Monday, April 30, 2012


திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதி திருத்தலங்களில் சனி ஸ்தலமாக விளங்கும் திருக்குளந்தை (பெருங்குளம்), தூத்துக்குடி மாவட்டம்.


தனக்குடலம் வேறான தண்மையுணரான்
மனக்கவலை தீர்த்துய்ய மாட்டானி னைக்கிற்
றிருக்குளந்தையாருரைத்த சீர்க்கீதை பாடும்
தருக்குளந்தையாமலிருந்தால்!!

திருத்தல அமைவிடம்:
இந்த திருக்குளந்தை திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம்


திருத்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் துலைவில்லி மங்கலம் என்ற ஊருக்கு அருகிலே தடாகவனம் என்ற தலம் இருந்தது. அத்தலத்தில் வேதஸாரன் என்ற அந்தணர், தனது மனைவி குமுதவல்லியுடன் வாழ்ந்து வந்தார். தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற திருமாலின் அருளினால் இந்தத் தம்பதியினருக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு கமலாதேவி என்று பெயரிட்டு அழைத்தனர்.

தனது பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பில் சிறப்புடன் வளர்ந்து வந்த கமலாதேவி, பெருமாள் மேல் உள்ள பெரும் பக்தியின் காரணமாக, இறைவனையே கணவனாக அடைய விரும்பினாள். பெற்றவர்கள், நட்புவட்டம், உறவினர் என யார் சொல்லியும் கேளாமல், திருமாலை எண்ணி தவம் இயற்றினாள். இவ்விளம் பெண்ணின் கடும் தவத்தினை கண்ட விஷ்ணுபிரான், கமலாதேவி முன் தோன்றி, "நீ இவ்வாறு கடுந்தவம் புரிவதன் நோக்கம் என்ன" எனக் கேட்டார். அதற்கு கமலாதேவி, ஸ்ரீமந் நாராயணனையே மணம் புரிந்து வாழ விரும்புவதாகக் கூறினாள். அதற்கு சம்மதம் தெரிவித்து திருமாலும் கமலாதேவியை திருமணம் செய்துகொண்டார். இவ்வாறாக கமலாதேவி என்னும் பாலிகை தவம் செய்த வனம் என்பதால் பாலிகாவனம் என்ற பெயர் உண்டானது. வேதஸாரனும் தான் அன்றாடம் வழிபடும் பெருமாளே, தன் மகளை தன் இதயத்தில் இருத்தி உள்ளதை எண்ணி எண்ணி மனம் மகிழ்ச்சியுற்றார். அன்றாடம் பெருமாளை மனதார நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் பூஜை செய்து வந்தார்.


பெருமான் மாயக் கூத்தாடிய வரலாறு:
ஒரு நாள் வேதஸாரனின் மனைவி குமுதவல்லி ஆற்றங்கரையில் நீர் எடுக்கச் சென்றிருந்த வேளையில், அம்சநாரன் என்ற அரக்கன் அவளை கடத்திச் சென்று இமயமலைச் சாரலில் சிறை வைத்தான். தனது அன்பு மனைவியை அரக்கன் ஒருவன் கவர்ந்து சென்றதை பெருமாளிடம் கூறி, தன் மனைவியை மீட்டுத் தர மன்றாடினான் வேதஸாரன். அவனது அழுகுரலுக்கு மனமிறங்கி தனது கருடவாகனத்தில் இமயமலை சென்று அம்சநாரனிடம் இருந்து குமுதவல்லியை மீட்டு வந்தார் திருமால்.

பாலிகாவனத்தில் திருமால் குடிகொண்டிருப்பதை அறிந்த அந்த அரக்கன் இந்த வனத்திற்கு வந்து பெருமானுடன் போரிட்டான். திருமால், அந்த அரக்கனை போரில் வென்று வதம் செய்து அரக்கனது தலை மேல் ஏறி நர்த்தனமாடினார். அதற்குப் பிறகு இத்தல இறைவனுக்கு தேவர்கள் அனைவரும் கங்கை நீரால் திருமஞ்சனம் செய்வித்தனர். நடனமாடிய காரணத்தினாலேயே இத்தல இறைவனுக்கு சோரநாட்டியன் என்றும் மாயக்கூத்தன் என்றும் பெயர் வந்தது. அரக்கனுடன் ஏற்பட்ட போரில் வெற்றிபெற கருடாழ்வார் பெருமானுக்கு உதவிய காரணத்தினால் இன்றும் இத்தல உற்சவ மூர்த்தியுடனும், தாயாருடனும் கருடாழ்வாருக்கு ஒரே ஆசனத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தலத்திலும் சிற்பங்களின் பேரழகு கண்ணைக் கவர்கிறது மனதையும் சேர்த்து. பல தூண்கள் சிற்பங்களின் அழகால் நிறைந்திருந்தாலும் குறிப்பாக ஒரு தூணில் குதிரையும் யாழியும் கலந்த ஒரு மிருகத்தை வாகனமாகக் கொண்டு கல்கி அவதாரம் வாளுடன் தோற்றமளிப்பது தனித்துவமாக உள்ளது, வேறெங்கும் இல்லாத வடிவம்.
இத்திருக்கோயிலில் பல வருடங்களுக்கு முன்பாக வாசத்தடம் என்ற குளம் பிரசன்ன ஜோதிடம் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலின் தெற்குப்புறமாக கழுநீர் தொட்டியான் என்ற சன்னதி உள்ளது. திரு மடப்பள்ளியில் இருந்து வரும் பிரசாத நீர், இவரது பாதம் வழியாகத்தான் செல்கிறது.

திருக்குளந்தை பெரிய அளவிலான குளங்கள், வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த பசுமையான பூமியாகும். இங்கு, மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் நின்ற கோலத்தில் பெரிய உருவத்துடன் காட்சி தருகிறார். பொதுவாக வைணவத் தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் பெரிய பாக்கியமாகக் கருதப் படுகிறது. அதன் காரணமாகவே, இத்தல பெருமாளின் திருவடியை நன்றாக தரிசிக்க அர்த்த மண்டபத்திற்கு வெளியே பெரிய கண்ணாடி ஒன்று உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது புதுமையான ஒன்றாகும்.


கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன் கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தன்
மாடக்கொடிமதின் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே!!
நம்மாழ்வார்

6 comments:

மனோ சாமிநாதன் said...

வழக்கம்போல அழகான புகைப்படங்கள்! அந்த யாளி உள்ள‌ புகைப்படம் வெகு அழகு! இதற்கு சரித்திர பின்னணி எதுவும் இல்லையா புவனேஸ்வரி?

புவனேஸ்வரி ராமநாதன் said...

வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
மனோம்மா. அந்த யாழி பற்றிய பின்னணி எனக்குத்
தெரியவில்லை. அடுத்தமுறை அக்கோயிலுக்குச் செல்லும்போது விசாரித்து கண்டிப்பாகச் சொல்லுகிறேன். நன்றி.

ADHI VENKAT said...

அருமையான பகிர்வு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோவை2தில்லி...

மிக்க நன்றி ஆதிவெங்கட்.

Menaga Sathia said...

நிறைய திருக்கோயில்கள் பற்றி தங்கள் பதிவின் மூலம் அறியபெறுவதில் மிக்க மகிழ்ச்சி!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@S.Menaga..

மிக்க மகிழ்ச்சி மேனகா.

Post a Comment

Related Posts with Thumbnails