Wednesday, April 23, 2014

மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்

இன்றைய திருக்கோவில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில், மாந்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.


அருணகிரிநாதர் அருளிய திருமாந்துறை திருப்புகழ்:
ஆக்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
ஆஞ்சு தளர் சிந்தை தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்குவு மறிந்து
ஆண்டு பல சென்று கிடையோடே
ஊங்கிருமல்வந்து வீங்குடல் நொந்து
ஓய்ந்துனர் வழிந்து உயிர்போமுன்
ஓங்கு மயில் வந்து சேன்பெற விசைந்து
ஊன்றிய பதங்கள் தருவாயே
வேங்கையுமுயர்ந்த தீம்புனமிருந்த
வேந்திழையின் இன்ப மணவாளா
வேண்டுமவர் பூண்ட தாங்கள் பதமிஞ்ச
வேண்டிய பதங்கள் புரிவோனே
மாங்கனியுடைந்து தேங்கவயல் வந்து
மாண்பு நெல் விளைந்த வளநாடா
மாந்தர்தவர் உம்பர்கோன் பரவிநின்ற
மாந்துறை யமர்ந்த பெருமானே!!

திருக்கோயில் அமைவிடம்:
தமிழகத்திலேயே சூரிய பகவானின் அதிகபட்ச அன்பிற்கும், பாசத்திற்கும் ஆளாகும் ஊர் திருச்சி தான். மழையோ, குளிரோ அதிகமில்லாத, வருடம் முழுக்க வெட்கை மழையில் நனையும் பிரதேசம். மழை அதிகம் இல்லாவிட்டாலும், சுற்றி உள்ள ஊர்களில் பொழியும் மழைநீர் திருச்சிக்கு வந்து சேர்ந்துவிடும். இப்படி காவிரி ஆற்றின் புண்ணியத்தில் வளம் கொழிக்கும் திருச்சிக்குள்ளும், திருச்சியை சுற்றியும் பாடல் பெற்ற தலங்களும், திவ்ய தேசங்களும் நிறைய உள்ளன. அப்படி திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலங்களுள், திருமாந்துறை திருக்கோயிலும் ஒன்று.

இத்திருத்தலம் திருச்சியில் இருந்து 20 km தொலைவிலும், லால்குடியில் இருந்து 4 km தொலைவிலும், திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் இருந்து 12 km தூரத்திலும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவலில் இருந்து 12 km தொலைவிலும், நம் தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்றான கல்லணையில் இருந்து 25 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல இறைவன்: ஆம்ரவனேஸ்வரர், மிருகண்டீஸ்வரர்
தல இறைவி: அழகம்மை, பாலாம்பிகை
தல விருட்சம்: மாமரம்
தல தீர்த்தம்: காயத்ரி நதி


திருத்தல அமைப்பு:
திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல்பெற்ற காவிரி வடகரை, சிவ தலங்களுள் 58-வது தலமாக விளங்குகிறது. இங்கு அமையப் பெற்றுள்ள ஆம்ரவனேஸ்வரர், சுயம்பு லிங்கமாக உள்ளது தனிச் சிறப்பு. தமிழ் மாதங்களுள் பங்குனி மாதம் மூன்று நாட்கள் இந்த சுயம்பு லிங்கத்தின் மேல் சூரியனின் கதிர்கள் படர்வது திருக்கோயில் கட்டமைப்பின் அதிசயம்.

மாமரங்கள் அதிகம் காணப்பட்ட தலம் என்பதால் இத்தலம் மாந்துறை என்றழைக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், மானுக்கு அருள்புரிந்த தலம் என்பதாலும் மாந்துறை என்று வழங்கப் படுகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்து அருள்பாலிக்கிறார் மூலவர் ஆம்ரவனேஸ்வரர். இத்தல அன்னை பாலாம்பிகை தெற்கு திசை நோக்கி காட்சி தந்து உலகை ரட்சிக்கிறாள். பரிவார தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, தட்சிணா மூர்த்தி, துர்க்கை போன்ற தெய்வங்களும், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கிழக்கு பார்த்தபடியும், தண்டாயுதபாணி கோலத்தில் முருகப் பெருமான் சன்னதி, நவகிரகங்கள் சன்னதி என அனைத்து சன்னதிகளும் அமையப் பெற்றுள்ளன.


திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பஞ்ச சிவ தலங்களுள் இத்திருத்தலமும் ஒன்றாகத் திகழ்கிறது. ஆதிசங்கரர் இத்தல மூர்த்தியை வழிபாடு செய்துள்ளது மேலும் ஒரு சிறப்பு. இவர் கோஷ்டத்தில் தெற்கு பார்த்தபடி காட்சி தருகிறார். மிருகண்டு முனிவரும் இத்தல இறைவனை வணங்கியுள்ளார். கோஷ்டத்தில் அமைந்துள்ள துர்க்கை, சாந்த நிலையில் காட்சி தருகிறாள். துர்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் காணப்படவில்லை.

திருத்தல வரலாறு:
இந்த திருமாந்துறை திருத்தலத்திற்கு ஆம்ரவனம், ப்ரம்மானந்தபுரம், மிருகண்டீஸ்வரபுரம் என்னும் வேறு பெயர்களும் உண்டு. ஆதி காலத்தில் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய விஸ்வகர்மாவின் மகளாகப் பிறந்தார் சமுக்யாதேவி. பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்கிய சமுக்யாதேவியை சூரிய பகவான், மும்மூர்த்திகள், முப்பெரும் தேவியர், தேவர்கள் என எல்லோரது ஆசியுடனும் வாழ்த்துக்களுடனும் திருமணம் புரிந்து கொண்டார். தம்பதியர் இருவரும் மனமொத்து அன்புடன் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் சமுக்யாதேவிக்கு கதிரவனின் வெப்ப உக்கிரத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. சூரிய பகவானிடம் அவரது வெப்ப மிகுதியை தனித்துக் கொள்ளச் சொன்னாள் சமுக்யாதேவி. அவ்வாறு சூரியனிடம் வேண்டிக்கொண்டும் அவர் தனது வெப்பக் கதிரின் உக்கிரத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இனி இந்த வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்ற நிலையில், தனது தந்தையான விஸ்வகர்மாவிடமே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தாள் சமுக்யா. அதனை தன் தகப்பனாரிடம் கூற, அவரோ ஆறுதல் கூறி அவளை கணவனிடமே சேர்ந்து வாழ வலியுறுத்தினார். பொறுக்க முடியாத சமுக்யா கணவனை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.

தன்னைப் பிரிய தன் கணவர் ஒப்புக் கொள்ளமாட்டார், மேலும் மனம் வருந்துவார் என்றெண்ணிய சமுக்யா தன்னைப் போலவே துளியும் வித்தியாசம் காணமுடியா வண்ணம் ஒரு உருவத்தை தனது நிழலில் இருந்து உருவாக்கினாள். அந்த உருவத்திற்கு சாயாதேவி எனப் பெயரிட்டு, தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக வாழ்ந்து அவருக்கு உதவியாக இருக்கும்படி பணித்தாள். அதன் பின் தன் தகப்பனிடமே வந்து சேர்ந்த சமுக்யா, தந்தை விஸ்வகர்மா எத்தனை சொல்லியும் திரும்பவும் கணவனிடம் செல்லவில்லை. இவ்வாறு தான் கணவனைப் பிரிந்து வந்து இங்கு வசிப்பதை விரும்பிடாத தன் தந்தையால் மனம் வெதும்பிய சமுக்யா, குதிரை வடிவம் பெற்று இந்த மாந்துறை தலம் வந்து இத்தல இறைவனை வணங்கி, தனது கணவரின் உக்கிரம் குறையவும், சூரியனது உக்கிரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை தனக்கு அருளுமாரும் வேண்டினாள்.


இதற்கு நடுவே தன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பது சமுக்யாதேவி இல்லை என்பதை உணர்ந்த சூரிய பகவான், விஸ்வகர்மாவின் மூலம் சமுக்யாதேவியின் பிரிவை அறிந்த கதிரவன், அவரின் முன்பாகவே தனது உக்கிரத்தைக் குறைத்துக் காண்பித்தார். பின்னர், இந்த மாந்துறை திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டு சமுக்யா தேவியுடன் சேர்ந்தார். இதன் காரணமாகவே இத்திருத்தலத்தில் நவக்ரஹங்களில் உள்ள சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயதேவியுடன் தம்பதி சமேதராய் காட்சி தருகிறார். மேலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தவாறும் அமைந்துள்ளன.

மானுக்கு சாப விமோசனம் தந்த திருத்தலம்:
முன்னொரு காலத்தில் மாமரங்கள் நிறைந்த மாந்தோப்பாகக் காணப் பட்டது இந்தப் பகுதி. இந்த மாமரங்கள் நிறைந்த வனத்தில், தவம் மேற்கொண்டிருந்த முனிவர் ஒருவர் சிவனை பழித்த காரணத்தினால் மானாகப் பிறக்கும்படி சாபம் பெற்றார். இது போல முற்பிறவியில் அசுரர்களாக வாழ்ந்து இப்பிறவியில் மான்களாகப் பிறந்துள்ள அசுரர்களுக்கு பிறந்தார்.

ஒரு சமயம் தனது குட்டி மானை விட்டு தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட, அங்கே வேட்டையாடும் ரூபத்தில் வந்த சிவன் பார்வதி தம்பதியினர், இந்த இரு மான்களையும் அம்பால் எய்து சாபவிமோசனம் தந்தருளினர். அதேநேரம், அங்கு தனியே இருந்த குட்டி மான் தன் தாய் தந்தையரைக் காணாமல் தவித்து பயத்திலும், பசியிலும் அழுதது. அதனைக் கண்ட சிவனும் பார்வதியும், குட்டி மானிடம் வந்து அதற்கு பாலூட்டி சீராட்டினர். இவ்வாறு சிவன் பார்வதியின் தரிசனம் கிடைக்கப் பெற்ற குட்டிமான், தனது சாபத்தில் இருந்து விடுபட்டு, மீண்டும் மகரிஷியாக வடிவம் பெற்றது. மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவனும் பார்வதியும் இத்திருத்தலத்திலேயே தங்கி விட்டனர்.

திருத்தலச் சிறப்பு:
மிருகண்டு முனிவர் கடும் தவம் இருந்து பெற்ற செல்வமான மார்கண்டேயன் தோன்றிய திருத்தலம் மாந்துறை. அந்த மகன் 16 வயதை அடைந்த பின்னரும் மரண பயமின்றி வாழ தவம் மேற்கொண்ட தலம் மாந்துறை.

சூரியனது வெப்பக் கீற்றைப் பொறுத்து தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை வேண்டி சமுக்யா தேவி வழிபட்ட தலம்.

செவ்வாய்க் கிழமையும், சதுர்த்தி தினமும் ஒன்றாய் வரும் நாளான அங்காரக சதுர்த்தி அன்று இங்குள்ள காயத்ரி நதியில் நீராடி இத்தல இறைவனை வணங்கிட, எல்லா பாவங்களும் நீங்கி மன நிம்மதியுடன் வாழ வழி செய்வான் இறைவன்.

சைவ சமய நால்வருள் திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப்பட்ட திருத்தலம். இத்தல முருகன் மேல் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி அருளியுள்ளார்.

இத்தலத்து இறைவி பாலாம்பிகையை பாலபிஷேகம் செய்து வணங்கிட பாலதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

சிவனை அழையாமல் தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்று வந்த சூரியன், தனது பாவம் தீர, வந்து வழிபட்ட திருத்தலம் இந்த மாந்துறை.

மானுக்கும் சாப விமோசனம் தந்த திருத்தலம்.

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த திருத்தலம்.

திருவண்ணாமலையில் சிவனது முடியினைக் கண்டுவிட்டதாக பொய் கூறி சாபம் பெற்ற பிரம்மன் தன் சாபம் நீங்க வழிபட்ட திருத்தலம்.

மாமரங்கள் நிறைய காணப்படும் இடமாக உள்ளத்தால் இத்தல இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தல மரமும் மாமரமாகவே விளங்குகிறது.


திருஞானசம்பந்தர் மாந்துறை திருத்தலத்தில் அருளிய தேவாரப்பதிகம்:
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும்
செருந்திசெண் பகம்ஆனைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொ னேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகின்ற
எம்பி ரான்இமை யோர்தொழு பைங்கழல்
ஏத்துதல் செய்வோமே!!

விளவு தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை உரைவானத்
துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச்
சுடவிழித் தவன்நெற்றி
அளக வாள்நுதல் அரிவைதன் பங்கனை
அன்றிமற்று அறியோமே!!

கோடு தேன்சொரி குன்றிடை பூகமும்
கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யில்பலி கொள்பவன்
வானவர் மகிழ்ந் தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது
கெழுமுதல் அறியோமே!!

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
இளமருது இலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது
வணங்குதல் அறியோமே!!

கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி
குரவிடை மலர்உந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறை வானைப்
பாங்கி னால்இடுந் தூபமும் தீபமும்
பாட்டவிம் மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
தலைப்படும் தவத் தோரே!!

பெருகு சந்தனம் காரகில் பீலியும்
பெருமர நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதன்எம் பெருமானைப்
பரிவி னால்இருந்து இரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே!!

நரவ மல்லிகை முல்லையு மௌவலு
நாள்மலர் அவை வாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
மாந்துறை யிறைஅன்று அங்கு
அரவ னாகிய கூற்றினைச் சாடிய
அந்தணன் வரை வில்லால்
நிறைய வாங்கியே வலித்தெயில் எய்தவன்
நிரைகழல் பணிவோமே!!

மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
நிந்தி யாஎடுத்து ஆர்த்தவல் லரக்கனை
நெரித்திடு விரலானைச்
சிந்தியாமனத் தார்அவர் சேர்வது
தீநெறி யதுதானே!!

நீல மாமணி நித்திலத் தொத்தொடு
நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
மாந்துறை யமவர்வானை
மாலு நான்முகன் தேடியும் காண்கிலா
மலரடி யிணை நாளும்
கோலம் ஏத்திநின்று ஆடுமின் பாடுமின்
கூற்றுவன் நலியானே!!

நின்று ணும்சமண் தேரரு நிலையிலர்
நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலன்களும்
நாணலி னுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யொரு காலம்
அன்றி யுள்ளழிந்து எழும்பரி சழகிது
அதுஅவர்க்கு இடம் ஆமே!!

வரைவ ளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை உரைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
பாவமும் இலர்தாமே!!

திருச்சிற்றம்பலம்!!

23 comments:

  1. திருத்தலம் பற்றிய மிகவும் அருமையான அழகான பதிவு.

    இந்தக்கோயில் எங்களின் குலதெய்வங்களில் ஒன்று [அதாவது இது எங்கள் கிராம தேவதையாகும்]

    http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html

    அதிக தகவல்களுடன் கூடிய சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வணக்கம்

    ஆலயம் சம்மந்தமான பதிவுநன்றாக உள்ளது....பாடங்களும் அழகு மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. @ வை.கோபாலகிருஷ்ணன்...

    // இந்தக்கோயில் எங்களின் குலதெய்வங்களில் ஒன்று [அதாவது இது எங்கள் கிராம தேவதையாகும்] //

    மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களது வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. @ 2008rupan...

    வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரூபன்.

    ReplyDelete
  5. மேலும் ஒரு புதிய கோவிலைப் பற்றியும் தேவாரப்பாடலைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  7. சிறப்பான தகவல்கள் ..பாராட்டுக்கள்..

    மாந்துறை பற்றி இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன்..!

    ReplyDelete
  8. மாந்துறைகோவில் பற்றிய செய்திகளும், தேவார பதிகங்களும் மிக அருமை.
    பகிர்வுக்கு நன்றி புவனேஸ்வரி.

    ReplyDelete
  9. @ Chokkan Subramanian.....

    மிக்க நன்றி சொக்கன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. @ நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்..

    மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. @ இராஜராஜேஸ்வரி......

    வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி.
    தங்களது மாந்துறைப் பதிவுகளையும் கண்டேன். மிக அருமை வாழ்த்துக்கள்.


    ReplyDelete
  12. @ கோமதி அரசு.....

    வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கோமதிஅம்மா.
    வாழ்த்துக்கள்.




    ReplyDelete
  13. திருமாந்துறை திருக்கோவில் தல புராணம் மிகவும் ரசனையாக எழுதி உள்ளீர்கள்.திருச்சி குறித்த தகவல்களும் ,படங்களும் பாடலும் அருமை . நன்றி.

    ReplyDelete
  14. வருகை தந்து ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி விக்கி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. மாந்துறை - பெயரே அழகாக உள்ளது. என் பிறந்தகமான திருச்சியில் இருக்கும் இக்கோவில் பற்றி இப்போதுதான் அறிகிறேன். தல வரலாறும் பதிகமும் மனந்தொட்டன. பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  16. வருகை தந்து தங்களது இனிய கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கீதமஞ்சரி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. அருமையான பதிவு, படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி. நின்றபடி அருள்பாலிக்கும் விநாயகர் சிலை வெகு அழகு.

    ReplyDelete
  18. ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. மாந்துறை கோவில் பற்றி விளக்கமாக எழுதியுள்ளீர்கள். கோவில் சமீபத்தில் புதிப்பிக்கப் பட்டுள்ளது போலும்.

    ReplyDelete
  20. ஆம் நீங்கள் சொல்வது சரிதான் ஸ்ரீராம். வருகை தந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சேகர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. தேவாரப்பதிகங்களும் செய்திகளும் புகைப்படங்களும் அருமை!

    ReplyDelete
  23. பதிவையும் பதிகங்களையும் ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மனோம்மா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete