Saturday, March 29, 2014


காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில், ஊத்துக்காடு

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த, குழலூதும் கண்ணன் வீற்றிருக்கும் ஊத்துக்காடு எனும் சிறிய ஊரில் அமைந்துள்ள காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில்.


காளிங்கன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு
அவன் நீள் முடியைந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிபற தூமணி வண்ணனை பாடிபற!!
-- பெரியாழ்வார் திருமொழி

திருக்கோயில் அமைவிடம்:
இந்த ஊத்துக்காடு காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூரில் இருந்து 30 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 15 km தொலைவிலும் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாக ஊத்துக்காடு திருக்கோயிலை சென்றடையலாம். கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், பட்டீஸ்வரம், கோவிந்தகுடி வழியாக இத்திருக்கோயிலை அடையலாம்.

திருத்தல குறிப்பு:
தல இறைவன்: ஸ்ரீ வேத நாராயண பெருமாள்
தல இறைவி: ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி
உற்சவர்: ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன்

திருத்தல வரலாறு:
பொதுவாக கண்ணன் கதைகளைக் கேட்கக் கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும். கிருஷ்ண பகவானின் லீலைகளை கேட்பதில் அப்படி ஒரு ஆனந்தம். சாதாரண மனித ரூபத்தில் அவதாரமெடுத்து, மனிதர்கள் சூழ, சக மனிதன் அனுபவித்த சுக துக்கங்களில் பங்கெடுத்து, தானும் அதே சுக துக்கங்களை அனுபவித்து, நமக்கு ஒரு நண்பனின் சொரூபத்தில் வாழ்ந்த கண்ணனின் மீது நமக்கு அதீத அன்பு ஏற்படுவது இயற்கைதானே.

அதே நேரத்தில், கண்ணன் மீது அளவில்லா அன்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலக உயிர்கள் அத்தனைக்கும் உண்டு என்பதை நிரூபிக்கிறது இத்தல இறைவனின் திருத்தல வரலாறு. தன் பக்தர்களுக்காக, பக்தர்களின் அன்பில் குழைந்து, திளைத்து, எதையும் செய்யத் துணியும் கண்ணனின் காருண்யம்தான் இத்தல வரலாறு.

இந்த ஊத்துக்காடு என்னும் இயற்கை அன்னையின் அருள் பெற்று அளவற்ற செழிப்புடன், பசுமை வண்ணத்தால் கண்களையும், மனதையும் குளிரச் செய்யும்படி அமைந்துள்ள சிற்றூருக்கு அருகில் ஆவூர் என்னும் ஊரில் சிவன் திருக்கோயில் ஒன்று உள்ளது.

இத்தல இறைவனான ஸ்ரீ கைலாசநாதரின் திருவடி சேவை செய்யும் பொருட்டு, தேவலோக பசுவாகிய ஸ்ரீ காமதேனு தன் குழந்தைகளான நந்தினி, பட்டி என்னும் இரு கன்றுப் பசுக்களையும் இத்தலத்திலேயே விட்டுச் சென்றது.

இவ்வாறாக நந்தினி, பட்டி என்கிற இவ்விரு பசுக்களும் அபிஷேகப் பிரியரான கைலாசநாதரின் அபிஷேக ஆராதனைகளுக்கு பால் கொடுத்துக் கொண்டும், பூஜைக்குரிய பூக்களை நந்தவனத்தில் இருந்து பறித்து இறைவனுக்குப் படைத்துக் கொண்டும் தங்களது கைங்கர்யங்களைச் செய்து வந்தன. இது போல பசுக்களினால் தெய்வ ஆராதனை செய்யப்பட்ட காரணத்தினால் இத்தல ஈஸ்வரனுக்கு பசுபதீஸ்வரர் என்ற காரணப் பெயரும் உண்டானது.

இயற்கை எழில் மிகுந்த ஊத்துக்காடு மலர்கள் நிறைந்த சோலைவனமாகத் திகழந்தமையினால் ஆவூர் தெய்வத்திற்கு இந்த ஊத்துக்காட்டில் இருந்துதான் நந்தினி, பட்டி பசுக்கள் பூக்களை பறித்துச் செல்வதை தங்களது வழக்கமாகக் கொண்டிருந்தன.

இதுபோல தினமும் இப்பசுக்கள் மலர்களைக் கொய்த வண்ணம் இருக்க, ஸ்ரீ நாரத முனிவரோ இப்பசுக்களுக்கு தெய்வீகக் கதைகளைச் சொன்ன வண்ணம் உள்ளார். இது தினப்படி நடக்கும் ஒரு செயலாகிப் போனது இப்பசுக்களுக்கு.

இப்படியே புராணக் கதைகளை ஸ்ரீ நாரத முனிவர் சொல்லிக் கொண்டிருக்கையில், ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்ற பாம்பினை, அதனுடன் சண்டையிட்டுப் போராடி, அப்பாம்பின் ஆணவத்தை அடக்கி, அதன் தலை மீதேறி பேரழகு நர்த்தனம் ஆடி, அந்த பாம்பிற்கு அருள் பாலித்த கிருஷ்ணனின் கதையைச் சொல்லி முடித்தார் ஸ்ரீ நாரத முனிவர். மேலும், இந்த பெரும் லீலையை கண்ணன் மேற்கொள்ளும்போது பெருமான் ஐந்து வயது குழந்தைதான் என்ற விவரத்தையும் சொன்னார்.

இந்தக் கதையைக் கேட்ட நந்தினி, பட்டி பசுக்கள் கேவி, கேவி கண்ணீர்விட்டு அழத் தொடங்கி விட்டன. ஏன் இந்த அழுகை எனக் கேட்ட நாரத முனியிடம், அத்தகைய பெருத்த, பருத்த, பயமூட்டும் காளிங்கனிடம் எவ்வளவு கஷ்டப்பட்டு பகவான் போராடியிருப்பார்? அவ்வாறு போரிடும்போது கண்ணனது உடலெங்கும் காயங்கள் பட்டிருக்குமே. நீல வண்ண மேனி வலித்திருக்குமே எனப் பலவாறாக புலம்பித் தீர்த்து அழுது கொண்டே இருந்தன அந்த கன்று பசுக்கள்.

இது போன்ற மனதை நெகிழச் செய்யும் காட்சியினை தேவ லோகத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீ காமதேனுப் பசு, தன் பிள்ளைகள் கதறி அழுவதைக் காண முடியாமல், ஸ்ரீ கிருஷ்ண பகவானை தரிசனம் செய்து, தன் குழந்தைகளின் நிலையினை எடுத்துச் சொல்லி இப்படி ஒரு நிலைக்குத் தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டது.

அவ்வாறே ஸ்ரீ காமதேனு பசுவின் வேண்டுகோளுக்கு இணங்க பூமாதேவி வாசம் செய்யும் பூலோகத்திற்கு வந்து இவ்விரு பசுக்களையும் அரவணைத்து ஆறுதல் சொன்னார்.

கண்ணன் ஆறுதல் படலத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் சென்று, இந்த ஊத்துக்காட்டில் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த புஷ்ப வனத்திற்கு அருகாமையிலேயே ஒரு ஊற்றினை உருவாக்க, தண்ணீர் பெருக்கெடுத்து அங்கொரு குளம் உண்டானது. ஊத்துக்காடு எனும் பெயரும் பெற்றது. அக்குளத்திலேயே காளிங்க நர்த்தனத்தை மீண்டும் இப்பசுக்களுக்காக ஒரு முறை செய்து காண்பித்தார். தான் காளிங்க நர்த்தன லீலையை புரியும்போது எவ்விதத்திலும் கஷ்டப் படவில்லை, துன்பப் படவில்லை என்பதை அப்பசுக்களுக்கு உணர்த்தினார்.

இந்த காளிங்க நர்த்தன லீலையைக் கண்ணுற்ற இவ்விரு பசுக்களும் மூர்ச்சையாகி, மயங்கி விழுந்தன. பின்னர் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அருளினால் மயக்கம் தெளிந்து, பெரும்மூச்சும் வந்ததால் மூச்சுக்காடு என்றும் இத்தலம் பெயர் பெற்றது.

திருத்தல அமைப்பு:
மெத்தச் சிறப்பு வாய்ந்த புனிதத் தன்மை உடைய காவிரி ஆற்றினாலும், அதன் கிளை நதிகளாலும் சூழப்பட்டு, வெட்டாற்றின் வடகரையில் அமைந்துள்ள தேனுஸ்வாஸபுரம் என வடமொழியிலும், மூச்சுக்காடு என தேன் தமிழிலும் ஆதிகாலப் பெயர் கொண்ட வரலாற்றுப் புகழ் வாய்ந்த இவ்வூர் சிவஸ்தலமாகவும், விஷ்ணுஸ்தலமாகவும் விளங்குகிறது.

சங்க காலத்தில் இச்சிறிய கிராமம் கோவூர் என்ற திருநாமத்துடன் பெருமை பெற்று விளங்கியது. தண்ணீரே இல்லாமல் இருந்த இடத்தில் தனது கிருஷ்ண லீலையை செய்து காண்பிக்க ஏற்படுத்திய ஊற்றினால் ஊத்துக்காடு என்ற பெயருடன் இன்றுவரை விளங்குகிறது. இந்த பெருமை மிகு காளிங்க நர்த்தன பெருமாள் இங்கு வாசம் செய்வதால் இவ்வூருக்கு தென் கோகுலம் என்னும் பெயரும் உண்டு.

இந்த ஆலயத்தின் மேற்கு திசையில் ஏரியைப் போன்ற தோற்றத்தில் பெரிய தாமரைத் தடாகம் ஒன்று அமைந்துள்ளது.

மிகவும் பழமையானதும், பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு சிறப்பம்சங்களை தானகத்தே கொண்டுள்ள இத்திருக்கோயில் நுழைவு வாயிலின் இடப்புறமாக அருள்மிகு கணேசமூர்த்தி, நர்த்தன கோலத்தில் காட்சி அளித்து அருள் செய்கிறார். திருக்கோயில் மூலஸ்தான சன்னதியில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ வேதநாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ பாமா சமேதராக ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமாள் காளிங்கன் என்னும் சர்ப்பத்தின் சிரசின் மேல் நடன கோலத்தில் உற்சவ மூர்த்தியாக ஐம்பொன் சிலா ரூபமாக காட்சி அளிக்கிறார். இதுபோன்ற பாம்பின் மேல் நடனமாடும் கோலத்தில் காளிங்க நர்த்தன பெருமாளை உலகில் வேறு எங்கும் காண இயலாது.

ஸ்ரீ நாரதர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தாங்கள் காளிங்கன் மீது நர்த்தனம் ஆடிய லீலையை மீண்டும் இங்கே புரிந்ததால் நீங்கள் இங்கேயே விக்கிரகமாகி ஊத்துக்காட்டிலேயே தங்கி உலக மக்களுக்கெல்லாம் அருள் புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க பெருமானும் இங்கேயே தங்கி விட்டார். ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகத்தை ஸ்ரீ நாரதரே பிரதிஷ்ட்டையும் செய்துள்ளார். இந்த உற்சவ மூர்த்தி காளிங்க நர்த்தனரின் காலடியிலேயே நந்தினி, பட்டி எனும் இரு பசுக்களின் விக்கிரகங்கள் கண்ணனை அண்ணாந்து, கண்ணனையே பார்த்த கோலத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

தனிச்சிறப்பு:
ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமான், காளிங்கனின் சிரசின் மேல் தன் இடது திருவடியை வைத்துள்ளார். தனது வலது காலை நர்த்தன கோலத்தில் உயர்த்தியபடி உள்ளார். ஆக இறைவனது ஒற்றைப் பாதமே பாம்பின் சிரசின் மேல் உள்ளது. அவரது பாதத்திற்கும் பாம்பின் சிரசிற்கும் ஒரு நூல் விட்டு எடுக்கும் இடைவெளி உள்ளது. ஒரு கையை நானிருக்கிறேன் என்னும் பொருள்படும்படி அபயஹஸ்தமாகவும், மற்றொரு கையினால் காளிங்கனின் வாலைப் பிடித்தபடி காட்சி தருகிறார். அதுவும் காளிங்க பாம்பின் வாலினை பகவானின் கட்டை விரல் மட்டுமே தொட்டுக் கொண்டிருக்கும். மற்ற நான்கு விரல்கள் பாம்பின் வாலைத் தொடவில்லை.

இவ்வாறாக வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும், பாம்பின் தலையிலும் பிடிமானம் இல்லை என இந்த காளிங்க நர்த்தன பெருமாள் சிற்பத்தின் சிறப்பினை கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். இந்த விக்கிரகத்தின் தனிச்சிறப்பினை உணர்ந்த மத்திய அரசாங்கம் 1982-ம் ஆண்டில் மூன்று ருபாய் மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமாள் திருக்கோயில் மிகச்சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும், பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

ஊத்துக்காடு வெங்கடகவி:
உலகமெங்கும் இசை உலகில் பிரபலமாகவும், எல்லா இசைக் கலைஞர்களாலும் பாடப்படும் பாடல்களை இயற்றிய பெருமை கொண்டவர் ஊத்துக்காடு வெங்கடகவி. இவர் பிறந்த ஊரோ பல்வேறு சிறப்புக்களை உடைய மன்னார்குடி. ஆனால் அவர் வளர்ந்து கண்ணன் மேல் பாடல் பாடி உலகப் புகழ் பெற்ற ஊர் ஊத்துக்காடு. இந்த ஊரின் பெயரே இவரது பெயருடன் ஒட்டிக் கொண்டது.

இவருக்கு ஸ்ரீ காளிங்க நர்த்தன் பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். பெருமானை கண்ட பெரு மகிழ்ச்சியில் இத்தல இறைவன் மேல் நிறைய பாடல்களை எழுதியுள்ளார். இவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் அனேக கர்னாடக சங்கீத பாடகர்களால் உலகமெங்கும் பாடப்பட்டு வருகிறது.

கதிரும் மதியும் என
நயன விழிகள் இரு நளினமான
சலனத்திலே காளிங்க சிரத்திலே
கதித்தபதத்திலே என்
மனத்தை இருத்தி கனவு நினைவினோடு
பிறவி பிறவி தோறும் கனிந்துருக
வரந்தருக.....
(பால் வடியும் முகம்) எனத் தொடங்கும் பாடல்
-- ஊத்துக்காடு வேங்கடகவி

ஊத்துக்காடு வெங்கட கவி எழுதிய எண்ணற்ற பாடல்களில் ஆடாது அசங்காது, அலை பாயுதே கண்ணா, அசைந்தாடும், குழலூதும் எனத் தொடங்கும் மிகப் பிரபலமான கர்னாடக சங்கீத கீர்த்தனைகளும் அடங்கும்.

இவ்வாறாக பல்வேறு பெருமைகளை உள்ளடக்கிய இத்திருக்கோயிலை நமது வாழ்நாளில் நாம் நமது குடும்பத்துடன் சென்று இத்தல பெருமானது தனித்த தன்மையையும், பேரழகையும், உலகில் எங்கும் காணக் கிடைக்காத இப்பெருமானது தோற்றப் பொலிவையும், பெருமானது கண்ணில் பொங்கும் கருணையையும் கண்ணார மனதாரக் கண்டு களித்து வருவோம். இந்த காளிங்க நர்த்தன பெருமாளைக் காணும் அந்த கணம் அந்த நொடிப் பொழுது அப்படியே நின்று விடாதா? என நினைக்கும் வண்ணமும், நம்முடன் பகவான் பேசுவது போலவும், பல்வேறு நிலைப்பாடுகள் நம்முள்ளே வந்து வந்து செல்கின்றன. இப்படி ஒரு உன்னத அனுபவம் இத்திருக்கோயில் சென்று நர்த்தன பெருமாளை நேரில் காணும்போது மட்டுமே கிடைக்கும் அனுபவம்.

நமது இந்திய நாடு, குறிப்பாக தமிழகம் எத்தனையோ கால மாற்றங்களைச் சந்தித்தாலும் இந்தத் திருக்கோயில் வடிவங்களும் அதன் அமைப்புகளும், திருக்கோயிலில் காணப்பெறும் பல்வேறு சிலாரூபங்களும், அவற்றின் அதிசய சிறப்புக்களும், இத்தனை யுகங்களைத் தாண்டி வந்த நமது பாரத நாட்டின் சொத்துக்களாகிய இவை, இனியும் எத்தனை யுகங்கள் ஆனாலும் காலங்களைக் கடந்து நிற்கும் என்பதில் துளியும் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. நமது பெருமைமிகு சிறப்புமிகு சொத்துக்களைக் காத்திடுவோம்!

இவற்றுக்கெல்லாம் மேலாக, இத்தகைய சிறப்பு வாய்ந்த, பழமை வாய்ந்த இத்திருத்தலம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதால், இக்கோயிலை சீரமைக்கும் திருப்பணி நடைபெற்று வருகிறது.


திருக்கோயில் தொலை பேசி எண்:
ஊத்துக்காடு: 04374 - 268549, 94426 99355
சென்னை: 98846 20129

ஊத்துக்காடு வேங்கடகவி பாடல் தொகுப்பு


பட உதவி : www.oothukkadu.com

Friday, May 4, 2012


நவதிருப்பதி திருத்தலங்கள்

தசாவதாரமும் நவகிரகங்களும்:
பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர


என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
ஸ்ரீ வாமனவதாரம் - குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
ஸ்ரீ வராகவதாரம் - ராகு
ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.


அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் - சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்



கள்ளபிரான் சுவாமி திருக்கோயில்:
சூரிய ஸ்தலமான இத்திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
தல மூர்த்தி: கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
தல இறைவி: வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார், சோரநாத நாயகி)
தல தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
கிரகம்: சூரிய ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



விஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை):
சந்திர ஸ்தலமான இத்திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல மூர்த்தி: விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்)
தல இறைவி: வரகுணவல்லி, வரகுணமங்கை
தல தீர்த்தம்: தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்
கிரகம்: சந்திரன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்
செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.
தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்:
புதன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)
தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)
தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்
விமானம்: வதசார விமானம்
கிரகம்: புதன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்:
குரு ஸ்தலமான இத்திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி
மேலும் விவரங்களுக்கு...



தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்:
சுக்ரன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)
தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்:
சனி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):
ராகு ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):
கேது ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.
தல இறைவன்: அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்)
தல இறைவி: கருத்தடங்கண்ணி
தல தீர்த்தம்: வருணை தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
க்ரகம்: கேது ஸ்தலம்
மேலும் விவரங்களுக்கு...



நவதிருப்பதி ஆலயங்களை, ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம், அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.

இதுபோல, நவதிருப்பதி தலங்கள் திருநெல்வேலிக்கு அருகில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்ல, நமது பெருமைமிகு கோயில் நகரமான கும்பகோணத்தைச் சுற்றிலும் நவதிருப்பதி தலங்கள் அமைந்துள்ளன. அவை,

திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோயில் - சூரியன்
நந்திபுர விண்ணகரம் (ஸ்ரீ நாதன் கோவில்) - சந்திரன்
நாச்சியார்கோவில் - செவ்வாய்
திருப்புள்ளம் பூதங்குடி - புதன்
திருஆதனூர் - குரு
திருவெள்ளியங்குடி - சுக்கிரன்
ஒப்பிலியப்பன் கோயில் - சனி
கபிஸ்தலம் - ராகு
ஆடுதுறை பெருமாள் கோயில் - கேது

இவை அனைத்தும் ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களாகவும் விளங்குகின்றன. இந்த திருத்தலங்களைப் பற்றியும், அத்திருக்கோயில்களை தரிசனம் செய்து, எழுதவேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய அவா. நிச்சயம் செய்ய முயல்வேன்.

இப்போது நம் அனைவருக்குமே கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம், நமக்குக் கிடைத்துள்ள கோடை விடுமுறை. இந்த விடுமுறை நாட்களில் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு நம் பிள்ளைகளை அழைத்துச் செல்வதோடு நின்றுவிடாமல், இது போன்ற பல்வேறு திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம், நம் முன்னோர்களது வாழ்க்கை முறை பற்றியும், அவர்கள் எத்தகைய பெருமை மிகுந்த சிறப்பான வாழ்க்கையை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள் என்பதையும், நமது கோயில்களின் கலை நுணுக்கங்களையும், வண்ணக் கலவைகளையும், சிற்ப வேலைப் பாடுகளையும், அவை இத்தனை காலங்கள் ஆகியும் நிமிர்ந்து நிற்பதன் மேன்மையையும், இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற சமதர்ம சன்மார்கத்தையும், அவர்களுக்கு நேரடியாகக் காண்பித்து, நமக்கு எத்தனை பெருமை மிகு பின்னணி உள்ளது என்பதையும், அவற்றை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பது போன்ற பொன்னான விஷயங்களை அவர்களது மனதின் ஆழத்தில் விதைக்க வேண்டியது நம் எல்லோரது கடமையாகும். வாழ்க வளர்க நமது திருக்கோயில்களும், அவற்றின் பெருமைகளும்!!

Thursday, May 3, 2012


திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோயில் (இரட்டை திருப்பதி)

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் கேது ஸ்தலமாக விளங்கும் திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி), தூத்துக்குடி மாவட்டம்.


சிந்தையாலும் சொல்லாலும் செய்கை னாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்றடைந்து வண்குரு கூர வர் சடகோபன் சொல்
முந்தை ஆயிரத்துள்ளி இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லர் அடி மை செய்வார் திருமாலுக்கே!!


திருத்தல அமைவிடம்:
இந்த கேது ஸ்தலமான திருத்தொலைவில்லிமங்கலம் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.


திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்)
தல இறைவி: கருத்தடங்கண்ணி
தல தீர்த்தம்: வருணை தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
க்ரகம்: கேது ஸ்தலம்


திருத்தல வரலாறு:
தேவர்பிரான் திருக்கோயிலில் யாகம் செய்து மனநிறைவுடன் வாழ்ந்து வந்த சுப்ரபர், தினப்படி திருக்கோயிலின் அருகில் அமைந்திருந்த திருக்குளத்தில் இருந்து தாமரை மலர்களை பறித்து, அவற்றை மாலையாகத் தொடுத்து தேவர்பிரானுக்குச் சூட்டி மகிழ்ந்தார். நம் கையால் மலர்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சூடிபார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், மன நிறைவிற்கும் அளவே இல்லைதான். அத்தகைய மனநிறைவுடன் தன் வேலைகளை, சுவாமி கைங்கர்யங்களை அன்றாடம் செய்து வந்து கொண்டிருந்தார் சுப்ரபர். தனக்கு மாலை சூட்டி வணங்கும் சுப்ரபரின் பக்தியில் மனம் மகிழ்ந்த தேவர்பிரான், அவர் நாள்தோறும் எங்கிருந்து தனக்கு மலர் மாலை கொண்டுவந்து அணிவிக்கிறார் என்பதை அறிய ஆசைகொண்டு, முனிவர் பெருமான் தோட்டத்தில் உள்ள பொய்கைக்கு செல்லும் நேரம் பார்த்து அவரைப் பின்தொடர்ந்தார்.


அங்கு வந்த தேவர்பிரான், அந்தப் பொய்கையின் வளமையையும், பசுமையையும், குளிர்ச்சியான தோற்றப் பொலிவும் கண்டு, முனிவரை நெருங்கி அவரிடம், "முனிவரே, இந்த இடம் மிகவும் குளிர்ச்சி மிகுந்ததாகவும், மலர்கள் நிறைந்த இடமாகவும் இருக்கிறது, இங்குள்ள மலர்களைப் பொழியும் மரங்களின் மீது மலய மலையில் இருந்து வீசுகின்ற தென்றல் தவழ்ந்தோடுகிறது. இந்த இடம் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது, அதனால் இந்த சுகந்தமான பொய்கையின் கரையிலேயே நான் வாசம் செய்ய விரும்புகிறேன், உமது யாகசாலையில் தேவநாதனாகவும், இந்தத் தூய்மையான தடாகத்தில் அரவிந்தலோசனாகவும் குடியிருக்கப் போகிறேன். இன்றிலிருந்து தடாகங்களின் கரையோரம் அமைந்துள்ள எனக்கும், எனக்குத் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள தேவர்பிரானையும் தாமரை மலர்களால் பூஜை செய்வீர்களாக", என்று சுப்ரப முனிவரிடம் கூறி அருளினார். அதுமுதல் இரட்டை திருப்பதியில் அமைந்துள்ள இரண்டு திருமாலுக்கும் தாமரை மலர்களால் அன்றாடம் அர்ச்சனை செய்து இறைவனடி சேர்ந்தார் சுப்ரப முனிவர்.

அரவிந்த லோசனர் அஸ்வினி தேவர்களுக்கு வரம் அளித்த வரலாறு:
முன்னொரு காலத்தில் அஸ்வினி தேவர்கள் என இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மக்களுக்கு வைத்தியம் செய்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் பிரம்மதேவனிடம் சென்று, "உலகில் செய்யப்படும் வேள்விகளிலும், யாகங்களிலும் இருந்து தேவர்களுக்கு கிடைப்பதுபோல எங்களுக்கும் பங்கு வேண்டும்" எனக் கேட்டனர். மக்களுக்கு வைத்தியம் செய்யும் நீங்கள், உங்களுக்கும் யாகத்தில் பாகம் வேண்டும் என்று விரும்பினால் பூலோகத்திற்குச் சென்று அங்கு திருத்தொலைவில்லிமங்கலம் என்ற இடத்தில் வாசம் செய்யும் தேவநாதன், அரவிந்தலோசனர் என்னும் இரண்டு பெருமாளையும் வணங்கி தவமிருக்க, நீங்கள் வேண்டியது கிடைக்கும், என பிரம்மன் அருளினார்.

அதுபோலவே தொலைவில்லிமங்கலம் வந்த அஸ்வினி தேவர்கள், இத்தல தேவர்பிரானையும், அரவிந்தலோசனரையும் மனதார எண்ணி தவமியற்றினர். அவர்களது அன்பிற்கும், பக்திக்கும் மனமிரங்கிய பெருமான், அஸ்வினி தேவர்கள் முன் தோன்றி, அவர்களிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அஸ்வினி தேவர்கள்,"யாகங்களில் இருந்து தேவர்களுக்குக் கிடைப்பது போல பாகம் எங்களுக்கும் வேண்டும்" எனக் கேட்டனர். உடனே திருமால் தேவர்களைப் பார்த்து இவர்கள் என்மீது கொண்ட பக்தியின் பலனாக இவர்களுக்கும் இன்றிலிருந்து யாகத்தில் பாகம் தரவேண்டும் எனக் கட்டளை இட்டார். அஸ்வினி தேவர்கள் இருவரும் இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி என் மீது தவம் இருந்த காரணத்தால் இன்று முதல் இந்த தீர்த்தம் அஸ்வினி தீர்த்தம் என அழைக்கப்படும்" என்றார் பெருமாள்.


அஸ்வினி தீர்த்த மகிமை:
பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்பாக இமயமலைக்குத் தென் புறமாக, கங்கை நதிக் கரையில் அகளங்கம் என்ற ஊரில் சத்தியசீலர் என்பவர் தனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் வன்னிசாரன், விபீதகன், சுவர்ணகேது என மூன்று பேரும் ஆவர். இதில் விபீதகன் சரும நோயால் பாதிக்கப் பட்டிருந்தான். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவனது நோய் தீர்ந்தபாடில்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த நாரத பெருமானிடம், தனது பிள்ளை விபீதகன் இவ்வாறு நோயால் அவதிப்பட என்ன காரணம் எனக் கேட்டார். அதற்கு நாரதர், "இவன் தனது முற்பிறவியில் தனது குருவின் பசுவைத் திருடிவிட்டான், அதனால் அவனது குரு தந்த சாபத்தினால், இப்பிறவியில் விபீதகனுக்கு இந்த சரும நோய் பீடித்துள்ளது" எனக் கூறினார். மேலும், "தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள தொலைவில்லிமங்கலம் சென்று, அங்குள்ள அஸ்வினி தீர்த்தத்தில் நீராடினால் உன் உடல் உபத்திரவம் தீரும்" எனவும் கூறி அருளினார் நாரதர். அவ்வாறே விபீதகனும் அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி தனது நோயிலிருந்து விடுபட்டான். விபீதகன் அங்கேயே தங்கி தேவர்பிரானுக்கும், அரவிந்தலோசனருக்கும் சேவை புரிந்து முகுந்த பெருமானால் முக்தி பெற்றான்.



இந்தத் திருத்தலமும் வனத்திற்கு நடுவிலேயே அமைந்து மிகவும் அமைதியான சூழ்நிலையில் நிறுவப்பட்டுள்ளது. கோயிலுக்குள்ளேயே பசுமாடுகள் வளர்க்கப் படுகின்றன. வனங்களுக்கு இடையில் திருக்கோயில் அமைந்துள்ளதால் வீடுகள் அதிகம் இல்லாத காரணத்தால் திருக்கோயில் சிப்பந்திகளுக்கு திருத்தலத்திற்கு அருகிலேயே வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்கு உள்ளேயே பூங்காக்கள் அமைக்கப்பட்டு நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.



வேலூருக்கு அருகில் அமைந்துள்ள படவேடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ள புண்ணியமிகு திருத்தலங்களில் ஏறக்குறைய 14 திருத்தலங்களை TVS நிறுவனத்தார் தங்களது மேற்பார்வையின் கீழ் கொண்டுவந்து, அவற்றை மிகவும் தூய்மையாகவும், அழகாகவும் பராமரித்து வருகின்றனர். அதுபோலவே இங்கு அமைந்துள்ள நவ திருப்பதி ஆலயங்களையும் அதே TVS நிறுவனத்தரே மிகுந்த கர்ம சிரத்தையுடன் பாதுகாத்து வருகின்றனர். இது போல நாமும் நம் நாட்டின் பெருமைகளான, அழியாத சொத்துக்களாக விளங்கும் திருக்கோயில்களை சிறப்பாகப் பேணி காத்திட நம்மால் முடிந்ததை செயல்படுத்திடவேண்டும். நாம் சேர்த்து வைக்கும் புண்ணியங்களே நம் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் உண்மையான நிலையான சொத்து.

Wednesday, May 2, 2012


திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி)

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதிகளில் ராகு ஸ்தலமாக விளங்கும் திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி), தூத்துக்குடி மாவட்டம்.


துவளில் மாமணி மாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண்சங்கு சக்கரம் என்றும் தாமரை தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர் கண்கள் நீர்மல்க நின்று நின்ரு குமுருமே!!
நம்மாழ்வார்

திருத்தலம் அமைவிடம்:
இந்த ராகு ஸ்தலமான திருத்தொலைவில்லிமங்கலம் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.


திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம்


திருத்தல வரலாறு:
திருப்புளியங்குடி என்ற புண்ணியமிகு திருத்தலத்திற்கு சற்று அருகாமையில் மலர்கள் நிறைந்த, நெல் வயல்களால் சூழ்ந்த, பசுமையும் இயற்கையின் வண்ணமும் நிறைந்த ஒரு திருப்பதியாக திருத்தொலைவில்லிமங்கலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் பல காலங்களுக்கு முன்பாக ஆத்திரேய கோத்திரத்தில் தோன்றிய ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். சுப்ரபர் என்ற திருநாமம் கொண்ட அந்த முனிவர் யாத்திரையாக பயணம் செய்து வந்து கொண்டிருந்த வேளையில், இந்த தொலைவில்லிமங்கலம் சேத்திரத்தை அடைந்தவுடன், இவ்விடத்தின் அழகான, எழிலான சூழ்நிலை கண்டு, இந்த இடத்தில் ஒரு யாகம் செய்ய எண்ணினார். அதனால் இந்த இடத்தை யாகம் செய்வதற்காக சுத்தம் செய்து உழுது பண்படுத்தினார். அவ்வாறு சுத்தம் செய்யும்போது அங்கே ஒரு தராசையும் வில்லையும் கண்டார். இங்கே எப்படி இவை வந்ததென்று எண்ணி வியப்படைந்தார். இவை எக்காலத்தில், யாரால் கொண்டுவரப்பட்டன என்று நினைத்துக்கொண்டே அவற்றை தன் கையால் எடுத்தார். அந்த முனிவரின் கை பட்டதும், அந்த தராசு ஒரு பெண்ணாகவும், அந்த வில் ஒரு ஆணாகவும் உரு மாற்றம் பெற்றன. அவர்கள் இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து வெளி வந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்து முனிவரும், அவர் கூட இருந்த பக்த கோடிகளும், "நீங்கள் எப்போது, எதனால், யாரால் இதுபோல வில்லாகவும் தராசாகவும் உரு மாறினீர்கள்" எனக் கேட்டனர். அதற்கு அத்தம்பதியினர், "நான் வித்யாதரன், இவள் என் மனைவி, நாங்கள் இருவரும் குபேரனது சாபத்தால் இந்நிலையை அடைந்தோம், அவரிடமே எங்களுக்கு சாப விமோசனம் கேட்டோம், அதற்கு குபேரன், இவ்வாறு நீ வில்லாகவும், உனது பத்தினி தராசாகவும் வெகு காலத்திற்கு நிலத்தில் அழுந்தி இருக்க வேண்டும், சில காலம் சென்றபின் ஆத்ரேயசுப்ரபர் என்ற முனிவர் எந்த இடத்திலும் யாகம் செய்ய மனமில்லாமல் இந்த தலத்திற்கு வந்து சேர்ந்து யாகம் நடத்த நிலத்தை உழுவார். அந்த நேரத்தில் நீங்கள் சாபம் நீங்கப் பெறுவீர்கள்" என்று கூறினார்.

அன்றிலிருந்து நாங்கள் இந்த உருவத்திலேயே இந்நிலத்தில் புதைந்து கிடக்கிறோம். உங்கள் புண்ணியத்தால் சாபம் நீங்கப் பெற்றோம் என்று அந்த தம்பதியினர் கூறினர். அதன் பிறகு முனிவர்கள் யாகத்தை செய்து முடித்து விஷ்ணு பெருமானை ஆராதனை செய்தனர். அங்கு எழுந்தருளிய பெருமானை வணங்கி, "இத்தலத்தில் நீங்கள் தேவர்பிரான் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்" என்று வேண்டினர். இந்த தலத்தில் வில்லும், துலை என்னும் தராசும் முக்தி அடைந்த காரணத்தினால், இவ்விடம் திருத்தொலைவில்லிமங்கலம் என்ற பெயருடன் விளங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர். ஆத்ரேயசுப்ரபர் கேட்ட இந்த வேண்டுகோளை ஏற்று அதனை அங்கீகரித்தார் விஷ்ணு பெருமான்.

இத்திருக்கோயிலின் கோபுரங்களில் சிவபிரானின் வடிவமான மரத்தின் அடியிலே அமர்ந்து தன் பக்தர்களுக்கு அருளிக் கொண்டிருக்கும் தட்சிணாமூர்த்தியும் இருப்பது ஒரு தனிச் சிறப்பு.
இந்த இரட்டை திருப்பதி தலத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இரண்டு திருத்தலங்கள் அருகருகே அமைந்துள்ளன. இத்திருக்கோயிலின் அருகிலே வீடுகள் அதிகம் காணப்படவில்லை. வனங்களுக்கு நடுவிலேதான் இத்திருக்கோயில்கள் அமைந்துள்ளன. மிகவும் தூய்மையாக, சுத்தமாகத் திருக்கோயிலை பராமரித்து வருகின்றனர் இத்தலத்தை. தூய்மை இருக்கும் இடத்தில் இறைவன் குடியிருப்பான்.


வாயும் மனைவியர் பூமங்கையார்கள் எம்பிராற்கு
ஆயுதங்கள் ஆழி முதல் ஐம்படைகள் தூய
தொலைவில்லி மங்கலமூர் தோள் புருவமேனி
மலையில் இமம் கலந்தவாள்!!
108 திருப்பதி அந்தாதி

Monday, April 30, 2012


திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம், நவதிருப்பதி திருத்தலங்களில் சனி ஸ்தலமாக விளங்கும் திருக்குளந்தை (பெருங்குளம்), தூத்துக்குடி மாவட்டம்.


தனக்குடலம் வேறான தண்மையுணரான்
மனக்கவலை தீர்த்துய்ய மாட்டானி னைக்கிற்
றிருக்குளந்தையாருரைத்த சீர்க்கீதை பாடும்
தருக்குளந்தையாமலிருந்தால்!!

திருத்தல அமைவிடம்:
இந்த திருக்குளந்தை திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம்


திருத்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் துலைவில்லி மங்கலம் என்ற ஊருக்கு அருகிலே தடாகவனம் என்ற தலம் இருந்தது. அத்தலத்தில் வேதஸாரன் என்ற அந்தணர், தனது மனைவி குமுதவல்லியுடன் வாழ்ந்து வந்தார். தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற திருமாலின் அருளினால் இந்தத் தம்பதியினருக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு கமலாதேவி என்று பெயரிட்டு அழைத்தனர்.

தனது பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பில் சிறப்புடன் வளர்ந்து வந்த கமலாதேவி, பெருமாள் மேல் உள்ள பெரும் பக்தியின் காரணமாக, இறைவனையே கணவனாக அடைய விரும்பினாள். பெற்றவர்கள், நட்புவட்டம், உறவினர் என யார் சொல்லியும் கேளாமல், திருமாலை எண்ணி தவம் இயற்றினாள். இவ்விளம் பெண்ணின் கடும் தவத்தினை கண்ட விஷ்ணுபிரான், கமலாதேவி முன் தோன்றி, "நீ இவ்வாறு கடுந்தவம் புரிவதன் நோக்கம் என்ன" எனக் கேட்டார். அதற்கு கமலாதேவி, ஸ்ரீமந் நாராயணனையே மணம் புரிந்து வாழ விரும்புவதாகக் கூறினாள். அதற்கு சம்மதம் தெரிவித்து திருமாலும் கமலாதேவியை திருமணம் செய்துகொண்டார். இவ்வாறாக கமலாதேவி என்னும் பாலிகை தவம் செய்த வனம் என்பதால் பாலிகாவனம் என்ற பெயர் உண்டானது. வேதஸாரனும் தான் அன்றாடம் வழிபடும் பெருமாளே, தன் மகளை தன் இதயத்தில் இருத்தி உள்ளதை எண்ணி எண்ணி மனம் மகிழ்ச்சியுற்றார். அன்றாடம் பெருமாளை மனதார நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் பூஜை செய்து வந்தார்.


பெருமான் மாயக் கூத்தாடிய வரலாறு:
ஒரு நாள் வேதஸாரனின் மனைவி குமுதவல்லி ஆற்றங்கரையில் நீர் எடுக்கச் சென்றிருந்த வேளையில், அம்சநாரன் என்ற அரக்கன் அவளை கடத்திச் சென்று இமயமலைச் சாரலில் சிறை வைத்தான். தனது அன்பு மனைவியை அரக்கன் ஒருவன் கவர்ந்து சென்றதை பெருமாளிடம் கூறி, தன் மனைவியை மீட்டுத் தர மன்றாடினான் வேதஸாரன். அவனது அழுகுரலுக்கு மனமிறங்கி தனது கருடவாகனத்தில் இமயமலை சென்று அம்சநாரனிடம் இருந்து குமுதவல்லியை மீட்டு வந்தார் திருமால்.

பாலிகாவனத்தில் திருமால் குடிகொண்டிருப்பதை அறிந்த அந்த அரக்கன் இந்த வனத்திற்கு வந்து பெருமானுடன் போரிட்டான். திருமால், அந்த அரக்கனை போரில் வென்று வதம் செய்து அரக்கனது தலை மேல் ஏறி நர்த்தனமாடினார். அதற்குப் பிறகு இத்தல இறைவனுக்கு தேவர்கள் அனைவரும் கங்கை நீரால் திருமஞ்சனம் செய்வித்தனர். நடனமாடிய காரணத்தினாலேயே இத்தல இறைவனுக்கு சோரநாட்டியன் என்றும் மாயக்கூத்தன் என்றும் பெயர் வந்தது. அரக்கனுடன் ஏற்பட்ட போரில் வெற்றிபெற கருடாழ்வார் பெருமானுக்கு உதவிய காரணத்தினால் இன்றும் இத்தல உற்சவ மூர்த்தியுடனும், தாயாருடனும் கருடாழ்வாருக்கு ஒரே ஆசனத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தலத்திலும் சிற்பங்களின் பேரழகு கண்ணைக் கவர்கிறது மனதையும் சேர்த்து. பல தூண்கள் சிற்பங்களின் அழகால் நிறைந்திருந்தாலும் குறிப்பாக ஒரு தூணில் குதிரையும் யாழியும் கலந்த ஒரு மிருகத்தை வாகனமாகக் கொண்டு கல்கி அவதாரம் வாளுடன் தோற்றமளிப்பது தனித்துவமாக உள்ளது, வேறெங்கும் இல்லாத வடிவம்.
இத்திருக்கோயிலில் பல வருடங்களுக்கு முன்பாக வாசத்தடம் என்ற குளம் பிரசன்ன ஜோதிடம் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலின் தெற்குப்புறமாக கழுநீர் தொட்டியான் என்ற சன்னதி உள்ளது. திரு மடப்பள்ளியில் இருந்து வரும் பிரசாத நீர், இவரது பாதம் வழியாகத்தான் செல்கிறது.

திருக்குளந்தை பெரிய அளவிலான குளங்கள், வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த பசுமையான பூமியாகும். இங்கு, மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் நின்ற கோலத்தில் பெரிய உருவத்துடன் காட்சி தருகிறார். பொதுவாக வைணவத் தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் பெரிய பாக்கியமாகக் கருதப் படுகிறது. அதன் காரணமாகவே, இத்தல பெருமாளின் திருவடியை நன்றாக தரிசிக்க அர்த்த மண்டபத்திற்கு வெளியே பெரிய கண்ணாடி ஒன்று உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது புதுமையான ஒன்றாகும்.


கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன் கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தன்
மாடக்கொடிமதின் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே!!
நம்மாழ்வார்

Related Posts with Thumbnails