Monday, January 24, 2011


திருப்பாதாளேச்சுரம் என்ற பாமணி

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம் திருப்பாதாளேச்சுரம் என்ற பாமணி, அருள்மிகு அமிர்த நாயகி சமேத நாகநாத சுவாமி திருக்கோயில்.


திட்டமிடல் என்று எதுவும் இல்லாமல் திடீரென்று பழைய நண்பர்களையோ, உறவினர்களையோ பல காலங்கள் கழித்துப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கிற்கு அளவே இல்லை. அது போலவே சிறு வயதில் நாம் சென்று வந்த இடங்களுக்கு, பல வருடங்கள் கழித்து மீண்டும் செல்லும் சந்தர்ப்பம் அமையும் போது ஆனந்தம் ஊற்றெடுக்கும். அவ்வாறு செல்ல நேரும்போது பழைய நினைவுகள் நம் கண் முன்னே வந்து நிழலாடும். இது போன்றதொரு உணர்வு பாமணி கோயிலுக்கு சென்று வருகையில் எனக்கு ஏற்பட்டது. இன்றைய நாட்களில் மகிழ்வுந்தில் மகிழ்ச்சியான பயணம் மேற்கொண்டாலும், அன்றைய மாட்டுவண்டிப் பயணத்தில் கிடைத்த மனநிறைவிற்கு ஈடாகாது.

சிறு வயதில், மாட்டு வண்டியில் ஏறி வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணம் தொடங்கும். மன்னார்குடி ஒத்தைத் தெருவில் இருந்து, என் கண்முன்னே மாட்டு வண்டிக்குள் இருந்து பரந்த உலகம் விரியும். கணபதி விலாஸ், ஆனந்த விநாயகர் ஆலயம், தேசிய மேல்நிலைப் பள்ளி, பந்தலடி, யானைக் கால் மண்டபம், பாமணி ஆறு, பச்சை பசேல் வயல் வெளிகள் தாண்டி, கோயிலைச் சென்றடைவோம்.

திருக்கோயில் அமைவிடம்:
இந்த சிறப்பு மிக்க நாகநாத சுவாமி திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து 2 km தொலைவில் அமைந்துள்ள பாமணி என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. மன்னார்குடியில் இருந்து இந்த திருக்கோயிலுக்கு செல்லும் பயணமே சுவாரஸ்யமான பயணம்தான். பாமணி ஆற்றின் வடப்புறமாக அமைந்துள்ளது இத்திருக்கோயில்.


திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : நாகநாதஸ்வாமி (சர்ப்பபுரீஸ்வரர், பாம்பணிநாதர், திருப்பாதாளேச்வரர், ஸ்ரீ பூதி விண்ணகர ஆழ்வார்)
தல இறைவி : அமிர்த நாயகி
தல விருட்சம் : மாமரம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், தேனு தீர்த்தம், ருத்ர தீர்த்தம், நிலத்வஜ தீர்த்தம்


திருத்தல அமைப்பு:
நாகநாதசுவாமி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமிக்கு சற்று தள்ளி வலப்புறமாக மனித முகமும், பாம்பின் உடலும் ஒருங்கே அமைந்த வடிவத்தில் இறைவனை வழிபட்ட ஆதிசேஷன், சுவாமி சன்னதியைச் சுற்றி நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் வடிவில் அண்ணாமலையார், பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, ஆக்ஞா கணபதி, நாகலிங்கம், காளிங்க நர்த்தனத்துடன் கூடிய மும்மூர்த்தி விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி, துர்காதேவி, கஜலெட்சுமி, ஞானசரஸ்வதி, சனேஸ்வரர், பைரவர் என வரிசையாக இவர்களது தரிசனம். பின்னர், நவக்ரஹ தரிசனம், நால்வர் தரிசனம். சுவாமி சன்னதியின் இடப்புறமாக அம்மன் சன்னதி. திருக்கோயிலை சுற்றி வரும்போது சுவாமி சன்னதியை சுற்றியபின் நவக்ரஹங்களை சுற்றி முடித்தால் ஓம் என்னும் வடிவத்தில் முடியும் என்ற தகவல் அக்கோயில் சிவாச்சாரியார் சொன்னது.


திருநாவுக்கரசர் திருக்ஷேத்திரக் கோவை:
வீழிமிழலைவெண் காடு வேங்கூர்
வேதி குடிவிசய மங்கைவியலூ
ராழியகத்தியான் பள்ளியண்ணா
மலைபாலங்காடு மரதைப் பெரும்
பாடி பழனம் பனந் தாள் பாதாளம்
பராயத்துறை பைந்நீலி பனங்காட்டூர் தன்
காழி கடனாகைக் காரோணத்துங்
கயிலாய நாதனையே காணலாமே!!

திருத்தல வரலாறு:
ஒரு சமயம் சுகல முனிவர் தனது தாயாரின் அஸ்தியை கங்கையில் கரைக்க, ஒரு மகன் தாய்க்குச் செய்ய வேண்டிய புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்காக, காசியை நோக்கித் தன் சீடனுடன் சென்று கொண்டிருந்தார். அந்தி சாயும் நேரம் ஆகிவிட்டதனால், தன் சீடனிடம் அஸ்தி மூட்டையை கொடுத்துவிட்டு, சுகல முனிவர் சந்தியாவந்தனம் செய்யச் சென்றார். அந்த வேளையில், சீடன் அஸ்தி மூட்டையை பிரித்துப் பார்க்க கலசத்தினுள் தங்கமாக ஜொலித்தது. இதனைக் கண்ட சீடன் பயந்து, மூட்டையை திரும்ப மூடிவிட்டான். அவர்களது காசியை நோக்கிய பயணம் தொடர்ந்தது. காசிக்குச் சென்றதும், அஸ்தி மூட்டையை பிரித்துப் பார்த்தால் சாம்பலே இருந்தது. இந்த நிகழ்வை சுகல முனிவரிடம் எடுத்துக் கூறினான் சீடன். உடன் முனிவர், அஸ்தி பொன்னைப்போல பிரகாசித்த அந்த இடமே காசியை விட புனிதமான இடம், எனக் கூறி, மீண்டும் அந்த இடத்திற்கே வந்து, முன்பு வெட்டுக் குளம் எனவும், தற்போது ருத்ர தீர்த்தம் எனவும் அழைக்கப் படுகின்ற குளத்தின் கரையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆலயம் கட்டி அக்குளத்திலேயே தனது தாயாரின் அஸ்தியினை கரைத்து அங்கேயே தங்கியும் விட்டார் சுகல முனிவர்.

அங்கு தங்கியிருந்த சுகல முனிவர் ஒரு பசுவினை வளர்த்து வந்தார். அந்த பசு, தினப்படி புல் மேய்ந்து பசியாறச் சென்ற இடத்தில் ஒரு புற்றின் மேல் தினமும் பாலைச் சுரந்தது. இதனால் சுகல முனிவரின் அன்றாடப் பயன்பாட்டிற்கு பால் கிடைக்காமல் போனது. ஒரு நாள் பசு மேய்ச்சலுக்கு செல்லும்போது முனிவரும் அதன் பின்னால் சென்று பார்த்த பொழுது, பசு, புற்றின் மேல் பால் சுரப்பதை கவனித்தார். ஏதோ கோபத்தில்தான் அது இவ்வாறு செய்வதாக சுகல முனிவர் நினைத்துக் கொண்டு, மாட்டின் மேல் ஒரு கம்பை விட்டெறிந்தார். இதனால் சினம் கொண்ட மாடு புற்றினை தன் கொம்பால் இடித்துத் தள்ளியது. அச்சமயம், புற்று மூன்றாகப் பிளந்து உள்ளிருந்து லிங்கம் தோன்றியது. பின்னர் பசுமாடு ஓடிச்சென்று குளத்தில் விழுந்து இறந்தது. உடன் சிவபிரான், ரிஷபாருடர் வடிவத்தில் தோன்றி பசுவினை மீண்டும் உயிர் பெறச் செய்தார். அந்த பசுவின் பாலபிஷேகத்தால் தனது மனம் குளிர்ந்ததாகச் சொன்ன சிவன், பசுவிடம், "உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள்", எனக் கூறினார். அதற்கு அந்த பசு, தன்னிடம் இருந்து கிடைக்கும் எல்லா பொருட்களும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டது. அவ்வாறே நடக்கட்டும் என ஈசன் ஆணையிட, அது முதலாக பசுவிடம் இருந்து கிடைக்கும் பஞ்சகவ்யம் எனப்படும் பால், தயிர், நெய், சாணம், கோமியம் போன்றவை சிவனின் அபிஷேகத்திற்கு உரிய பொருள்களாக ஆயின. சுயம்பு நாதனாக தோன்றிய சிவலிங்கத்தை வழிபட்டு சுகல முனிவரும், தான் பிறந்த பயனை அடைந்தார்.

அந்த சமயத்தில், அஷ்ட நாகங்கள் ஆகிய வாசுகி, கார்கோடன், பத்மன், மகாபத்மன், சங்கன், சங்கபாலன், குளிகன், அனந்தன் எனப்படும் எட்டு நாகங்களின் தலைவனும், விஷ்ணு பகவான் வீற்றிருக்கக் கூடிய பேறு பெற்றவனும் ஆகிய ஆதிசேஷன், திருப்பாற்கடலில் அமிழ்தம் கடையும் போது, அதனுடன் வந்த விஷத்தை பக்தர்களின் நன்மைக்காக சிவபிரான் உண்டதனால், அந்த தோஷம் தனக்கும் ஏற்பட்டதாகக் கருதிய ஆதிசேஷன், அதற்குப் பரிகாரம் செய்ய எண்ணியபோது, இந்த பாதாளத்தில் இருந்து தோன்றிய பாதாளேச்வரரை வழிபட்டால் அவரது தோஷம் நீங்கும் என்ற அசரீரி சொல் கேட்டது. அதன் படி இங்கு வந்த ஆதிசேஷன், சன்னதி செல்லும் வழியெல்லாம் லிங்கங்களாக இருந்த காரணத்தால், தன் பாதம் சுவாமி மேல் படக்கூடாது என்ற எண்ணத்தில், தனஞ்செய முனிவராக மனித முகமும், பாம்பு உடலும் கொண்டு தவழ்ந்து சென்று இத்தல இறைவனை வழபாட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றார். இத்தலத்தில், ஆதிசேஷன், தனஞ்செய முனிவர் வடிவில் வீற்றிருந்து ராகு, கேது நிவர்த்தி பரிகார மூர்த்தியாக விளங்குவது, இத்தலத்தின் சிறப்பு.


ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போரில், தேவர்கள் தோற்றுவிட, இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கி, முகுந்த சக்ரவர்த்தி, அசுரர்களுடன் போரிட்டு வென்றார். அதற்குப் பரிசாக, இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரி எனப்படும் திராட்சையையும், முகுந்த சக்ரவர்த்திக்குப் பரிசாகக் கொடுத்தார். அவர் அந்த லிங்கம், திராட்சை இவற்றுடன், திருவாரூரில் உள்ள தியாகேசர் சன்னதிக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில், "திருப்பாதாளேச்சுரத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அங்கு சென்று நிவேதனம் செய்" என அசரீரி கேட்க, இக்கோயிலுக்கு வந்து இத்தல இறைவனை வணங்கி திராட்சை நிவேதனம் செய்வித்தார். அன்று முதல் கொடி முந்திரி எனப்படும், பச்சை திராட்சை சிறப்பு நெய்வேத்தியமாக இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது.

நீலத்வஜ மகாராஜா, அம்சத்வஜ மகாராஜா என்பவரின் மைந்தன். இக்கோயிலின் மேற்குப் புறமாக நம்பிக்குளம் என்னும் நீலத்வஜ தீர்த்தம் என்னும் குளத்தை வெட்டி அன்னச்சத்திரங்கள் கட்டி, அன்னத்வஜன் என்ற பெயருடன் திகழ்ந்தார்.

பாண்டிய நாட்டில் வாழ்ந்த பிப்பலாயன் என்பவருக்கு ஏற்பட்ட சரும நோய் தீராத நோயாக இருந்தது. வில்வாரண்யத்தில் ஆரம்பித்து பல திருக்கோயில்களை தரிசனம் செய்து கடைசியாக, இந்த நாகநாதஸ்வாமி திருக்கோயில் வந்து தீர்த்தங்களில் நீராடியபின் இக்கோயில் பிரசாதம் உண்டபின் தனது சரும நோய் நீங்கப் பெற்றார்.

தல விருட்ச வரலாறு:
திருப்பாற்கடலை கடையும் போது கிடைத்த பல்வேறு பொருட்களுள், பிரம்மனுக்கு நான்கு மாம்பழங்கள் கிடைத்தன. அவற்றில் ஒரு பழத்தை கணபதிக்கும், ஒரு பழத்தை ஆறுமுகப் பெருமானுக்கும், மூன்றாவதை காஞ்சியில் நட்டபின், நான்காவதை இத்தலத்திற்கு எடுத்து வந்து அந்த மாம்பழத்தின் சாற்றை நாகநாதசுவாமிக்குப் பிழித்து பின் மாங்கொட்டையை பிரம்மதீர்த்தத்தின் கரையில் நட்டுவைத்தார். இது முதலாக இத்தல விருட்சமாக மாமரம் விளங்குகிறது. மாம்பழச்சாரும் நாகநாதருக்கு அபிஷேகம் செய்விப்பது இத்தல சிறப்பு.


திருத்தலச் சிறப்பு:
பல்வேறு சிவ திருத்தலங்கள் இருந்தாலும், சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத் தலங்களுக்கு சற்று கூடுதல் சிறப்பு உண்டு. கைலாச மலையே உலகின் முதல் சுயம்புவாகக் கருதப் படுகிறது. சுயம்பு லிங்கங்களுக்கு, அவை புற்று மண்ணால் ஆனதால் கரைந்து விடாமல் இருக்க வேண்டி, வெள்ளிக் கவசம் சாற்றியே அபிஷேகம் செய்விப்பது வழக்கம். மாறாக நாகநாதசுவாமிக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தினப்படி இருவேளை எந்தவித கவசமும் சாற்றாமல் நேரடியாகவே அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இது இத்தலத்தின் பல்வேறு சிறப்புக்களுள் ஒன்று.

தல மூர்த்தி, திருத்தலம், தலமரம், தலதீர்த்தம், ஆறு என எல்லா வகையிலும் சிறப்புற விளங்கும் விதமாக அமைந்துள்ளது இந்த பாமணி திருத்தலம்.

இத்திருக்கோயிலைப் பற்றி ஆறு கல்வெட்டுக்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஏறக்குறைய 1000 வருடங்களுக்கு முன்பாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்ற சீர்மிகு சிவனடியார்களாகிய நாயன்மார்கள் இந்தத் திருக்கோயிலில் பாடியுள்ளனர். சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் இத்திருக்கோயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திருத்தலத்தில் கொண்டாடப்படும் விசேஷங்கள்:
திருக்கோயில்கள் என்றாலே திருவிழாக்களுக்கு பஞ்சமிருக்காது. அந்த விழாக்களில் மக்களோடு மக்களாக நாமும் பங்கு கொள்வது சாலச் சிறந்தது. இங்கே, சித்திரை வருடப் பிறப்பு, சித்திராப் பௌர்ணமி விழா, வைகாசி விசாகம், ஆடிபூர விழா, ஆவணி மாதத்தில் மூலம் நட்சத்திரத்தில் நடைபெறும் விழா, விநாயகர் சதுர்த்தி விழா, புரட்டாசி மாத நவராத்திரி விழாக்கள், ஐப்பசி மாதம் முதல் தேதி நடைபெறும் விழா, ஐப்பசி பௌர்ணமி அன்று நடைபெறும் அன்னதான விழா, ஐப்பசி கந்த சஷ்டி விழா, கார்த்திகை மாத சோமவாரம், கார்த்திகை மாத திருகார்த்திகை விழா, மார்கழி மாத திருவாதிரை, தைப்பூசம், தைப்பொங்கல், மாசிமகம், மாசி மாத சிவராத்திரி பூஜை, பங்குனி மாத உத்திரம் என வருடம் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோயில் இது.

இத்திருக்கோயிலில் பிரதோஷ மகிமை பற்றி சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதோஷம் என்பது ஐந்து வகையாக கொண்டாடப் படுகிறது. தினமும் மாலை 4:30 மணி முதல் 7:00 மணிவரையிலான காலம் நித்யப் பிரதோஷம் என கூறப்படுகிறது. வளர்பிறையில் வரும் பிரதோஷம் பட்சப் பிரதோஷம் என வழங்கப் படுகிறது. தேய்பிறையில் வரும் பிரதோஷம் மாதப் பிரதோஷம். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மகா பிரதோஷம் என அழைக்கபடுகிறது. தேய்பிறையில் வரும் சனிப்பிரதோஷம் எல்லா பிரதோஷங்களையும் விட மிகச் சிறந்தது என்பது ஐதீகம். கடைசியாக உலகம் அழியும் நேரத்தில் வரக்கூடிய பிரதோஷமாக கருதப்படுவது பிரளய பிரதோஷம் எனப்படுவது.


ஆதிசேஷனுக்கு என சிவன் கோயில்களில் தனிச்சன்னதி உள்ளது இந்த திருக்கோயில் மட்டுமே என்பது சிறப்பு. இத்திருக்கோயிலில் குருபகவான் சிம்ம மண்டபத்தில் காட்சி தருவது தனிச் சிறப்பு. பொதுவாக மூலஸ்தானமாகிய சுவாமி விமானத்தில் நந்தியும், அம்மனது சன்னதி விமானத்தில் சிம்மமும் காட்சி தருவது வாடிக்கை. இக்கோயிலில் சுவாமியின் விமானத்தில் சிம்மம் காட்சி தருவது இத்திருக்கோயில் சிம்ம தட்சிணா மூர்த்தியின் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

இத்திருக்கோயில் தரிசனம் முடித்து திரும்ப மன்னார்குடி நோக்கி வரும் போது, அந்த சாலையின் வலப்புறமாக வயல்வெளிகளின் ஊடே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில் கோபுர தரிசனம் தெரிவது வெகு சிறப்பு.


*******

இத்திருக்கோயில் 276 பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

திருஞானசம்பந்தர் பெருமான் அவர்கள் பாடிய திருப்பாதாளேச்வரர் திருப்பதிகம்:
மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத்து அமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே !!

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடரவம் பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலி னால்இனியான் உறைகோயில் பாதாளே !!

நாகமும் வான்மதியும் நலமல்கு செஞ்சடை யான்சாமம்
போகநல் வில்வரையாற் புரமூன்று எரித்துகந்தான்
தோகைநன் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே !!

அங்கமு நான்மறையும் அருள்செய்து அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்று உகளும் செருவில் திகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றுஅலரும் வயல்சூழ்ந்த பாதாளே !!

பேய்பல வும்நிலவப் பெருங்காடு அரங்காகஉன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறை யும்அரவும் பொலிகொன்றைச் சடை தன்மேற் சேரப்
பாய்புன லும்உடையான் உறைகோயில் பாதாளே !!

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மேல் நன்று
விண்ணியல் மாமதியும் உடன் வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்காடு அரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே !!

விண்டலர் மத்தமொடு மிளிரும்இள நாகம் வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார் சடையான்
விண்டவர் தம்புரமூன்று எரிசெய்துரை வேத நான்கும் அவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே !!

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
தொல்லை மலைஎடுத்த அரக்கன்தலை தோள்நெரித்தான்
கொல்லை விடை யுகந்தான் குளிர்திங்கள் சடைக்குஅ ணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே !!

தாமரை மேல்அயனும் அரியும்தமது ஆள்வினையால் தேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பிலர் ஆய் அகன்றார்
பூமரு வும்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமரு வும்குணத்தான் உறைகோயில் பாதாளே !!

காலையில் உண்பவரும் சமண கையரும் கட்டுரை விட்டுஅன்று
ஆல விடநுகர்ந்தான் அவன்றன்னடியே பரவி
மாலையில் வண்டினங்கள் மதுஉண்டு இசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே !!

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியல் மாடமல்கு புகலிநகர் மன்னன்
தண்ணொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத்து இருப்பாரே !!

*** திருச்சிற்றம்பலம் ***

63 comments:

RVS said...

நம்மூருக்கு நான் தான் ஃபர்ஸ்டா? ;-)

தமிழ் உதயம் said...

திருக்கோவிலுக்கு அழைத்து சென்றதில் மகிழ்ச்சி.

ஸாதிகா said...

பிரஷண்ட் போட்டுக்கறேன் சகோதரி

Thenammai Lakshmanan said...

மிக விரிவான பயனுள்ள் இடுகை.. மன்னைக்கே சென்று வந்தது போல் இருந்தது புவனா..

ராமலக்ஷ்மி said...

தலவிருட்ச வரலாறு சுவாரஸ்யமான தகவல். படங்களுடன் மிக அருமையான பகிர்வு புவனேஸ்வரி.

எல் கே said...

உங்களது இடுகைகளை தொடர்ந்துப் படித்து வருகிறேன். அனைத்தும் அருமை :)

R. Gopi said...

வழக்கம் போல நல்ல பதிவு.

Chitra said...

படங்கள் - தகவல்கள் - பாமாலை - அனைத்தும் அருமை.

ராம்ஜி_யாஹூ said...

மன்னார்குடி ஒத்தைத் தெருவில் இருந்து, என் கண்முன்னே மாட்டு வண்டிக்குள் இருந்து பரந்த உலகம் விரியும். கணபதி விலாஸ், ஆனந்த விநாயகர் ஆலயம், தேசிய மேல்நிலைப் பள்ளி, பந்தலடி, யானைக் கால் மண்டபம், பாமணி ஆ

பகிர்விற்கு மிகுந்த நன்றிகள்

Madhavan Srinivasagopalan said...

அட.. இந்தக் கோவிலுக்கு நா போனதே இல்லை..
சூப்பரா விவரமா சொல்லி இருக்கீங்க..
அதுல பாருங்க.. பச்சைப் பசேல்னு வயல் வெளியோட, கொபாலனோட ராஜா கோபுரம் பேக்ரவுண்டு.. அடா.. அடா.. கலகிட்டீங்க..
சமீபத்துல போயிட்டு வந்தீங்களோ ?

Menaga Sathia said...

எப்படி இருக்கீங்க?? ரொம்ப நாளா காணாமே உங்களை?? இத்திருத்தலத்தின் அறிமுகத்திற்க்கும்,படங்களுடன் பகிர்ந்தமைக்கும் நன்றி!!

ஜோதிஜி said...

பலருக்கும் உதவக்கூடிய தளம் இது.

Gayathri Kumar said...

Very Informative..

Pushpa said...

Thanks for sharing.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@RVS,
உங்க ஏரியாவாச்சே :) நன்றி ஆர்.வி.எஸ்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தமிழ் உதயம்,
ரொம்ப சந்தோஷம் ரமேஷ். மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஸாதிகா,
நன்றி சகோதரி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@தேனம்மை லெக்ஷ்மணன்,
வாங்க அக்கா. இதுவும் உங்க ஊருதான :) ரொம்ப நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,
படங்களையும் பதிவையும் ரசித்தமைக்கு நன்றி மேடம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@எல் கே,
தொடர்ந்து படித்து கருத்திட்டமைக்கு நன்றி எல் கே.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gopi Ramamoorthy,
நன்றி கோபி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Chitra,
பதிவை ரசித்தமைக்கு நன்றி சித்ரா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராம்ஜி_யாஹூ,
சிறுவயதில் மாட்டுவண்டியில் பாமணிக்கு சென்றது ஒரு ஆனந்த அனுபவம். நன்றி ராம்ஜி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Madhavan Srinivasagopalan,
சமீபத்துல தான் போயிட்டு வந்தோம். அவசியம் போயிட்டு வாங்க. கோயிலுக்கு போயிட்டு திரும்பும்போது தூரத்துல கோபுரம் தெரிவது அழகு. நன்றி மாதவன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@S.Menaga,
ரொம்ப நல்லா இருக்கேன் மேனகா. ஒரு சின்ன டூர், அதான் கொஞ்ச நாளா இந்த பக்கம் வர முடியல. பதிவை ரசித்தமைக்கு நன்றி மேனகா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ஜோதிஜி,
மிக்க மகிழ்ச்சி ஜோதிஜி. நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gayathri Kumar,
நன்றி காயத்ரி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Pushpa,
நன்றி புஷ்பா.

விஜய் said...

தகவல்களுக்கு நன்றி சகோ

விஜய்

ADHI VENKAT said...

நல்லதொரு எழுத்து நடையில் ஸ்தல புராணத்தை தெரிந்து கொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@விஜய்,
நன்றி சகோ.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோவை2தில்லி,
பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி ஆதி.

Kanchana Radhakrishnan said...

வழக்கம் போல நல்ல பதிவு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி காஞ்சனா.

கோமதி அரசு said...

//சிறு வயதில் நாம் சென்று வந்த இடங்களுக்கு, பல வருடங்கள் கழித்து மீண்டும் செல்லும் சந்தர்ப்பம் அமையும் போது ஆனந்தம் ஊற்றெடுக்கும்.//

உண்மை புவனேஸ்வரி.

உங்களுக்கு மகிழ்ச்சி, எங்களுக்கு அருமையான பயணக் கட்டுரை.

Vikis Kitchen said...

கட்டுரை மிகவும் அருமை. மாட்டு வண்டி பயணம்னு சொல்லி பழைய நினைவுகளை மறுபடியும் ஞாபகபடுத்திட்டீங்க :) திருத்தல அமைப்பும், தல விருட்சமும் மலைக்க வைக்கின்றன . சுவாமி அலங்காரமும் , பசுமையும் அழகாக படம் பிடித்து இருக்கிறீர்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@கோமதி அரசு,
தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி கோமதியம்மா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Viki's Kitchen,
உங்களுக்கும் மாட்டுவண்டியில் போன அனுபவம் இருக்கா.. சூப்பர். பதிவையும் படங்களையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி விக்கி.

Anonymous said...

நல்ல அனுபவத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

பதிவை ரசித்தமைக்கு நன்றி மகா.

mamtc said...

First time hearing about this temple and pretty informative
Revolutionary one of kind chutney.
Me and my thinking cap

மனோ சாமிநாதன் said...

என் ஊரான மன்னையைப்பற்றிய. அதன் அருகேயுள்ள‌ பாமணியைப்பற்றிய தகவல்கள் படித்து மகிழ்வாயிருந்தது. பாமணியாற்றில் நீச்சல் அடித்தது, ஆற்ற‌ங்கரையில் தோழியருடன் பல கதை பேசி சிரித்தது எல்லாமே நினைவுக்குக் கொன்டு வந்து விட்டீர்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் said...

@coolblogger,
மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மனோ சாமிநாதன்,
ரொம்ப சந்தோஷமா இருக்கு மனோம்மா. தங்கள் நினைவுகளை இங்கு பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

RVS said...

ராஜகோபாலன் கோபுர தரிசனம்.. பச்சை வயல்வெளிக்கிடையில் பச்சைமாமலை போல் கோபாலன் ... டாப் கிளாஸ் ஃபோட்டோ ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகா சொல்லியிருக்கீங்க. மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.

மாதேவி said...

"திருப்பாதாளேச்சுரம்" திருத்தலம் தர்சித்தோம்.நன்றி.

RVS said...

என்னாச்சு? ரொம்ப நாளா ஆளைக் காணோம்... ;-)

R.Gopi said...

பெரிய பதிவு.. நிறைவான தகவல்கள்... அருமையான புகைப்படங்கள் என்று பதிவு வழக்கம் போல களை கட்டி விட்டது...

ஆலய தரிசனம்.. ஆயிரம் கோடி புண்ணியம்...

நன்றி புவனா மேடம்...

R. Gopi said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

நீங்க 2010 மீள்பார்வை பதிவு எழுத அழைக்கும் முன்பே அதை எழுதிவிட்டேன். அதனால் நீங்கள் அழைத்தபடி போனமுறை பதிவிடமுடியவில்லை:-(

புவனேஸ்வரி ராமநாதன் said...

@மாதேவி,
பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@RVS
வாங்க RVS,
எப்படி இருக்கீங்க. நடுவில் சிறிது காலம் கணினி பழுது பட்டு விட்டதால்
தொடர்ந்து பதிவிட முடியவில்லை. இனி தொடர்வேன். மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@R.Gopi
//ஆலய தரிசனம்.. ஆயிரம் கோடி புண்ணியம் //
அருமையான வார்த்தைகள். பதிவை ரசித்தமைக்கு நன்றி கோபி.

ராமலக்ஷ்மி said...

//இனி தொடர்வேன்//

நல்லது, நானே மடல் அனுப்பிக் கேட்க இருந்தேன்:)! வாருங்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@Gopi Ramamoorthy,
தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி கோபி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

@ராமலக்ஷ்மி,

//நல்லது, நானே மடல் அனுப்பிக் கேட்க இருந்தேன்:)! வாருங்கள்.//

தங்களின் அன்பான விசாரிப்பிற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

Asiya Omar said...

நலம் தானே! நீண்ட நாட்களாய் காணவில்லை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நலம் ஆசியாக்கா. தங்களது பாசமான விசாரிப்புக்கு
மிக்க நன்றி. கணினி பழுதுபட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டது.
இனி பணி தொடரும். மீண்டும் நன்றி அக்கா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக்க நன்றி காஞ்சனா.

jayakumar said...

arumai...pls visit my blog also

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றிகள் பல ஜெயகுமார்.

Padhu Sankar said...

Very good post .

புவனேஸ்வரி ராமநாதன் said...

thanks a lot padhu.

Post a Comment

Related Posts with Thumbnails