே!!
ஸ்ரீ நம்மாழ்வார்

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி


திருத்தல வரலாறு:
இந்த ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள் உள்ளன. குருகு என்றால் சங்கு என்பது பொருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த சங்கு, இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருக்குருகூர் என்ற பெயர் வந்தது என்றும், பெரும் வெள்ளத்தால் உலகமே அழிந்து, மீண்டும் உருவானபோது முதலில் உண்டான இடம் என்பதால் ஆதிசேத்ரம் என்றும், நாம்மாழ்வார் கோயில் கொண்டு இருந்ததால் ஆழ்வார் திருநகரி என்றும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம் மகாவிஷ்ணுவின் அம்சமாக விளங்கும் வியாச முனிவரை அவரது பிள்ளையாகிய சுகமுனிவர், இந்த குருகாசேத்ரத்தின் மகிமையினைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிசைந்து வியாச முனிவரும் திருமாலுக்கு மிகவும் பிரியமான இந்த திருத்தலத்தின் மகிமையை கூறத் தொடங்கினார்.

குருகாசேத்திர மகிமை:
பரந்தாமனுக்கு பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களிடம் திருவிளையாடல்கள் புரிவதே வேலை. அதுபோல் தன் பரம பக்தன் நான்முகனிடம் உயிர்களை படைக்கும் பவித்ரமான பணியினை பரந்தாமன் அளித்தாலும், பிரம்மனுக்கு அதனை செய்ய சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் திருமாலின் உதவியை நாடினான். அதன்படி விஷ்ணுபிரானை சந்தித்து தனக்குள்ள அச்சத்தைப் போக்கிக் கொண்ட பிறகு தன்படைப்புத் தொழிலில் அதிகாரம் செலுத்த விரும்பினான். அவ்வாறு திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தான். தனது கடும் தவத்தின் பலனாக நான்முகன் முன் விஷ்ணு தோன்றினார். பின்னர் பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவனது படைப்புத் தொழிலுக்கு எல்லாக் காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என வாக்களித்தார். அதோடு உன் தவத்தின் வலிமையால் உன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரியும் வண்ணம் நான் இப்போது அவதரித்ததால், அதுவும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய இந்த ஸ்தலத்தில் முதன் முதலாக அவதரித்தத்தால், இந்த சேத்திரம் ஆதிசேத்திரம் என்ற பெயருடன் விளங்கும் என்றும் என் நாமம் ஆதிநாதன் எனவும் விளங்கட்டும் என பெருமாள் கூறி அருளினார். மேலும் நான்முகன் நாராயணனிடம், எனக்கு குருவாக இருந்து உபதேசித்ததனால் இச்சேத்திரம் குருகாசேத்திரம் என விளங்க வேண்டும் என கேட்க அப்படியே ஆகட்டும் என்றார் திருமால்.

அதன்பின் பிரம்மாவிடம் விஷ்ணு, நீ ஆதிசேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட நீ நினைக்கும் காரியங்கள் கைகூடும் எனவும், யாரும் காணாத எனது திருமேனியை உனக்குக் காட்டியது மட்டுமல்லாமல், எல்லோரும் பார்க்கும் வண்ணம் குருகாசேத்திரத்தில் அவதரிக்கப் போகிறேன் என்றும், கலியுகத்திலே சடகோபர் என்னும் திருப்பெயருடன் யோகியாய் அவதரித்து வடமொழி வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அந்த வேதமறைகளைப் படிக்கும் மாந்தர் அனைவரும் முக்தியடையும் வண்ணம் சித்தம் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்.

யானையும் வேடனும் முக்தி அடைந்த வரலாறு:
முன்னொரு காலத்தில் புனித யாத்திரை செல்ல எண்ணிய மகான்கள் பலரும் ஆதிசேத்திரம் வந்து அத்தல தீர்த்தங்களில் நீராடி நாராயணனின் பெருமைகளை பேசித் தீர்த்து, அன்றைய வேலைகளை செய்து முடித்து பொழுதும் விடிந்தது. இத்தலத்திற்கு வந்து தங்கள் பொழுதைக் கழித்த முனிவர்களுக்கு அந்த பொழுது மிக இனிமையாகக் கழிந்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வாறு மனம் மகிழ்ந்திருந்த நேரத்தில், அத்திருத்தலம் வந்த ஒரு யானைக்கும் வேடனுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டு இருவரும் பலமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மாண்டனர். ஆனாலும் கூட தேவலோகத்தில் இருந்து இந்த யானையையும், வேடனையும் மேலோகம் அழைத்துச் செல்ல சுவர்க்கத்தில் இருந்து தூதுவர்கள் வந்திருந்தனர். அதே நேரத்தில் யானையும் வேடனும் சண்டையிட்டு செய்த பாவத்தின் பலனாக இருவரையும் நரகத்திற்கு அழைத்துச் செல்ல எமதூதர்களும் வந்திருந்தனர். எமதூதர்களால் விஷ்ணுதூதர்களை எதிர்க்க வழியில்லாமல் தங்களது கடமையைச் செய்யாமல் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். ஆறறிவு இருந்தும் பாவம் புரிந்த வேடனுக்கும், ஐந்தறிவு படைத்த யானைக்கும் இந்த சேத்திரத்தில் முக்தி கிடைத்த அரிய நிகழ்வைக் கண்ட முனிவர்கள் ஆச்சர்யத்துடன் இந்நிகழ்வை வசிஷ்ட முனிவரிடம் கூறினர். அவரும் இத்தல பெருமையினை மேலும் கூறலானார்.


தாந்தன் முக்தி பெற்ற வரலாறு:
பல காலங்களுக்கு முன்பு மந்தன் என்ற அந்தண சிறுவன் வேதம் கற்க ஆசைப்பட்டு வேத பாட சாலையில் சேர்ந்தான். ஆனால் அவன் ஆசைப்பட்ட விதத்தில் அவனால் வேதங்களை மனம் ஒன்றி படிக்க முடியவில்லை. இதனால் கோபமுற்ற அவனது குரு, மந்தனை சபித்து பாடசாலையில் இருந்து அனுப்பிவிட்டார். அதன்பிறகு அவன் திருக்கோயில்களில் வேலை செய்து தன் காலத்தைக் கழித்து பின் உயிரிழந்தான். அடுத்த பிறவியில் தாந்தன் என்ற பெயருடன் ஒழுக்க சீலனாக வாழ்ந்து வந்தான். ஆனால் அவனை யாரும் மதிக்காத சூழ்நிலையில், அவனை அனைவரும் ஒதுக்கிய சூழ்நிலையில், குருகூர் தலம் வந்து ஆதிநாதனை வழிபட்டு அங்கேயே தனது வாழ்வை தொடர்ந்தான். இந்நிலையில் தாந்தனை ஒதுக்கியவர்களுக்கு திடீரென கண் பார்வை இல்லாமல் போனது. அவர்கள் அனைவரும் திருமாலைச் சரணடைந்தனர். நீங்கள் எல்லோரும் தாந்தனை ஒதுக்கிய காரணத்தினால் தான் உங்களுக்கு கண் தெரியாமல் போனது, நீங்கள் அனைவரும் தாந்தனிடம் மன்னிப்பு கேட்க உங்களுக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்கும் என திருமால் அசரீரியாய்க் கூறினார். அவ்வாறே நடந்தபின் திருமாலும் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் ஒன்றாய் தாந்தனுக்குக் காட்சிகொடுத்து தாந்தனை முக்தி அடையச் செய்தார். அதன் காரணமாக இத்தலம் தாந்தசேத்திரம் எனவும் பெயர் பெற்றது.

சங்கமுனிக்கு அருள் கிடைத்த வரலாறு:
பின்னொரு சமயம் தாந்தன் தங்கிய ஆலமரத்தின் கீழ் வேடன் ஒருவன் தங்கிய காரணத்தினாலேயே அவனது அடுத்த பிறவியில் சங்கன் என்னும் முனிவராக பிறந்து இறைவனடி சேர கடும் தவம் புரிந்தான். அவ்வாறு தவம் புரியும் வேளையில், சங்கு முனிவரை நாரத முனிவர் சந்தித்து, சங்கன் தவம் புரியும் காரணம் கேட்க, முக்தி அடையும் பொருட்டே தவமிருப்பதாக அவர் கூற, "நீ குருகூர் சென்று பெருமாளை வேண்ட முக்தி கிடைக்கும்" என நாரதர் கூறினார். அவ்வாறே சங்கனும், சங்காக மாறி குருகூர் சென்று திருமாலை வழிபட்டு முக்தி அடைந்தார். அந்த இடம் இன்றும் திருச்சங்கண்ணி துறை என அழைக்கப்படுகிறது.

பஞ்ச சேத்திரமாக விளங்கும் குருகாசேத்திரம்:
ஆதி சேத்திரம்:
பூலோகத்தில் உள்ள திருமால் ஆலயங்களில் மகாவிஷ்ணு முதன் முதலாக வாஸம் செய்த தலம் என்பதால் ஆதி சேத்திரம் எனவும், இத்த இறைவனுக்கு ஆதிநாதன் எனவும் பெயர் வந்தது.

வராக சேத்திரம்:
பெரும் வெள்ளத்தில் அழிய இருந்த பூமியை, திருமால் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிய ஸ்தலம் என்பதாலும், பூமாதேவிக்கு ஞான உபதேசம் செய்வித்த ஞானபிரான் குடிகொண்ட ஸ்தலம் என்பதாலும், வராக சேத்திரம் என்ற பெயர் வந்தது. இந்த ஞானபிரான் சன்னதி திருக்கோயிலின் உள்ளே முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளது.

சேச சேத்திரம்:
ஆதிசேஷன் உறங்காப்புளியாக வாழும் ஸ்தலம் என்பதாலும், அதன் அருகிலேயே நம்மாழ்வார் பிறந்து வளர்ந்து குடிகொண்ட திருத்தலம் என்பதாலும் சேச சேத்திரம் என வழங்கப்படுகிறது.

தீர்த்த சேத்திரம்:
தாமிரபரணி ஆறும், அதில் உள்ள திருச்சங்காணித் துறையும் தீர்த்தங்களாக விளங்குவதால் தீர்த்த சேத்திரம் என அழைக்கப்படுகிறது.

தாந்த சேத்திரம்:
தாந்தன் என்னும் மானிடனை திருமாலின் அருளினால் தேவர்களும் வணங்கும் வண்ணம் உயர்த்திய ஊர் என்பதால் தாந்த சேத்திரம் என பெயர் வந்தது.

நம்மாழ்வார் வரலாறு:
பெருமாள் முன்பு, "கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன் என்ற பெயரில் அவதரிப்பேன்" என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார். அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல் இருந்தது. வழக்கத்திற்கு மாறாக வளர்ந்த அக்குழந்தையை மாறன் என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். தன் குழந்தையின் இந்த நிலை கண்டு கவலையுற்ற பெற்றோர், குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, ஆதிசேஷன் புளிய மரமாக உள்ள மரத்தில் தொட்டில் கட்டிப் போட்டனர்.


இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார். அதன்படியே சடகோபரை அடைந்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார். மேலும் ரிக், யஜூர், அதர்வண வேதங்களின் சாரத்தை முறையே திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி போன்றவற்றையும் உபதேசித்தார். எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.


ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.

நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். 31 ஆண்டு காலம் இந்த புளிய மரத்தடியில் 36 பெருமாளைப் பற்றி பாடியதால் இந்த மரத்தினைச் சுற்றி 36 திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. நம்மாழ்வார், தனது 35-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது பூத உடல் பள்ளிகொண்டுள்ள இடத்தில் திருக்கோயில் அமைத்து வைகாசித் திருவிழாக் கொண்டாடினார் மதுரகவி ஆழ்வார். வட மொழியில் நான்கு வேதங்கள் உள்ளது போல் தமிழில் நான்கு வேதங்களை உருவாக்கியுள்ளார் நம்மாழ்வார். இவர் இயற்றிய திருவாய்மொழி, திராவிட வேதம் என அழைக்கப்படுகிறது.

நாதமுனிகளின் தமிழ்த் தொண்டு:
மதுரகவி ஆழ்வாரின் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களும் எங்கு போனதென்று தெரியவில்லை. பிற்காலத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீரநாராயணபுரம் என்று அழைக்கப்படும் காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் அவதரித்த நாதமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியாரின் பெரும் முயற்சியால் அனைத்து நாலாயிர திவ்வியபிரபந்த பாடல்களும் கிடைக்கப் பெற்றன. அவரது சீரிய தொண்டினால் நாடெங்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பரவின. நாதமுனிகளின் தமிழ் தொண்டு போற்றுதற்குரியது.

திருப்புளிய மர வரலாறு:
ஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி மனநிறைவு பெற்று, வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆணையிட்டார். அந்த சமயத்தில், கோபத்திற்குப் பேர் போன துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தைப் பற்றி நன்கு அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். அப்போது ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து பேசி வழியனுப்பி வைத்தாலும், தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து "நீ அசையாப் பொருளாக ஆவாயாக" என சாபமிட்டார்.


இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால், உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன் எனக் கூறினார். வானுலகத்திற்கு கற்பக விருட்சம் போல் பூலோகத்திற்கு இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை. பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது. சுவாமி நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால், இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த குருகூர் ஸ்தலம், கம்பர், ராமானுஜர் வழிபட்ட பெரும் சிறப்பு பெற்ற ஸ்தலங்களாகும். மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும்.

திருக்கோயில் அமைப்பு:
திருக்கோயில் ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது. திருக்கோயிலின் முன்புறம் பந்தல் மண்டபம் என அழைக்கப்படும் கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த கல் மண்டபத்தைத் தாண்டி, மாட வீதியைத் தாண்டிச் சென்றால் ராஜ கோபுரம் வருகிறது. கோயிலின் உள்ளே பலிபீடமும், அதனை அடுத்து கொடிமரமும் அமைந்துள்ளன. கருடர் சன்னதியைத் தாண்டிச் சென்றால் ஆதிநாதனின் மூலவர் சன்னதி அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோயில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோயில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் காணப்படுகிறார்.


பின்னர் ஸ்ரீ ராமர் சன்னதி, சேனை முதலியார் சன்னதி, பொன்னீந்த பெருமாள் சன்னதியையும் காணலாம். உட்பிரகாரத்தில் வேணுகோபாலன் சன்னதியும், ஞானபிரான் சன்னதியும், ஞானபிரான் கருடனும், ஆதிநாயகி சன்னதியும், பன்னிரு ஆழ்வார் அறையும் அமைந்துள்ளன. இராப்பத்து மண்டபத்தினை அடுத்து உறங்காப்புளி என்றும் திருப்புளி என்றும் அழைக்கப்படும் இக்கோயில் தலவிருட்சம் அமைந்துள்ளது. இதன் பின்புறம் பரமபத வாசல் அமைந்துள்ளது.

கோயிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தனி கோயில் உள்ளது. அதனை அடுத்து நாதமுனி சன்னதி, யாகசாலை, பன்னிரெண்டு ஆழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, திருவேங்கடமுடையான் சன்னதிகள் அமைந்துள்ளன. ஆதிநாதர் சன்னதியின் வெளிபிரகாரத்தில் கண்ணாடி மண்டபம், கம்பர் அறை அமைந்துள்ளன. கோயில் மதிலுக்கு வெளியே ஸ்ரீ பட்சிராஜர் சன்னதியும், ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியும், அனுமன் சன்னதியும் அமைந்துள்ளன.

சிற்பக்கலை:
இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது.


இத்திருக்கோயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இத்திருக்கோயில் சிற்பம், இசை, கட்டிடக்கலையில் மட்டுமல்ல ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் தனிக் கோயிலைச் சுற்றி உள்ள பிரகாரச் சுவர்களில் 108 திவ்யதேசப் பெருமாள்களின் உருவங்கள் ஓவியங்களாய்த் தீட்டப் பட்டுள்ளன. பல் வேறு வரலாற்றுக் கதைகளும் ஓவியங்களாய்த் வரையப்பட்டுள்ளன.

கொண்டாடப்படும் உற்சவங்கள்:
ஆனி மாதம் வசந்த உற்சவம், ஆடி மாதம் திரு ஆடிஸ்வாதி, ஆவணி மாதம் திருப்பவுத்திர உற்சவமும், உறியடி உற்சவமும், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவமும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும், பெருமாள், ஆழ்வார், ஸ்ரீ வைகுண்டம் செல்லுதல் திருவிழாவும், சித்திரைத் திருவிழாவும், சித்திராப் பௌர்ணமி திருவிழாவும், வைகாசிப் பெருவிழாவும், கருட சேவையும், மாசி உற்சவமும், பங்குனி உற்சவமும், வைகுண்ட ஏகாதசி விழாவும் என வருடம் முழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

எதிர்காலத் தலைமுறையினருக்கு திருக்கோயில்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் சமுதாய நலனுக்கு எந்த விதத்தில் கோயில்கள் நலம் பயக்கின்றன என்பன பற்றி எடுத்துரைக்க வேண்டியது நம் எல்லோரது கடமையாகும்.

Related Posts with Thumbnails