Thursday, December 16, 2010


ஆண்டாள் திருப்பாவை

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை:
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகத் திகழ்ந்த ஆண்டாள், பெருமாளை நினைத்து நாவிற்கினிய, மனதிற்கினிய தேன் தமிழில் இயற்றிய திருப்பாவை படிப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையான பாடல்களை உடையது. பெரியாழ்வார் பெருமானின் மகளே ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரழகுப் பெருமாளுடன் வீற்றிருக்கும் ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது.


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்
கூர்வேற்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்தகண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர்புகழ்ப் படிந்தேலோரெம்பாவாய் !!

(1)

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச்சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யு மாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய் !!

(2)

ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றிநீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய் !!

(3)

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கமுதைத்த சரமழைபோல்
வாழவுலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய் !!

(4)

மாயனை மன்னுவடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக்குடல்விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய் !!

(5)

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் !!

(6)

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தம் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழலாய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத்தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி
கேசவனைப்பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோரெம்பாவாய் !!

(7)

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய
தேவாதிதேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்தருளேலோ ரெம்பாவாய் !!

(8)

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தனென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய் !!

(9)

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்றலனந்தலுடையாய் அருங்கலமே
தோற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய் !!

(10)

கற்றுக்கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமாரெல்லாரும் வந்து நின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர்பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய் !!

(11)

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீவாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்னப்பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய் !!

(12)

புள்ளின்வாய்க்கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீநன்னாளால்
கள்ளம்தவிர்த்து கலந்தேலோரெம்பாவாய் !!

(13)

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல்தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய் !!

(14)

எல்லே இளங்கிளியே இன்னமுறங்குதியோ
சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானைகொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோரெம்பாவாய் !!

(15)

நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால்முன்னமுன்னம் மாற்றாதேயம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய் !!

(16)

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பர மூடறுத்தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்கா தெழுந்திராய்
செம்பொற் கழலடிச்செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய் !!

(17)

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும்குழலீ கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார்விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய் !!

(18)

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னைகொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய் !!

(19)

முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம்கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னைநங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய் !!

(20)

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடிபணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய் !!

(21)

அங்கண் மாஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்க மிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கணிரண்டுங்கொண்டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோரெம்பாவாய் !!

(22)

மாரிமலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த
காரியமாராய்ந்தருளேலோரெம்பாவாய் !!

(23)

அன்றிவ் வுலகமளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்றுகுடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைக்கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோரெம்பாவாய் !!

(24)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய் !!

(25)

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்னவண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோரெம்பாவாய் !!

(26)

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனையப் பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கைவழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் !!

(27)

கறவைகள் பின்சென்று கானம்சேர்த்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது
அறியாதபிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா நீதாராய் பரையேலோரெம்பாவாய் !!

(28)

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வானன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய் !!

(29)

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண்திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய் !!

(30)

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் சரணம் !!

*******

ஆண்டாள் திருப்பாவை (நித்யஸ்ரீ மகாதேவன்)

(1 - 4)


(5 - 8)


(9 - 13)


(14 - 18)


(19 - 22)


(23 - 26)


(27 - 30)


*******

30 comments:

எல் கே said...

பகிர்விற்கு நன்றி

Madhavan Srinivasagopalan said...

தினமும், இந்த மாசம் முழுசும்.... இந்த பதிவ ஓபன் பண்ணி எல்லா பாடல்களையும் ஓட விட வேண்டியதுதான்..

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க.

RVS said...

நித்யஸ்ரீயின் ஆண்டாள் திருப்பாவை போட்டதற்கு ரொம்ப நன்றி. நீங்க நல்லா இருக்கணும். ;-)

Asiya Omar said...

ஆண்டாள் திருப்பாவைன்னு கேள்வி தான் பட்டிருக்கிறேன்.தமிழ் செய்யுட்பகுதி நினைவு வந்துவிட்டது.

ராமலக்ஷ்மி said...

மார்கழி மலர்ந்த தினத்தில் திருப்பாவையைப் பகிர்ந்து எங்கள் உள்ளங்களைக் குளிரச் செய்து விட்டீர்கள் புவனேஸ்வரி. நித்யஸ்ரீ பாடல் பகிர்வுக்கும் நன்றிகள்.

Jerry Eshananda said...

Madam you have done a great post here....thankalot.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@LK,
மிக்க நன்றி எல்.கே.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Madhavan Srinivasagopalan,
தினமும் நிச்சயம் கேளுங்க. மிக்க நன்றி மாதவன். வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்து வைத்தமைக்கும் நன்றிகள் பல.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Chitra,
மிக்க நன்றி சித்ரா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@RVS,
நித்யஸ்ரீயின் பரம ரசிகராச்சே நீங்க. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@asiya omar,
ஸ்கூல் செய்யுள் பாடம் ஞாபகம் வந்திடுச்சா :-) மிக்க நன்றி ஆசியாம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,
ஆஹா.. ரொம்ப சந்தோஷம் மேடம், மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஜெரி ஈசானந்தன்.,
மிக்க நன்றி சார்.

கோமதி அரசு said...

மார்கழி மாதம் காலை திருப்பாவை,திருவெம்பாவை கேட்க முடியவில்லை மின் தடையால்.(6லிருந்து8வரை)

மனக் குறையை தீர்த்து வைத்து விட்டீர்கள்.

நன்றி புவனேஸ்வரி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு கோமதியம்மா. மிக்க நன்றி.

Unknown said...

நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் எனினும் ஆண்டாள் திருப்பாவை மீது தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு ...

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி சகோ.

Padhu Sankar said...

Very nice and that too you have posted Nithyasree's songs .Thanks for sharing

Pushpa said...

Thanks for sharing,brings back memories.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Padhu,
நித்யஸ்ரீ உங்களுக்கும் பிடிக்குமா. மிக்க நன்றி பது.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Pushpa,
மிக்க நன்றி புஷ்பா.

Gayathri Kumar said...

Great!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி காயத்ரி.

Kanchana Radhakrishnan said...

மார்கழி தினத்தில் திருப்பாவையைப் பகிர்ந்து எங்களைக் குளிரச் செய்து விட்டீர்கள்.நன்றி புவனேஸ்வரி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு காஞ்சனா ராதாகிருஷ்ணன். மிக்க நன்றி.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

இங்கும் ஒரு மஹா உற்சவம் அசத்துங்கள் ஒலி வடிவில் அமர்க்களம் தொடருங்கள் ...

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி புதிய மனிதா.

பெசொவி said...

இந்தப் புனித பணிக்கு வாழ்த்துகள், மேடம்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

பெயர் சொல்ல விருப்பமில்லாதவருக்கு மிக்க நன்றி :)

Post a Comment

Related Posts with Thumbnails