Tuesday, December 21, 2010

என்றும் இனியவை - A.M.ராஜா

மனித வாழ்க்கை, பிறந்த நொடியிலிருந்து இறப்பை நோக்கிய பயணமாகவே தொடர்கிறது. நேரான சாலையில் சிரமமின்றி செல்வது போல, ப்ரேக் அதிகம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், சிலரது வாழ்க்கை சுகமாக அமைந்து விடுகிறது. மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளைப் போல் பலரது வாழக்கை பல கஷ்ட நஷ்டங்களைத் தாண்டிப் பயணிக்கிறது. பிறப்பில் ஆரம்பித்து ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வை சுவாரஸ்யமாக்குவது இசை மட்டுமே.

அது போகிற போக்கில் வாழ்பவர்கள்தான் பலபேர். ஆனால், தான் மறைந்த பிறகும் தன்னை எல்லோர் மனத்திலும் குடிவைத்துச் செல்ல வேண்டும் என்று தன் வாழக்கையைப் பாடமாக வாழ்ந்து செல்பவர்கள் சிலர் இருந்தார்கள், இருந்துகொண்டிருக்கிறார்கள். என்னடா இது ஒரே தத்துவ மழையாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? எல்லாம் A.M.ராஜா அவர்களின் பாடல்களைக் கேட்டதின் பலன் தான்.


சிலரது பாடலை காலை கண் விழிக்கும் போது கேட்கப் பிடிக்கும். சிலரது பாடலை பயணத்தின் போது கேட்கப் பிடிக்கும். நம்மில் பலர் வேலை சுமையின் அலுப்பு தெரியாமல் இருக்க, பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்வது வழக்கம். ஆனால், வாழ்க்கையின் அலுப்பு தெரியாமல் இருக்க, A.M.ராஜாவின் பாடல்களைக் கேட்டால் போதும், நம்மை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இவரது தேன் குரலின் மகிமை அப்படி. சோகத்தின் சாயலும், சந்தோஷத்தின் மையலும் சேர்ந்து கலந்து செய்த கலவைதான் A.M.ராஜாவின் குரலமைப்பு. இரவின் மடியில் இனிமை சேர்க்கும் பாடல்கள் இவருடையது.

தென்னிந்திய இசை வானில் துருவ நட்சத்திரமாக விளங்கிய A.M.ராஜா, வட இந்தியத் திரையுலகிலும் தன் இசைத் திறமையை நிலைநாட்டியிருக்கிறார். ஹிந்தி சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான ராஜ்கபூரினால் பாராட்டுப் பத்திரம் பெற்றவர். மற்றவர்களது இசையில் இவர் பாடிய பாடல்களை விட இவரே இசையமைத்து பாடிய பாடல்கள் நிரம்ப பிரபலம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அத்தனை மொழிகளிலும் இவர் பிரபலம். நிறைய பாடகர்கள் பல மொழிகளில் பாடி இருந்தாலும், தான் பாடிய அத்தனை மொழிகளிலும் பிரபலமான சில பாடகர்களுள் இவரும் ஒருவர்.

*******

A.M.ராஜாவுக்கும், அதே காலகட்டத்தில் பிரபல பாடகியாக இருந்த ஜிக்கி அவர்களும் காதலித்து, இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கும் சமயத்தில், பிரபல பத்திரிக்கையில் வந்த செய்திதான் பலரை புருவம் உயர்த்தச் செய்ததாம். ராஜா, ஜிக்கி கல்யாணம் என்று செய்தி வெளியிடுவதற்கு பதிலாக, ராஜாஜிக்கி கல்யாணம் என்று பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டதாம். ராஜாஜிக்கு கல்யாணமா, என்று மக்கள் மததியில் பரபரப்பு நிலவியதாம்.

*******

களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம் பெற்ற அருகில் வந்தாள், உருகி நின்றாள் என்ற பாடல், தன்னை மறந்து விட்ட காதலியை நினைத்து ஜெமினி பாடும்படி அமைக்கப் பட்டுள்ளது. ஜெமினி கையில் வைத்துப் பார்க்கும் சீட்டுக் கட்டின் ஒவ்வொரு வடிவத்திலும் சாவித்திரியின் முகம் வருவது போல காட்சி இருக்கும். அந்த காலத்திலேயே அழகாக பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம். ஜெமினியின் நடிப்பு அருமையாக இருக்கும். இதற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல் A.M.ராஜாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல், தேனீ பூவிலிருந்து தேனை எடுத்து கூட்டில் சேர்க்காமல் நேராக நம் கையிலேயே கொடுத்தது போன்ற தித்திப்பான உணர்வு.



*******

A.M.ராஜா அவர்கள் இசையமைத்து, தமிழ் திரையுலகை முற்றிலுமாக வேறு திசைக்கு இட்டுச் சென்ற பெருமை மிகு இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் உருவான தேன் நிலவு படத்தில் வரும் காலையும் நீயே, மாலையும் நீயே பாடல் கரும்புச் சாறு. பாடல் வரிகளை A.M.ராஜா பாட, இன்றும் இளமை கொஞ்சும் குரலழகி ஜானகி அவர்களின், ஹம்மிங், பாடல் நெடுக வந்து கேட்பவர்களை மயக்கும் தேனிசை.



*******

ஆடாத மனமும் ஆடுதே என்ற களத்தூர் கண்ணம்மா பாடல் இசையுலகில் A.M.ராஜா, P.சுசீலா சேர்ந்து பாடிய பாடல்களில் சிகரத்தை தொட்ட பாடல். இந்த பாடலில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு உற்சாகம் கூட்டி இருப்பார்கள். A.M.ராஜாவை விட, P.சுசீலாவின் பங்களிப்பு சற்று கூடுதலாகவே இருக்கும் இப்பாடலில்.



*******

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடல் மிஸியம்மா படப் பாடல். ஜெமினி, சாவித்திரியின் இளமையான தோற்றம், பழம்பெரும் நடிகர் ரெங்காராவ் அவர்களின் கைதேர்ந்த நடிப்பு, A.M.ராஜாவின் குரல், இனிமையான இசை அனைத்து சங்கதிகளும் ஒருங்கே மிளிரும், காலத்தால் அழியாத, இந்தத் தலைமுறை ரசிகர்களும் விரும்பிக் கேட்கும் பாடல்.



*******

ஆடிப்பெருக்கு படத்தில் தோன்றும் தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடல் தத்துவ முத்து. டூயட் பாடலாக இருந்தாலும் அதிலே தத்துவதத்தை நுழைத்தது பாடல் ஆசிரியரின் திறமை. "மலர் இருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை, செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை" என்று நீளும் பாடல் வரிகள், உலக வாழ்க்கைச் சக்கரத் தத்துவத்தை ஒரு எளிய பாடலில் உணர்த்தியுள்ளது.



*******

இப்படி எத்தனையோ பாடல்கள். A.M.ராஜா அவர்களின் குரல் இனிமையும், அவரது பாடல்களில் வரும் வார்த்தை ஜாலங்களும், இசை அமைப்பாளர்களின் மெட்டு விளையாட்டுக்களும் ஒன்று சேர்ந்து இவர் பாடிய பாடல்கள் உலக உருண்டை சுழலும் வரை எல்லோரது மனதையும் சுற்றி வரும் பாடல்கள்தான் என்பதில் ஐயமில்லை. ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களில் இருந்து சில பாடல்கள் இதோ:

சின்ன சின்ன கண்ணிலே.. (தேன் நிலவு)


கண்களின் வார்த்தைகள் புரியாதோ.. (களத்தூர் கண்ணம்மா)


மைனர் லைஃப் ரொம்ப ஜாலி.. (இல்லறமே நல்லறம்)


வாடிக்கை மறந்ததும் ஏனோ.. (கல்யாணப் பரிசு)


ஓஹோ எந்தன் பேபி.. (தேன் நிலவு)


வாராயோ வெண்ணிலாவே.. (மிஸியம்மா)


போதும் உந்தன் ஜாலமே.. (கடன் வாங்கி கல்யாணம்)


தேன் உண்ணும் வண்டு.. (அமர தீபம்)


தென்றல் உறங்கிய போதும்.. (பெற்ற பிள்ளையை விற்ற அன்னை)


துயிலாத பெண் ஒன்று கண்டேன்.. (மீண்ட சொர்க்கம்)


நிலவும் மலரும் பாடுது.. (தேன் நிலவு)


நினைக்கும்போதே ஆஹா.. (இல்லறமே நல்லறம்)


உன்னைக் கண்டு நான் வாட.. (கல்யாணப் பரிசு)


பாட்டு பாடவா.. (தேன் நிலவு)


காதலிலே தோல்வியுற்றாள்.. (கல்யாணப் பரிசு)


மனமென்னும் வானிலே.. (எல்லோரும் இந்நாட்டு மன்னர்)


எந்தன் கண்ணில் கலந்து.. (மல்லிகா)


துள்ளி துள்ளி அலைகள் எல்லாம்.. (தலை கொடுத்தான் தம்பி)


மயக்கும் மாலை பொழுதே நீ போ போ.. (குலேபகாவலி)


*******

50 comments:

  1. சுடச்சுட பின்னூட்டம்...

    ReplyDelete
  2. நீங்கள் வீடியோ விண்டோ இல்லாமல் இதுபோல பாடலை மட்டும் இணைப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ள விழைகிறேன்... youtubeஐயா பயன்படுத்துகிறீர்கள்...

    ReplyDelete
  3. யூட்யூப் வீடியோ தான் பயன்படுத்துகிறேன். Embed code-ல் height = 25 என்று கொடுத்துவிட்டால் வீடியோ இல்லாமல் இது மாதிரி ஆடியோ மட்டும் கேட்கும் விதமாக வந்துவிடும்.

    ReplyDelete
  4. A.M. ராஜாவின் அணைத்து பாடல்களுள் இப்படித்தான். அவரின் மென்மையான அந்த குரல் அனைவரையும் மயக்கும் வித்தை கற்றது.சில பாடல்கள் விடுபட்டுள்ளன.

    சின்னபென்னான போதிலே - ஆரவல்லி.
    கண்ணாலே நான் கண்ட கணமே - பார்த்திபன் கனவு.
    துயிலாத பெண் ஒன்று கண்டேன் - நீண்ட சொர்கம்.(இதை எப்படி மறந்தீர்கள்?)

    அருமையான Re collections

    ReplyDelete
  5. // யூட்யூப் வீடியோ தான் பயன்படுத்துகிறேன். Embed code-ல் height = 25 என்று கொடுத்துவிட்டால் வீடியோ இல்லாமல் இது மாதிரி ஆடியோ மட்டும் கேட்கும் விதமாக வந்துவிடும்.///


    ஆஹா...... நல்ல ஐடியா . மிக்க நன்றி!

    ReplyDelete
  6. //கக்கு - மாணிக்கம் said...
    A.M. ராஜாவின் அணைத்து பாடல்களுள் இப்படித்தான். அவரின் மென்மையான அந்த குரல் அனைவரையும் மயக்கும் வித்தை கற்றது.சில பாடல்கள் விடுபட்டுள்ளன.

    சின்னபென்னான போதிலே - ஆரவல்லி.
    கண்ணாலே நான் கண்ட கணமே - பார்த்திபன் கனவு.
    துயிலாத பெண் ஒன்று கண்டேன் - நீண்ட சொர்கம்.(இதை எப்படி மறந்தீர்கள்?)

    அருமையான Re collections.//

    இன்னும் எத்தனையோ பாடல்கள், அனைத்தையும் இணைக்க முடியவில்லை. "துயிலாத பெண் ஒன்று கண்டேன்" பாடலை இணைத்துள்ளேன். கேட்டு ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. //philosophy prabhakaran said...
    சுடச்சுட பின்னூட்டம்...//

    சுடச்சுட பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி பிரபாகரன்.

    ReplyDelete
  8. கீழ் கண்ட இணைப்பில் சென்று தமிழ் என்ற தலைப்பில் இருக்கும் பாடல்களை பாருங்கள்?
    அதில்
    Nostalgic Seventies (1870)
    Old (6359)

    என்ற பகுதிகளில் பாருங்கள் மலைதுபோவீர்கள்!
    http://music.cooltoad.com/music/category.php?id=10003&PHPSESSID=741a56851ecb7d9cfe78514002fb779

    :)

    ReplyDelete
  9. இணைப்புக்குச் சென்று பார்த்தேன். பழைய பாடல்களும், எழுபதுகளில் வந்த முத்தான பாடல்களும் கொட்டிக் கிடக்கின்றன. குறித்துவைத்துக் கொண்டேன். மிக்க நன்றி மாணிக்கம்.

    ReplyDelete
  10. AAAAahhhhhhaaaaaaaaaaaa, arpudham arpudham. Even I love his voice and all his songs. You have given us ready reckoner of this best, thanks to u. Loved it absolute. Bookmarked for listening as and when I feel.Thanks once again.

    ReplyDelete
  11. சில பாடல்கள் எனக்கு தெல்லேது.. பகிர்ந்தமைக்கு நன்றி. ;-)

    ReplyDelete
  12. //அது போகிற போக்கில் வாழ்பவர்கள்தான் பலபேர். ஆனால், தான் மறைந்த பிறகும் தன்னை எல்லோர் மனத்திலும் குடிவைத்துச் செல்ல வேண்டும் என்று தன் வாழக்கையைப் பாடமாக வாழ்ந்து செல்பவர்கள் சிலர் இருந்தார்கள், இருந்துகொண்டிருக்கிறார்கள். என்னடா இது ஒரே தத்துவ மழையாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? எல்லாம் A.M.ராஜா அவர்களின் பாடல்களைக் கேட்டதின் பலன் தான்.//

    பலன் எங்களுக்கு:)! தந்திருக்கிறீர்கள் அருமையான பதிவு. கேட்கவும் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு. நன்றி புவனேஸ்வரி.

    ReplyDelete
  13. @Ms.Chitchat,
    பதிவையும் பாடல்களையும் ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  14. @RVS,
    தெரியாத பாடல்களை கேட்டு ரசித்தீர்களா? கருத்துக்கு மிக்க நன்றி ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  15. @ராமலக்ஷ்மி,
    ரொம்ப சந்தோஷம் மேடம், பதிவை ரசித்து பாராட்டியமைக்கு. மிக்க நன்றி.

    ReplyDelete
  16. நல்ல கலெக்ஷன்

    ReplyDelete
  17. AM Raja and Raja (Isaignaani) - Real kings of music

    ReplyDelete
  18. @Gayathri's Cook Spot,
    கருத்துக்கு நன்றி காயத்ரி.

    ReplyDelete
  19. //இனியா said...
    AM Raja and Raja (Isaignaani) - Real kings of music//

    உண்மை தான். கருத்துக்கு நன்றி இனியா.

    ReplyDelete
  20. ஏ.எம்.ராஜாவை தமிழ்திரையுலகம் இன்னும் நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கலாம்.

    ReplyDelete
  21. //பிறப்பில் ஆரம்பித்து ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வை சுவாரஸ்யமாக்குவது இசை மட்டுமே.//

    புவனேஸ்வரி நீங்கள் சொல்வது உண்மை.

    எனக்கு ராஜாவின் பாடல்கள் எல்லாம் பிடிக்கும்.

    நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல்கள் எல்லாம் அருமையான பாடல்கள்.

    ReplyDelete
  22. //தமிழ் உதயம் said...
    ஏ.எம்.ராஜாவை தமிழ்திரையுலகம் இன்னும் நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கலாம்.//

    இசையமைப்பாளராக சொல்கிறீர்களா? பாடகராக நிறைய முத்தான பாடல்களை பாடியுள்ளாரே. கருத்துக்கு நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  23. @கோமதி அரசு,
    பதிவையும் பாடல்களையும் ரசித்தமைக்கு நன்றி கோமதியம்மா.

    ReplyDelete
  24. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  25. T.V.ராதாகிருஷ்ணன் & Kanchana Radhakrishnan,
    பதிவை ரசித்தமைக்கு இருவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  26. நீங்கள் ஏ.எம். ராஜாவின் பாடல்களை தொகுத்திருப்பது ஆகாயத்தில் பறந்து செல்லும் கொக்கு கூட்டம் போல ரம்யமாக இருக்கிறது.. இந்த காலப்பாடகர்கள் வாழ்க்கையில் எந்த உணர்ச்சிகளையும் கண்டு அனுபவிக்காமல் அதன் அருமையும் தெரியாமல் வெற்றறு கூச்சலையே பதிவுசெய்கிறர்கள்.. என்னத்த சொல்ல உச்சத்தில் இருந்த தமிழ்த்திரைப்பாடல் இப்படி குப்பைத்தொட்டியில் அதன் விதியின் என்று நிணைக்கிறேன்.

    ReplyDelete
  27. அருமையான தெரிவுகள் நன்றி

    ReplyDelete
  28. வழக்கம் போல் உங்கள் இந்த தொகுப்பும் அருமை.

    ReplyDelete
  29. @raja,
    /நீங்கள் ஏ.எம். ராஜாவின் பாடல்களை தொகுத்திருப்பது ஆகாயத்தில் பறந்து செல்லும் கொக்கு கூட்டம் போல ரம்யமாக இருக்கிறது..//

    அழகா சொல்லியிருக்கீங்க. பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி ராஜா.

    ReplyDelete
  30. @asiya omar,
    பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி ஆசியாம்மா.

    ReplyDelete
  31. பதிவு மிக அருமை!

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர் ஏ.எம்.ராஜாவைப்பற்றி இங்கே படிப்பது மகிழ்வாக இருக்கிறது! அவர் குரலில் வந்த‌ அத்தனை பாடல்களும் இனிமை! இசையமைப்பாளராக 'தேன் நிலவு' படத்தில் அவர் மிகவும் புகழ் பெற்றார். அவருக்கும் ஜிக்கிக்கும் திருமணம் ஆனபோது இலங்கை வானொலி நிலையத்தில் அன்று முழுவதும் அவர்கள் பாடின பாடல்களை ஒலிபரப்பியதாய் என் சகோதரி எப்போதும் சொல்லுவார். பல ஆண்டுகளுக்குப்பிற‌கு கூட 'புகுந்த வீடு' என்ற 'லக்ஷ்மி, ஏவி.எம்.ராஜன் நடித்த படத்தில் ' செந்தாமரையே ' என்ற பாடலை பாடியிருக்கிறார்கள்.
    அவரின் மரண‌ம்கூட எதிர்பாராத ரயில் விபத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்து பார்ப்போர் ம‌னம் பதற நிக‌ழ்ந்தது ஒரு பெரிய சோகம்.அவர் பாடிய, மிகவும் புகழெய்திய, எனக்கு மிகவும் பிடித்த பாடலை நீங்கள் விட்டு விட்டீர்கள்.
    அது
    " மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!"

    மற்றும் விட்டுப்போன பாடல்களில்கூட சில அருமையான பாடகள் இருக்கின்றன!
    " சிற்பி செதுக்காத பொற்சிலையே"!
    " கலையே உன் விழிகூட கவி பாடுமே?"
    " இதய வானின் உதய நிலவே"
    " பழகும் தமிழே பார்த்திபன் மகனே"

    ReplyDelete
  32. @மனோ சாமிநாதன்,

    //எனக்கு மிகவும் பிடித்த பாடலை நீங்கள் விட்டு விட்டீர்கள்.
    அது
    " மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!" //

    உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை இப்பொழுது இணைத்து விட்டேன் மனோம்மா.

    //மற்றும் விட்டுப்போன பாடல்களில்கூட சில அருமையான பாடகள் இருக்கின்றன!
    " சிற்பி செதுக்காத பொற்சிலையே"!
    " கலையே உன் விழிகூட கவி பாடுமே?"
    " இதய வானின் உதய நிலவே"
    " பழகும் தமிழே பார்த்திபன் மகனே" //

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அருமையான பாடல்கள் போல் இன்னும் நிறைய விடுபட்டுவிட்டன. பதிவை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி மனோம்மா.

    ReplyDelete
  33. ' மயக்கும் மாலை பொழுதே' பாடலை இணைத்ததற்கு அன்பு நன்றி புவனேஸ்வரி! மறுபடியும் ஒரு முறை ரசித்துக் கேட்டேன்!

    ReplyDelete
  34. ரொம்ப சந்தோஷம் மனோம்மா. நன்றி.

    ReplyDelete
  35. உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருக்கலாம். ஒரு முறை பார்வையிடுங்களேன்.
    asokarajanandaraj.blogspot.com

    ReplyDelete
  36. @கிணற்றுத் தவளை,
    வருகைக்கு நன்றி. அவசியம் பார்க்கிறேன்.

    ReplyDelete
  37. அருமையான பாடகர். 'பழகத் தெரிய வேண்டும்' எனக்குப் பிடித்த பல பாடல்களுள் ஒன்று. 'கையும் கையும்' பாட்டை ரசித்துப் பாடியிருக்கிறார் என்று கேட்கும் போதெல்லாம் தோன்றும். அடிக்கடி கேட்க விரும்பும் இன்னொரு பாடல்: கொடுத்துப் பார் பார். 'கன்னத்தில் ஏப்பில் வந்து' என்ற இடத்தில் கொஞ்சுவார்.

    சரி, நீங்களும் இப்படி பின்றீங்களே?
    >>>தேனீ பூவிலிருந்து தேனை எடுத்து கூட்டில் சேர்க்காமல் நேராக நம் கையிலேயே கொடுத்தது போன்ற தித்திப்பான உணர்வு.

    ReplyDelete
  38. @அப்பாதுரை,
    சில விஷயங்கள் எழுதும்போது அதுபாட்டுக்கு ஒரு ஃப்ளோல வந்துடும். அது மாதிரி தான் இது. குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி. அருமையான பாடல்களை குறிப்பிட்டு சொல்லியிருக்கீங்க. A.M.ராஜா அவர்களை பற்றி இன்னும் நிறைய பதிவுகள் போடலாம். அப்பொழுது இந்த பாடல்களையும் சேர்த்துடறேன்.

    ReplyDelete
  39. கேட்கும் செவியனைத்தும் தேனை அள்ளி தெளிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் ஏ.எம்.ராஜா அவர்கள்...

    பல இனிமையான பாடல்களை பாடியவர்... எனக்கு இவரின் குரல் மிகவும் பிடிக்கும்...

    ஸோ சாஃப்ட், பட் ஸ்வீட் வாய்ஸ் இவருக்கு....

    நல்ல கலெக்‌ஷன் புவனா மேடம்...

    ReplyDelete
  40. @R.Gopi,
    ஏ.எம்.ராஜா அவர்களைப் பற்றி அழகா சொல்லியிருக்கீங்க. பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  41. நன்றி பிரஷா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_04.html

    ReplyDelete
  43. @அமைதிச்சாரல்,
    ரொம்ப சந்தோஷம்ங்க. வித்தியாசமா அறிமுகப்படுத்தி இருக்கீங்க. மிக்க நன்றி.

    ReplyDelete
  44. வணக்கம்
    இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_25.html?showComment=1387932780339#c1639543455998475651

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  45. http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_25.html
    இன்றைய வலைச்சரத்தில்.
    புவனா நலமா?

    ReplyDelete