Monday, August 2, 2010


திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!


இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் திருமால்பாடி என்னும் மிகப் பழமை வாய்ந்த திருத்தலத்தைப் பற்றி பார்ப்போம்.

கோயில் அமைவிடம்:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் என்னும் சிறிய கிராமத்தின் அருகே உள்ளது இந்த அழகிய, மிகப் புராதனமான திருமால்பாடி திருத்தலம். நாங்கள் இக்கோயிலுக்கு வேலூரில் இருந்து சென்று வந்தோம். வேலூரில் இருந்து சுமார் 90 km தொலைவில் உள்ளது இத்திருத்தலம். வேலூரில் இருந்து ஆரணி, வந்தவாசி, தேசூர் வழியாக இக்கோயிலை அடையலாம். ஒரு சிறிய குன்றின் மேல் 106 படிகள் ஏறிச் சென்று தெய்வ தரிசனம் பெறலாம். பல ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிறது இக்கோயில்.


அக்காலத்தில் இது போன்ற உள்ளடங்கிய கிராமங்களில் சாலை வசதிகள் மிகக் குறைவாக இருந்த நிலையில் எப்படித்தான் இது போன்ற அழகிய திருக்கோயில்களைக் கட்டினார்களோ என்று நினைக்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. கி.பி. 1136-ம் ஆண்டு பராந்தக சோழன் மகன் விக்கிரம சோழனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது இத்திருக்கோயில். கி.பி. 1140, கி.பி. 1135, கி.பி. 1529 போன்ற பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் இக்கோயில் பலமுறை சீரமைக்கப் பட்டுள்ளதை அங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.


ஸ்ரீ சுகப்
பிரம்ம ரிஷி அவர்களால், பெருமாளின் கட்டளைப் படி நிர்மாணிக்கப் பட்டது இக்கோயில். இத்தலம் அக்காலத்தில், விரஜாபுரி எனப் புகழ் பெற்றிருந்தது. ஸ்ரீ சுகப்பிரம்மம் நிர்மாணித்த திருக்கோயில் என்பதால் இன்றும் இக்கோயிலில் பச்சைக் கிளிகள் அதிகம் காணப் படுகிறது.


தல மூர்த்தி : ஸ்ரீ ரெங்கநாதர் (வேதநாதர்)
தாயார் : ஸ்ரீ வேதநாயகி.
தல தீர்த்தம் : நாரதர் தீர்த்தம்
சன்னதிகள் : ஸ்ரீ ரெங்கநாதர், வேதநாயகி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ரெங்கநாதர், சயனதிருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். விண்ணுலகம், மண்ணுலகம் என அளந்துவிட்டு மூன்றாவது அடியாக மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையின் மீது தன் அடியை வைத்து அளந்ததற்கு அடையாளமாக தனது மூன்று விரல்களைக் காட்டியவாறு, ஆதிசேஷன் மீது சயனித்தபடி, தலைக்கு மரக்கால் வைத்து, தனது திருவடியை தாமரை மலர் மீது வைத்து தரிசனம் தரும் அழகே அழகு. அருகே பூதேவி - அமிர்தவல்லியாகவும், ஸ்ரீதேவி - ஸ்ரீ வேதவல்லியாகவும் காட்சி தருகின்றனர்.


பிரகலாதன், சுகபிரம்ம மகரிஷி ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கு எழுந்தருளியுள்ள வீர ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த பெருமானாகும். ஸ்ரீ வேதநாயகித் தாயார் பக்தர்களுக்கு கருணையுடன் அருள் பாலிக்கிறார்.

நாங்கள் திருமால்பாடி திருக்கோயில் தரிசனத்திற்கு சென்ற மாலை நேரத்தில் சூரிய பகவானும், அவருக்குப் பின் சந்திர பகவானும் திருமால்பாடி ஸ்ரீரங்கநாதரை தரிசித்துச் சென்றனர்.


திருமால்பாடி திருத்தலத்திற்கு சென்று வழிபட, வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகளை ஸ்ரீ ரெங்கநாதர் தீர்த்து வைப்பார். இதனாலேயே இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு, டிரான்ஸ்பர் பெருமாள் (Transfer Perumal) என்றே பெயர் வந்தது.

வளமான வாழ்வையும், அஷ்ட லக்ஷ்மி அம்சங்களான அனைத்து ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் திருத்தலம் இந்த திருமால்பாடி திருத்தலம். இதுபோன்ற பழமையான திருக்கோயில்களுக்குச் சென்று எல்லா விதமான ஐஸ்வர்யங்களையும் பெற வாழ்த்துக்கள்.

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்.

நாங்கள் இது வரை சென்றது இல்லை, விரைவில் செல்லுவதாக எண்ணம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்கள் எண்ணம் விரைவில் ஈடேற வாழ்த்துக்கள். நன்றி.

Menaga Sathia said...

இப்போழுதுதான் உங்கள் பதிவின் மூலம் இந்த கோயிலைப்பற்றி தெரிந்துகொண்டேன்.பகிர்வுக்கு மிக்க நன்றிங்க...

புவனேஸ்வரி ராமநாதன் said...

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி மேனகா.

'பரிவை' சே.குமார் said...

இந்த கோயிலைப்பற்றி உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றிங்க...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி குமார்.

Post a Comment

Related Posts with Thumbnails