Saturday, August 21, 2010


பிரதோஷ வழிபாடு

ஆலய வழிபாடு:
இறைவனை எப்போதும் வழிபட வேண்டும். ஆனால் புண்ணிய தினங்களில் வழிபட்டால் ஒன்றுக்கு கோடி மடங்கு உயர்ந்த பலன் கிட்டும். சோமவாரம், சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தர் சஷ்டி, வைகுண்ட ஏகாதசி, சூரிய, சந்திர கிரகண காலங்கள், திருவாதிரை முதலிய புண்ணிய நாட்களில் அன்புடனும், நம்பிக்கையுடனும் வழிபாடு புரிபவர்கள், பாவங்களினின்றும் நீங்கி புண்ணியம் பெறுவர்.

ஆலய வழிபாடு உடல் நலத்தையும், திருமுறைகளை ஓதுவது வாக்கு நலத்தையும், மந்திரங்களை ஓதுவது மன நலத்தையும் தந்து நம்மைக் காக்கும்.

பிரதோஷ வரலாறு:
தேவர்களும், அசுரர்களும் ஒருமுறை ஒருவருக்கொருவர் பகைத்துப் போர் புரிந்தார்கள். தேவர்கள் நரை, மூப்பு, திரை, மரணம் என்ற துன்பங்கள் இன்றி வாழ விரும்பினார்கள். தேவர்கள், பிரம்மதேவரின் துணையுடன் திருமாலைக் காணச்சென்றனர். திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் உண்டால் மரணமில்லாத வாழ்க்கை வாழலாம் என திருமால் கூறினார். மந்தரகிரியை மத்தாகவும், சந்திரனை தறியாகவும், வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்த்ரகிரியை தனது முதுகில் தாங்கினார்.

அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு, திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். மறு நாள் ஏகாதசி, பதினோராவது திதி. அவ்வாறு பாற்கடலை கடையும்போது வாசுகி பாம்பு வருத்தம் தாளாமல் நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் கலந்து ஆலாலம் எனப் பேர் பெற்றது. தேவர்கள் பயந்து ஓடினர்.
வெண்ணிறமாக இருந்த விஷ்ணு, விஷ வேகத்தால் நீல நிறம் ஆனார். வானவர்கள் அஞ்சி திருக்கயிலாயம் சென்று சிவபிரானை தஞ்சமடைந்தனர்.

இவர்களைக் காப்பாற்ற ஆலால விஷத்தினை எடுத்து உண்டு நீலகண்டன் எனப் பேர் பெற்றார் சிவபிரான். அந்த விடம் உள்ளே சென்றால் உள் முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்து விடும். உமிழ்ந்தால் வெளி முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்து விடும். ஆகையால், உண்ணாமலும், உமிழாமலும், கண்டத்தில் தரித்தருளினார். அதனால், மணிகண்டன் எனப் பேர் பெற்றார். சிவபிரானின் கருணைக்கு இது ஒன்றே சாட்சி.

இதன் பின் மீண்டும் பாற்கடலைக் கடையும்போது, பாற்கடலில் இருந்து, லெட்சுமி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி , சூடாமணி முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. ஏகாதேசியன்று இரவு முழுவதும் பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள் துவாதேசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

மறுநாள் திரயோதசி (பதிமூன்றாம் நாள்) அன்று தேவர்கள் சிவபிரானை முன்னாளே வணங்காது இருந்த தங்கள் குற்றத்தை உணர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.

சிவபிரான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள் புரிய எண்ணி கயிலையில் அன்று மாலை (4:30 மணி முதல் 6:00 மணி வரை) பிரதோஷ வேளையில் தம் திருமுன் இருந்த ரிஷப தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று அம்பிகைக் காணத் திருநடம் புரிந்தார். அது முதல் திரயோதசி திதியன்று மாலை நேரம் பிரதோஷ காலம் என்று பெயர்பெற்றது.


பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறை:
சிவமூர்த்திக்கு உரிய விரதங்களில் தலையாயது. இவ்விரதத்தைக் கடைபிடிப்போர் பல்வேறு துன்பங்களில் இருந்து விடுபடுவர். வளர்பிறை, தேய்பிறை என இரண்டு பட்சங்களிலும் பிரதோஷம் வரும். அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, அன்று முழுதும் உபவாசம் இருந்து, மாலை பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஓம் நமச்சிவாய என ஓதி வழிபடவேண்டும்.

சுவாமி திருமுன் இருக்கும் இடப தேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும், நெய்விளக்கும் வைத்து வழிபடவேண்டும். பிரதோஷ வேளையில் சிவலிங்க மூர்த்தியை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும். நமது வேண்டுதல்களை நந்தியின் காதில் கூற, நமது வேண்டுதல் நிறைவேறும்.

பிரதோஷத்தன்று சிவசன்னதியை அப்பிரதட்சிணமாக சுற்றி வர வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகச் சிறந்தது. ஒவ்வொரு நாளும் 4:30 முதல் 6 மணி வரை பிரதோஷ நேரமாகும்.

பிரதோஷப் பாட்டு:
சிவாய நமஓம் சிவாய நமஹ!
சிவாய நமஓம் நமச்சிவாய!

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர!

ஆடியபாதா அம்பலவாணா!
கூடியே பாடினோம் பிழைபொறுப்பாயே!

அஞ்செழுத்தில் அமர்ந்த சுந்தரேசா!
நெஞ்சில் நிறைந்திருப்பாயே சொக்கேசா!

சுந்தரர்க்கு தோழனான சுந்தரேசா!
சம்பந்தர்க்கு தந்தையானாய் சொக்கேசா!

மண்சுமந்து கூலிகொண்ட சுந்தரேசா!
பெண் சுமந்து பெருமை கொண்டாய்!

தோடுடைய செவியனே சுந்தரேசா!
தூய வெண்ணீரணிந்தவனே சொக்கேசா!

நரியைப் பரியாக்கிய சுந்தரேசா!
நாரைக்கு முத்தி கொடுத்த சொக்கேசா!

மணிவாசகத்தின் ஒளியானாய் சுந்தரேசா!
தேவாரத்தோடு இணைந்திட்ட சொக்கேசா!

சிவசிவ சிவசிவ சபாபதே!
சிவகாமி சுந்தர உமாபதே!

காலகால காசிநாத பாகிமாம்!
விசாலாக்ஷி சகித விஸ்வநாத ரக்ஷமாம்!

ஆலால சுந்தரம் மீனாட்சி சுந்தரம்!
கல்யாண சுந்தரம் கடம்பவன சுந்தரம்!

நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா!
சிவராஜா சிவராஜா சிவகாமி நாதா சிவராஜா!

என்னப்பன் அல்லவா என்தாயுமல்லவா!
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத் தேவா!

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்!
சிவசக்தி சிவசக்தி சிவசக்தி ஓம்!

நலம் தரும் நந்தி (நந்தீஸ்வரர் துதி):
கந்தனின் தந்தையைத்தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்!
நந்தனார் வணங்குவதற்கு நடையினில் விலகி நின்றாய்!
அந்தமாய் ஆதியாய் அகிலத்தை காக்க வைத்தாய்!
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக்காப்பாய்!
ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்!
பொன்பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்!
சிந்தனை வளம் கொதிப்பை சிகரத்தில் தூக்கி வைப்பாய்!
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்!
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்!
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்!
சோலைக்குயில் வண்ணப் பூவைச் சூடும் நந்தி தேவா!
நாளும் நான் உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்!
தஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணை சாத்தி!
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி!
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி!
தஞ்சமாய் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்!


பிரதோஷ துதிகள்:
நாகத்தான் கயிறாக நளிர்வரையதற்குமத்தாகப்
பாகத்தேவ ரொடகடர் படுகடலின் யெழக் கடைய
வேகநஞ் செழவாங்கே வெருவோடு மிரிந்தெங்குமோட
ஆகந்தண்ணில் வைத்தமிர்தமர்க்குவித்தான் மறைக்காடே!
--திருஞானசம்பந்தர்

பருவரை ஒன்று சுற்றி அரவங்கை விட்ட இமையோ ரரிந்து பயமாய்த்
திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடவா னெழுத்து விசைப் போய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை அருளாய் பிரானே எனலும் அருள்
கொடு மாவிடத்தை எரியாமலுண்ட அவனண்ட ரண்டர் அரசே!
--திருநாவுக்கரசு நாயனார்

கோல் வரை மத்தென்ன நாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த
ஆல நஞ்சு கண்டவர் மிகவிரிய அமரர்கட்கருள் புரிவது கருதி
நீலமார் கடல் விடந்தனை யுண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த
சிலங் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன் கூருளானோ!
--சுந்தரர்

கோலால மாகிக் குரைகடல் வாயென் றெழுந்த
ஆலால முண்டா வைன்சதுர்தா னென்னேடி
ஆலால முண்டிலனேல் அயன்மா லுள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவகாண் சாழலோ!
--மாணிக்கவாசகர்

இனியோ நாமுய்ந்தோம் இறைவன், தாள்சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கு மீளாப்பிறவிக்
கனைக் கடல் நீந்தினோம் காண்
--காரைக்கால் அம்மையார்

விக்ருதி ஆண்டு பிரதோஷ நாட்கள்:

26-Apr-10 திங்கட்கிழமை
11-May-10 செவ்வாய்க்கிழமை
25-May-10 செவ்வாய்க்கிழமை
10-Jun-10 வியாழக்கிழமை
24-Jun-10 வியாழக்கிழமை
9-Jul-10 வெள்ளிக்கிழமை
23-Jul-10 வெள்ளிகிழமை
7-Aug-10 சனிக்கிழமை
22-Aug-10 ஞாயிற்றுக்கிழமை
6-Sep-10 திங்கட்கிழமை
20-Sep-10 திங்கள்கிழமை
5-Oct-10 செவ்வாய்க்கிழமை
20-Oct-10 புதன்கிழமை
3-Nov-10 புதன்கிழமை
19-Nov-10 வெள்ளிக்கிழமை
3-Dec-10 வெள்ளிக்கிழமை
18-Dec-10 சனிக்கிழமை
1-Jan-11 சனிக்கிழமை
17-Jan-11 திங்கட்கிழமை
31-Jan-11 திங்கட்கிழமை
16-Feb-11 புதன்கிழமை
2-Mar-11 புதன்கிழமை
17-Mar-11 வியாழக்கிழமை
31-Mar-11 வியாழக்கிழமை

17 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்
தென்னாடுடைய சிவனே போற்றி

அபி அப்பா said...

சூப்பர்! இந்த பதிவு போட போவது முன்னமே தெரிஞ்சிருந்தா இப்ப போன சனிபிரதோஷ நம்ம ஊர் பெரியகோவில்ல எடுத்த போட்டோ அனுப்பியிருப்பனே. தவிர கடவெள்ளி லட்சதீப போட்டோ கூட எடுத்தேன். போட்டு தூள் பண்ணியிருக்கலாமே!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி ராம்ஜி.

நம்ம ஊர் கோயில பற்றி எழுதும்போது கேட்கிறேன். அவசியம் போட்டோ அனுப்புங்கள். நன்றி அபி அப்பா.

Dr. சாரதி said...

மிகவும் அருமையான பகிர்வு, வாழ்நாளில் சில வருடங்கள் கடவுள் பற்றற்று இருந்த காலங்கள் வாழ்வின் இருண்ட காலங்களாகத்தான் இருந்தது, என்று சிவனை நம்பி பிரதோஷ வழிபாட்டில் ஈடுபட்டேனோ அன்றில் இருந்து என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு எல்லையே இல்லை. சிவாய நம.....

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க மகிழ்ச்சி Dr.சாரதி அவர்களே. நன்றி.

hamaragana said...

அன்புடன் சகோதரி அவர்களுக்கு வணக்கம் இந்த கலியுகத்தில் இது போன்று ஆன்மீக விஷயங்களை பதிவுக்கு எடுதாண்டமைக்கு மிகுந்த நன்றி .நீங்கள் என்ன பதிவுகள் கொடுகிரீர்களோ அது அப்படியே பசுமரத்தாணி போல் அதை வாசிக்கும் அன்பர்கள் ஏற்பார்கள்.!!!! .சில திருத்தங்கள் :சிவன் கோவிலில் செய வேண்டிய முழக்கங்கள் என நான்குதான் ..அது தவிர ப்ரணவ மந்திரம் சேர்த்து ஸ்ரீ பஞ்சட்சரம் பிறர் காது பட உச்சரித்தல் ஆகாது.எந்த சந்தற்பதிலும தேவார திருவாசக அடிகளை பிரித்து முழக்கமாக சொல்லுதல் கூடாது .. தயவு கூர்ந்து அதிகமாக சொல்லுகிறேன் என்று நினைக்க கூடாது. நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ள விஷயங்கள்தான் என்னுடைய சரக்கு அல்ல!!!..
௧.நாம பார்வதி பதயே ..ஹர ஹர மகாதேவா!!!
௨. சித் சபேசா ..சிவ சிதம்பரம்.!!
௩. ஸ்ரீ கார்த்திகேய நாம் சங்கீர்த்தனம் ....சிவ சுப்பிரமணியம்
௪. ஸ்ரீ வல்லி ஸ்காந்த ஸ்மரணம் ...சிவ சுப்பிரமணியம்
தேவாரம் திருவாசங்களில் எங்காவது நமது அடியார் பெருமக்கள் .பிராணவ மந்திரம் சேர்த்து சொல்லி இருகிறார்களா ??? இல்லை..!!!அவர்களை விடவா நாம் மேலானவர்கள் ??? 1929 . .ஆண்டு திருநெல்வேலி இல் நடைபெற்ற சைவ சிந்தாந்த மஹா நாட்டில் தற்போது பலவித மாற்றங்கள் செய்கின்றனர் என்று அதற்கு கண்டனம் தெரிவித்து இப்படிதான் இருக்க வேண்டும் என தீர்மானம் செய்தனர். அதன் புத்தக வடிவு என்னிடம் உள்ளது தங்களுக்கு தேவை எனில் எனது மின்னஞ்சலுக்கு தங்களின் மேலான விலாசம் அனுப்புக இலவசமாக அனுப்பி வைக்கிறேன். நன்றி.(ganalatha05@gmail.com)

nis said...

உபயோகமான பகிர்வு

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி nis.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@hamaragana,
தாங்கள் கொடுத்த தகவலுக்கு மிக்க நன்றி. தவறு இருப்பின் திருத்திக்கொள்கிறோம். புத்தகம் தேவைப்படின் அவசியம் தொடர்பு கொள்கிறோம். நன்றி.

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. பிரதோச நன்மை அறிந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சரவணன்.

R.Gopi said...

புவனா....

பிரதோஷம் பற்றிய குறிப்புகளும், கூடவே அந்த காமதேனு படமும் ரொம்ப நல்லா இருக்கு....

சம்போ மஹாதேவா.....
ஓம் நமசிவாய

தென்னாடுடைய சிவனே போற்றி...
என்னாட்டார்க்கும் இறைவா போற்றி....

தாங்கள் தொடர்ந்து இது போல், பல பயனுள்ள பதிவுகளை பதிய வேண்டும் என்பதே என் அவா....

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கோபி.

Geetha6 said...

very useful and good post

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி கீதா.

Anonymous said...

Very beautiful post about "Pradhosa Pooja". Thank you verymuch.. Looking more devotional posts..,
Regards
Sai Gokulakrishna
http://saigoklakrishna.blogspot.com

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி சாய் கோகுல கிருஷ்ணா.

Post a Comment

Related Posts with Thumbnails